Nandagopal Rajan
கொரோனா ஊரடங்கு காலத்திலும், ஆப்பிள் நிறுவனம் வளர்ச்சியை கண்டுள்ளது. 2020ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் வளர்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது இது 11 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போன்கள் வர்த்தகத்தினாலேயே, இந்த காலாண்டில் வளர்ச்சி அடைந்துள்ளதாக கேனாலிஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகமே முடங்கிக்கிடந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் அதன் புதுவரவான ஐபோன் எஸ்இ போனை அறிமுகப்படுத்தி மற்றவர்களை தங்கள் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்திருந்தது. இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும், சீனா போன் வளர்ந்த சந்தைகளில், ஆப்பிள் நிறுவனம், தங்களது குறைந்த விலை போனை கிடைக்கும்படி செய்தது. கோவிட் 19 தொற்று காலத்தில் தொலைதொடர்பு மட்டுமின்றி பொழுதை கழிக்கவும் அனைவருக்கும் போன் தேவைப்பட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம், இந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி விலைகுறைந்த ஐபோனை அறிமுகப்படுத்தி வெற்றியும் கண்டது. சீனாவில், ஆப்பிள் ஐபோன் எஸ்இ மிகுந்த வரவேற்பு ஏற்பட்டதையடுத்து, சீன பங்குச்சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விகிதம் 35 சதவீதம் அளவிற்கு அதிகரித்தது.
2020ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், எந்தவொரு புதிய ஐபோனையும் அறிமுகப்படுத்தவில்லை. இதன்மூலம், 2019ம் ஆண்டின் இந்த காலாண்டை ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் 11 சதவீத வளர்ச்சிக்கு ஐபோன் எஸ்இ போனின் வரவு மற்றும் அதற்கு சர்வதேச மக்களிடையே கிடைத்த அமோக வரவேற்பே முழு முக்கிய காரணம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் முன்னணி நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை துவங்க உள்ள நிலையில், வரும் காலங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பா்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் அனைத்து முன்னணி நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் வசதியை அளித்திருப்பதால், ஆப்பிள் நிறுவனத்தின் சேவைகளான இசை, வீடியோ, கிளவுட் சர்வீசஸ் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல், ஆப்பிள் நியூஸ் மற்றும் ஆப்பிள் டிவி பிளஸ் பிரிவுகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. ஆப்பிள் நிறுவன பொருட்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளபோதிலும், அதில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய கஸ்டமர் கேர்களை தொடர்புகொண்டால், போதிய அளவிற்கு ரெஸ்பான்ஸ் இல்லை என்ற குற்றச்சாட்டு பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதி, ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்பியூட்டர்கள், ஐபேட்களின் விற்பனை சீனா உள்ளிட்ட நாடுகளில் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், ஐபேட்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில், ஐபேட்கள், சிறந்த கல்வி சாதனமாக பரிந்துரைக்கப்பட்டு வரும்நிலையில், ஆப்பிள் நிறுவனம், இதில் கல்விச்சேவையையும் துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் ஐபோன் பயனாளர்கள் நிதிப்பிரச்சினை காரணமாக தங்கள் போன்களை அப்கிரேட் பண்ணாத நிலையில், தற்போது அறிமுகம் ஆகியுள்ள ஐபோன் எஸ்இ, அவர்கள் தங்கள் ஐபோன்களை அப்கிரேட் செய்துகொள்ள சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த கொரோனா ஊரடங்கு காலத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆப்பிள் நிறுவனம், தங்களின் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தியுள்ளது மட்டுமல்லாது, வீட்டிலேயே முடங்கியிருக்கும் மக்களுக்கு ஆன்லைன் சேனல்களை வழங்கியதன் மூலம் ஏற்றம் அடைந்துள்ளதாக கேனாலிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி வின்சென்ட் தில்கி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - Explained: How Apple grew in the middle of a pandemic
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.