இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அபரிமிதமாக பரவிவரும் நிலையில், நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை, ஜூலை 6ம் தேதி, 1 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இது உண்மையிலேயே அதிக அளவு தான், ஆனால் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இது மிகவும் குறைவு ஆகும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு, சீனாவில் முதலில் தோன்றி இருந்தாலும், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85 ஆயிரமாகவே, தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆனால், அங்கு இதுவரை 90 மில்லியன் ( 9 கோடி) சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வேர்ல்டோமீட்டர் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே இணையதளத்தில், அமெரிக்காவில் இதுவரை 38 மில்லியன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா 21 மில்லியன் சோதனைகளும், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கூட, கொரோனா சோதனையில், இந்தியாவைவிட முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைவிட, மற்ற சர்வதேச நாடுகளில் 2 மாதங்களுக்கு முன்னரே, கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அங்கு சோதனைகள் முன்கூட்டியே துவங்கப்பட்டிருந்தன. இந்தியாவில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டபிறகே, அதாவது மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் தான், இங்கு கொரோனா சோதனைகளே துவக்கப்பட்டிருந்தது. முதன்முதலில், புனேயில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் வைராலஜியில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய அளவில், 1,100க்கும் மேற்பட்ட ஆய்வகங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நாள் ஒன்றுக்கு 2 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. துவக்க காலத்தில், நாள் ஒன்றுக்கு சில ஆயிரங்கள் வரை மட்டுமே சோதனைகள் செய்யப்பட்டு வந்தன.
இந்தியா, அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்பதால், இங்கு நடைபெறும் கொரோனா சோதனைகளின் அளவு மிக மிகக்குறைவானதாகவே உள்ளது. அதாவது 1 மில்லியன் ( 10 லட்சம்) மக்கள்தொகையில், 7,400 பேருக்கு மட்டுமே இங்கு இதுவரை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இதன் எண்ணிக்கை 1,15,449 என்ற அளவிலும், சீனாவில் 62,814 என்ற அளவிலும் உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இதுவரை மிகக்குறைந்த அளவிலேயே கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்படும்பட்சத்தில், அவருக்கு முதலில் ஒரு சோதனை, பின்னர் ஒரு சோதனை, தொற்று குணமாகி, அவர் வீடு திரும்புவதற்கு முன் ஒரு சோதனை என ஒருவருக்கே, பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் நடத்தப்படும் மொத்த கொரோனா சோதனைகளில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மட்டும் 50 சதவீத சோதனைகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரபிரதேச மாநிலங்களில் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்களும் 10 லட்சம் சோதனைகள் என்ற அளவை நெருங்கியுள்ளன.
தெலுங்கானா, மத்திய பிரேதசம், குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா சோதனைகள் மேற்கொள்வதில் பின்தங்கியுள்ளன.
இந்தியாவில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, ஜூலை 6ம் தேதி நிலவரப்படி, 7 லட்சம் என்ற அளவை எட்டியுள்ளன. சிலநாட்களாக தேசிய அளவில், புதிய தொற்று பாதிப்பு அளவு கணிசமாக குறைந்துள்ளது. ஜூலை 6ம் தேதி புதிதாக 22,250 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களிலேயே அதிகளவில் பாதிப்பு தொடர்ந்து வருகிறது.
தலைநகர் டெல்லியில், சமீபகாலமாக தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், ஜூலை 6ம் தேதி புதிதாக 1,379 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் சமீபகாலமாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் புதிதாக 1,843 பேருக்கும், தெலுங்கானாவில், 1,831 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.