Amitabh Sinha
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ள நகரங்களின் பட்டியலில், மும்பை (204) முதலிடத்திலும், குஜராத் மாநிலம் அகமதாபாத் (105) இரண்டாமிடத்திலும் உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தலைநகர் டெல்லியில், ஒரேநாளில் (ஏப்ரல் 26ம் தேதி) புதிதாக 293 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2918 ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், நேற்று (ஏப்ரல் 26) ஒரேநாளில் 19 பேர் மரணமடைந்ததை தொடர்ந்து அங்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டியுள்ளது.
கொரோனாவில் மரணம் அடைந்தோர் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை 204 பேருடன் முதலிடத்திலும், குஜராத் மாநிலம் அகமதாபாத் 105 பேருடன் இரண்டாமிடத்திலும் உள்ளது. இங்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 60 சதவீதத்திற்கும் மேல் மரணங்கள் நிகழ்ந்துள்ளது. ஏப்ரல் 20ம் தேதி, 67 பேர் மட்டும் மரணமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மும்பையிலும் மரணங்கள் கணிசமான அளவிற்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அகமதாபாத்தில், 2181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 41 பேர் மரணமடைந்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலத்தில் 103 பேர் மரணமடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3300யை தாண்டியுள்ளது. இது கடந்த 12 நாட்களில் மட்டுமே நான்கரை மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில், தொற்று மிக தாமதமாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மேலும் போதிய பரிசோதனைகள் உடனடியாக மேற்கொள்ளப்படாததே, இந்தளவிற்கு பாதிப்பு அதிகரித்ததற்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் இதுவரை 51,091 மாதிரிகளே பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவை ஒப்பிடும்போது இது பாதியளவே ஆகும். மகாராஷ்டிராவில், 1.16 லட்சத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்குப்படுத்தப்பட்டுள்ளன. குஜராத்தை விட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளபோதிலும், அங்கு 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 26ம் தேதி மட்டும் புதிதாக 1682 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், இந்தியாவில், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 27,844 ஆக அதிகரித்துள்ளது. இந்த நாளில் மட்டும் 50 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று பரவ துவங்கியதில் இருந்து இதுவரை அதிக மரணங்கள் நிகழ்ந்த நாளாக ஏப்ரல் 26 அமைந்துள்ளது.
நாட்டில் உள்ள மொத்த கொரோனா பாதிப்பு உள்ளவர்களில் 30 சதவீதத்தினர் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் உள்ளனர். ஏப்ரல் 26ம் தேதி மட்டும் மகாராஷ்டிராவில் புதிதாக 440 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 8,068 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் புதிதாக 165 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 2,185 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க