வேகமாக நடைபெற்று வரும் மருந்தியக்கப் பரிசோதனை குறித்த செய்திகள், பெரிய மருந்து நிறுவனங்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் நம்பிக்கையளிக்கும் வார்த்தைகள் யாவும், கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசிகள் சில மாதங்களில் வெகுஜனப் பயன்பாட்டிற்குத் தயாராகும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது. இருப்பினும், கொரோனா தடுப்பூசி தொடர்பான யதார்த்த உண்மையை உலக சுகாதார அமைப்பு மீண்டும் தெளிவுபடுத்த முயன்றுள்ளது.
மெய்நிகர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், "கொரோனா வைரசில் இருந்து மனிதகுலத்தைப் பாதுகாக்கும் அந்த மந்திர தடுப்பூசி இன்னும் இன்னும் தயாராகவில்லை. பல தடுப்பூசிகள் தற்போது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை எட்டியுள்ளன. மேலும், மக்களுக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்படாமல் தடுக்கும் பல பயனுள்ள தடுப்பூசிகள் உருவாக்கப்படும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம். இருப்பினும், தற்போது கொரோனனவுக்கு மாயாஜாலத் தீர்வு என்று இல்லை, தீர்வுகள் எப்போதும் மாயஜாலமாக இருக்கப்போவதில்லை என்று டெட்ரோஸ் (However, there is no silver bullet at the moment, and there might never be) என்று கூறினார்.
"கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படக்கூடிய ஒரு முழுமையான தடுப்பூசியை நாம் உருவாக்க முடியாமலும் போகலாம், சில மாதங்களுக்கு மட்டுமே வைரஸில் இருந்து பாதுக்காப்பு தரக்கூடுய தடுப்பூசிகளை மட்டுமே நாம் கண்டறியலாம். எவ்வாறாயினும், தடுப்பூசிகளுக்கான மனிதப் பரிசோதனை நடத்து முடிவதற்கு முன்பு நாம் எதையும் உறுதியாக கூற முடியாது" என்று தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசிப் பந்தயத்தில், 140க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளின் தயாரிப்பு பல்வேறு கட்டங்களில் உள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெகுஜனப் பயன்பாட்டிற்குத் தயாராகும் என்று பன்னாட்டு மருந்து மற்றும் உயிர் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோயியல் நிபுணரான அந்தோனி ஃபாசி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு தடுப்பூசி நடைமுறைக்கு வரும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான உற்சாகத்தை, உலக சுகாதார அமைப்பு அடக்கி வாசிப்பது இது முதல் முறையல்ல. தடுப்பூசி கண்டுபிடிப்பில் உள்ள உள்ளார்ந்த நிச்சயமற்ற தன்மைகளைப் குறித்தும் இது கடந்த காலங்களில் கூறியிருந்தது. மேலும், கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கும் நமது முயற்சி வெற்றிபெறாமல் போவதற்கான சாத்தியக் கூறுகளையும் மறுக்க முடியாது என்றும் தெரிவித்தது.
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து:
இதற்கிடையே, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் – ஆஸ்ட்ரா ஜெனிக்கா கொரோனா தடுப்பு மருந்தை (கோவிஷீல்ட்) இந்தியாவில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டங்களில் மருத்துவமனை சார்ந்து பரிசோதித்துப் பார்க்க பூனாவில் உள்ள சீரம் ஆராய்ச்சி நிலையத்திற்கு இந்தியாவின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் (டி.சி.ஜிஐ) அனுமதி அளித்தார்.
இந்தியாவின் பல்வேறு இடங்களில், 1,600 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி பரிசோதிக்க சீரம் ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மனிதப் பரிசோதனைகளில் 10 முதல் 15 மருத்துவமனைகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கோரக்பூரில் உள்ள ஐ.சி.எம்.ஆரின் பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம், பாட்னாவில் உள்ள ராஜேந்திர மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் ஆகியவையும் சோதனைகளின் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
நார்த் வேல்ஸில் அமைந்துள்ள துணை நிறுவனத்தின் உற்பத்தி வசதி மூலம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான வோக்ஹார்ட் இங்கிலாந்து அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசிப் பந்தயத்தில் இதுவரை நடந்தது என்ன?
160க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளின் தயாரிப்பு பல்வேறு கட்டங்களில் உள்ளன
23 தடுப்பூசிகள் மனிதப் பரிசோதனைகளில் உட்படுத்தப்பட்டுள்ளது
ஆறு தடுப்பூசிகள் இறுதி (3ம் கட்டம்) கட்டத்தை எட்டியுள்ளன,
இந்தியாவில், 16 தடுப்பு மருந்துகளின் மாதிரிகள் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. பிசிஜி தடுப்பு மருந்து, சோதனையின் மூன்றாவது கட்டத்தில் உள்ளது. ஜைடஸ் காடிலா டிஎன்ஏ தடுப்பு மருந்து முதல் கட்டத்தின் இரண்டாவது சோதனையில் உள்ளது. நான்கு தடுப்பு மருந்துகள் மருத்துவமுறைக்கு முந்தைய ஆய்வில் கடைசிக் கட்டத்தில் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.