கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை இந்தாண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (USFDA), தடுப்பு மருந்துக்கான 3 கட்ட சோதனைகளை, அவசரகால நிகழ்வாக அங்கீகரித்து விரைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இலண்டனில், தி பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த FDA ஆணையர் டாக்டர் ஸ்டீபன் ஹான் கூறியதாவது, தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ள நிறுவனங்கள், 3ம்கட்ட சோதனை முடிவடைவதற்கு முன்னரே, ஒப்புதல் பெற விண்ணப்பித்துள்ளனர். சில நிறுவனங்கள் இதற்கு முன்னரே விண்ணப்பித்து விட்டன. அவர்களின் கோரிக்கைகளை FDA பரிசீலித்து வருகிறது. 3ம் கட்ட சோதனை துவங்குவதற்கு முன்னரே விண்ணப்பித்திருந்த நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பு மருந்து ஒப்புதலுக்கான விண்ணப்ப படிவத்தில் போதுமான தகவல்கள் நிரப்பப்பட்டிருப்பின் மட்டுமே அது ஏற்கப்படும். முழுமையான விபரங்கள் இல்லாத படிவங்கள் அந்நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்துள்ள நிறுவனங்கள் குறித்த தேர்வு அறிவியல் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, அதில் அரசியல் பின்புலம் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.
தடுப்பு மருந்து 3 கட்ட சோதனைகள் முடிவடைவதற்கு முன்னரே, அவசரகால நடவடிக்கையாக சிலருக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக மீண்டும் டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசியல்ரீதியாக அழுத்தம் கொடுத்து வருகிறார்.
கடந்த வாரம், FDA அமைப்பை தீவிரமாக தாக்கிப்பேசிய அதிபர் டிரம்ப், அந்த அமைப்பு வேண்டுமென்றே, கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளிப்பதை மெதுவாக நிகழ்த்தி வருகிறது. தான் மீண்டும் அதிபர் தேர்தல் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
கொரோனா தடுப்பு மருந்து ஒப்புதல் நிகழ்வில் அரசியல் தலையீடு இருப்பதாக யாராவது ஒரு FDA அமைப்பின் அதிகாரி சொன்னால், தான் உடனடியாக பதவிவிலகுவதாக FDA அமைப்பின் உயிரியல் மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் பீட்டர் மார்க்ஸ் தெரிவித்துள்ளார். மருந்து, ஒப்புதல் நடைமுறைகள் சரியான திசையிலேயே சென்று கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பாளர்கள் அதற்கென காலநிர்ணயத்தை குறித்து அதன்படி செயல்பட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டின் முற்பகுதிக்குள் தடுப்பு மருந்தை வெளியிட அவர்கள் திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
ரஷ்யா மற்றும் சீனா, ஒரு மருந்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர். அந்த மருந்து, 3ம் கட்ட சோதனையை நிறைவு செய்ததா என்பதுகூட யாருக்கும் தெரியாது. ஆனால், நாங்கள் முறையான புரோட்டகாலை பின்பற்றி வருகிறோம். ஆனால் எங்கள் நாட்டின் மீதுதான் அனைவரும் பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக பீட்டர் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அவசர பயன்பாட்டிற்காக 3வது மருந்துக்கு சீனா ஒப்புதல்
சீனாவின் ஷினோவாக் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை அவசர கால பயன்பாட்டிற்காக பயன்படுத்த சீனா ஒப்புதல் வழங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் ஒருசாரார் மட்டும் பயன்படுத்தும் வகையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 3வது தடுப்பு மருந்து இது ஆகும். இந்த மருந்திற்கான சோதனைகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா கடந்த வாரம் ஷினோபார்ம் என்ற நிறுவனம் கண்டுபிடித்த மருந்துக்கு ஒப்புதல் வழங்கியிருந்தது. அந்த மருந்திற்கான 3ம் கட்ட சோதனை தற்போதுதான் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அதற்குமுன்ந கேன்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனம், ராணுவ மருத்துவ அறிவியல் மையத்துடன் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்து ஒருசாராரின் பயன்பாட்டிற்காக, ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. தற்போது வரை கொரோனாவுக்கு தடுப்பாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 33 மருந்துகளில், 8 தடுப்பு மருந்துகள் சீனா கண்டுபிடித்துள்ளது ஆகும்.
கொரோனா தடுப்பு மருந்து : சீரம் இன்ஸ்ட்டியூட்டில் வங்கதேசம் முதலீடு
வங்கதேச நாட்டின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான பெக்ஸிம்கோ பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம், இந்தியாவின் புனே நகரத்தில் உள்ள சீரம் இன்ஸ்ட்டியூட் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்தை, வங்கதேசத்தினரும் பெறும்பொருட்டு, ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சீரம் நிறுவனம், சர்வதேச அளவில் தடுப்பு மருந்துகளை அதிகளவில் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், 2 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மற்ற நிறுவனங்கள் ஒப்புதல் பெற்ற மருந்துகள் இங்கு அதிகளவில் தயாரிக்கப்பட்டு இந்தியா மட்டுமல்லாது நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் கொண்ட நாட்டு மக்களுக்கு வழங்கப்பட உள்ளன.
வங்கேதேச நாட்டவர்களும், சீரம் நிறுவனம் தயாரிக்கும் மருந்தை பெற, பெக்ஸிம்கோ நிறுவனம் அட்வான்ஸ் பேமெண்ட் முறையில் முதலீடு செய்துள்ளது.
சீனாவின் ஷினோவாக் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை, வங்கேதேச மக்களுக்கு சோதனை செய்ய முன்னதாக வங்கதேசம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சோதனையில் இதுவரை
175 பேருக்கு சோதனைக்கு முந்தைய நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன
இவர்களில் 33 பேர் சோதனைக்குட்பட்டுத்தப்பட்டுள்ளனர்
3ம் கட்ட சோதனைக்காக 8 பேர் இறுதிக்கட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இந்த சோதனைக்கு குறைந்தது 8 பேர் உட்படுத்தப்பட உள்ளனர்.
(Source: WHO Coronavirus vaccine landscape of August 28, 2020)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook
Web Title:Coronavirus vaccine usfda usa donald trump approval corona vaccine