ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை (OFB) தொழில் நிறுவனமாக மாற்றம் செய்வதற்கான மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள 41 ஆலை தொழிற்சாலைகள் தொழிலாளர்கள் கூட்டமைப்புகள்/ சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதில் ஒரு முக்கிய அம்சமாக, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (ஆர்எஸ்எஸ்), இடதுசாரி, காங்கிரஸ் ஆகிய மூன்று அமைப்புகளை சேர்ந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளன.
இடதுசாரி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனம் (எய்ட்இஎஃப்), தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் இந்திய தேசிய பாதுகாப்பு தொழிலாளர் கூட்டமைப்பு (ஐ.என்.டி.டபிள்யூ.எஃப்), ஆர்.எஸ்.எஸ் தொழிலாளர்கள் ஒன்றியமான பாரதிய மஸ்தூர் சங்கத்தின் (பி.எம்.எஸ்) ஒரு பகுதியாக இருக்கும் பாரதிய பிரதிராக்ஷா மஜ்தூர் சங்கம் (பிபிஎம்எஸ்) ஆகிய மூன்று பாதுகாப்பு தொழிலாளர்கள் ஒன்றியங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளன.
2017ம் ஆண்டு செப்டம்பரில் கொல்கத்தாவில் ஆயுதத் தொழிற்சாலை வாரிய தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தின் போது, இந்த மூன்று தொழிற்சங்கங்கள் ஒன்றிணைவதற்கான செயல்முறை தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள 41 ஆயுதத் தொழிற்சாலைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரிவுகளில் பணியாற்றும் 82,000 தொழிலாளர்களில், 85 சதவீதம் பேரை இந்த மூன்று தொழிற்சங்கங்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றன.
இந்த மூன்று தொழிற்சங்கங்களும்,பாதுகாப்பு உற்பத்தி மற்றும் தேசிய ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு கொள்கைக்கு எதிராக ஒன்றாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளன.
2019 மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னர், தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறை தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளையும் இந்த மூன்று கூட்டமைப்புகளின் தலைவர்கள் ஒன்றாக சந்தித்து ஆதரவு கோரினர். இருப்பினும், எந்தவொரு அரசியல் கட்சிகளிடமிருந்து உறுதியான ஆதரவு கிடைக்காததால், ஒருங்கிணைந்த போராட்டத்தைத் தொடர முடிவு செய்தனர். மூன்று கூட்டமைப்புகளும் கடந்த செப்டம்பரில், ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை நிறுவனமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இந்த ஆண்டு, வேலைநிறுத்தம் திங்கள்கிழமை முதல் திட்டமிடப்பட்டது, ஆனால், பாதுக்காப்பு அமைச்சகம் உடனான நல்லிணக்க பேச்சுவார்த்தைகள் நிலுவையில் இருப்பதால் போராட்டாம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நிலக்கரித் துறையில் தனியார் அடியெடுத்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் சிந்தாங்களைக் கொண்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட முன்வந்துள்ளன.
ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை நிறுவனமாக மாற்றுவது என்றால் என்ன?
ஆயுதத் தொழிற்சாலைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஒரு முதன்மை அமைப்பாக ஆயுதத் தொழிற்சாலை வாரியம் விளங்குகிறது. இது, தற்போது பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை அலுவலகமாக உள்ளது. கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த வாரியம், 200 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
ஆயுதப்படைகள் மட்டுமல்ல, துணை ராணுவம் மற்றும் காவல்துறை படைகளுக்கு தேவைப்படும் ஆயுதங்கள், பல்வேறு கருவிகள், அமைப்புகள் ஆகியவற்றை தயாரிப்பதில் ஆயுதத் தொழிற்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் உற்பத்திகளில், ஏவுகணை அமைப்புகளுக்கான வெடிபொருட்கள், ரசாயனங்கள், இராணுவ வாகனங்கள், கவச வாகனங்கள், ஆப்டிகல் சாதனங்கள், பாராசூட்டுகள், துணை உபகரணங்கள், துருப்பு ஆடைகள் மற்றும் பொது அங்காடி பொருட்கள் ஆகியவையும் அடங்கும்.
நிறுவனமயமாக்கல் மூலம், 2013 ஆம் ஆண்டு நிறுவன சட்டத்தின் கீழ், ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை 100 சதவீதம் அரசே நடத்தும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொழில் நிறுவனமாக மாற்றப்படும்.
2000- 2015 வருடங்களுக்கு இடையே, பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் தொடர்பாக மத்திய அரசு நியமித்த மூன்று பரிசீலனைக் குழுவும், நிறுவனமாக மாற்றுவதை பரிந்துரைத்திருந்தன.
நரேந்திர மோடி தலைமையிலான இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களில் செயல்படுத்தப்படவுள்ள 167 ‘லட்சிய சிந்தனைகளில்’ ஒன்றாக நிருவனமயமாக்கல் பட்டியலிடப்பட்டது. ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் நான்காவது பொருளாதார அறிவிப்பில், ஆயுத விநியோகத்தில் தன்னாட்சி, நம்பகத்தன்மை மற்றும் திறன் மேம்பாட்டை அதிகரிக்க ஆயுதத் தொழிற்சாலை வாரியம் தொழில் நிறுவனமாக மாற்றப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிறுவனமயமாக்கும் முயற்சி இறுதியில் தனியார்மயமாக்கலுக்கு வழிவகுக்கும் என்று தொழிலாளர்கள் அச்சப்படுகின்றனர். தொழில் நிறுவனமாக மாற்றுவதால், தொழிலாளர்களின் கூலி, சம்பளம், ஓய்வூதியப் பலன்கள், சுகாதார வசதிகள் மற்றும் பிற சேவை நலனை/பலன்களைப் பாதுகாக்க முடியாமல் போகும் என்ற அச்சமும் அவர்களிடத்தில் காணப்படுகிறது.
பாதுக்காப்பு அமைச்சகத்தின் பதில் என்ன?
மத்திய அரசின் முடிவுக்கு எதிராக நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக, கடந்த ஜூன் மாதம் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த வாக்கெடுப்பை நடத்தின. இதைத் தொடர்ந்து, வரும் க்டோபர் 12 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்பான முடிவு மூன்று கூட்டமைப்புகளால் அறிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறை, முன்மொழியப்பட்ட நிறுவனமயமாக்கலை செயல்படுத்த செப்டம்பர் 10 அன்று, புகழ்பெற்ற ஆலோசனை நிறுவனமான கே.பி.எம்.ஜி- ஐ நியமித்தது.
செப்டம்பர் 11 ம் தேதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சட்டம் மற்றும் நீதி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார், பணியாளர்கள், பொதுமக்கள் துறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அதிகாரம் பொருந்திய அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது. பெருநிறுவனமாக மாறும்போது அளிக்கப்பட வேண்டிய ஆதரவு, பணியாளர்களின் நலன் உள்ளிட்ட ஒட்டுமொத்த அம்சங்களையும் இந்த குழு கருத்தில் கொண்டு கண்காணித்து, அமைச்சர்கள் குழு வழிகாட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் 1 ம் தேதி, மூன்று பெரிய தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த அறிவிப்புக்கு பதிலளித்த அமைச்சகம்," தலைமை தொழிலாளர் நல ஆணையர் (மத்திய) மத்தியஸ்தம் செய்து வரும் சூழலில் வேலைநிறுத்த அறிவிப்பு செல்லாத ஒன்று எனவும் சட்டவிரோதமானது" எனவும் தெரிவித்தார்.
அக்டோபர் 9 ம் தேதி, பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மூன்று கூட்டமைப்புகளுடன் மேற்கொண்ட பேச்சுவாரத்தைக்குப் பிறகு, காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தள்ளிவைப்பதாக கூட்டமைப்புகள் தெரிவித்தன.
மேலும், மத்தியஸ்தம் முடியும் வரை பெருநிறுவனமாக்குதல் தொடர்பான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது என்று அமைச்சகம் வாக்குறுதி அளித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.