Cyclone Fani Name Fact Checking : வங்கக்கடலில் உருவாகிய ஃபனி புயல் தற்போது ஒடிசாவில் கரையைக் கடந்து கொண்டு இருக்கிறது. போன வருடம் கஜா, தித்திலி புயல்கள், அதற்கு முந்தைய வருடம் ஒக்கி, 2014ம் ஆண்டில் ஹுதூத் என்று ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு பெயர். ஆனால் எப்படி இந்த புயல்களுக்கு பெயர் வைக்கின்றார்கள்.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் அமைந்திருக்கும் எட்டு நாடுகளின் கூட்டு முயற்சியில் WMO / ESCAP என்ற அமைப்பு 2004ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அந்த அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், வங்கதேசம், இலங்கை, மற்றும் தாய்லாந்து நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
Cyclone Fani Name Fact Checking
இந்த நாடுகள் ஏற்கனவே 64 (8 x 8) பெயர்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து வைத்துள்ளன. சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டின் பரிந்துரையை புயல்களுக்குஈ வைப்பது வழக்கம். ஃபனி புயலுக்கு அடுத்தபடியாக உருவாகும் 7 புயல்களுக்கும் ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ளது.
8 நாடுகளுக்கு எட்டு வரிசை என மொத்தம் 64 கட்டங்களைக் கொண்ட பட்டியலில் முதல் காலமில் இருக்கும் முதல் ரோவில் ஓனில் என்ற பெயர் வங்கதேசத்தால் பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரிசையாக இருக்கும் 7 பெயர்களும் முடிந்த நிலையில் அடுத்த இரண்டாவது காலமில் இருக்கும் பெயர்கள் பரிந்துரைக்கு வைக்கப்படும். ஃபனி புயலைத் தொடர்ந்து உருவாகும் புயலுக்கு வாயு என்று பெயரிடப்படும். இந்த பட்டியல் அம்ஃபன் என்ற பெயருடன் முடிவடைகிறது.
இந்த 64 பெயர்களும் முடிவடைந்த நிலையில் புதிய பெயர் பட்டியல்கள் பரிந்துரை செய்யப்படும். ஒருமுறை வெளியான பெயர்கள் மறுமுறை பரிந்துரை செய்யப்படாது. ஆனால் அட்லாண்டிக் மற்றும் கிழக்கு பசுபிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு மீண்டும் ஒரே பெயர்கள் பரிந்துரை செய்யப்படும். அதிக அளவு இழப்புகள், சேதங்களை அந்த புயல்கள் உருவாக்கியிருந்தால் நிச்சயம் அந்த பெயர்களை மறுபடியும் வைக்க மாட்டார்கள்.
பெயர்கள் வைப்பதற்கு காரணம் என்ன ?
எண்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான பெயர்கள் வைக்கப்பட்டால் எளிதில் மறந்துவிடவும், நினைவில் கொள்வதற்கு சிரமமாகவும் இருப்பதும் ஒரு முக்கிய காரணம். பெயர்கள் வைக்கப்பட்டால் ஊடகங்கள் வழியாக மக்களுக்கு சரியான செய்திகளை சேர்ப்பதற்கு எளிமையாகவும், எச்சரிக்கைகளை அறிவிப்பதற்கு வசதியாகவும் இருக்கும்.
ஒரு புயலுக்கு வைக்கப்படும் பெயர் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது என்பதை RSMC இணையத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
மக்களும் தங்களின் சொந்த பரிந்துரைகளை தெரிவிக்கலாம். அர்த்தமற்றவையாகவும், தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும் விதத்திலும் இருக்கும் பெயர்கள் எக்காரணம் கொண்டும் புயலுக்கு வைப்பதில்லை.