/indian-express-tamil/media/media_files/2025/06/25/emergency-lesson-2025-06-25-10-31-07.jpg)
இந்திய வரலாற்றில், ஜனவரி 25, 1975 முதல் மார்ச் 21, 1977 வரையிலான 21 மாத காலம், இந்திய குடியரசின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்திரா காந்தி தலைமையிலான அரசு, சிவில் உரிமைகளை இடைநிறுத்தி, பத்திரிகை சுதந்திரத்தை முடக்கி, பெருமளவிலான கைதுகளை மேற்கொண்டு, தேர்தல்களை ரத்து செய்து, ஆணைகளின் மூலம் ஆட்சி நடத்தியது. சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 25, 1975 அன்று விதிக்கப்பட்ட இந்த அவசர நிலை, இந்திய ஜனநாயகத்திற்கு அளித்த பாடங்கள் ஏராளம்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
வரலாற்று பின்னணி:
1971 இல் பெரும் தேர்தல் வெற்றியுடன் இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்தார். இருப்பினும், அவரது அரசு அடுத்தடுத்து பல நெருக்கடிகளால் ஆட்டம் கண்டது. 1971 இந்தியா-பாகிஸ்தான் போரின் செலவுகள், வறட்சி, மற்றும் 1973 எண்ணெய் நெருக்கடி ஆகியவை இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து, மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தின. ஊழல், நிர்வாக சீர்கேடு மற்றும் அரசின் அத்துமீறல்கள் மேலும் அதிருப்தியை விதைத்தன.
1974 பிப்ரவரியில், நவ்நிர்மாண் (புனரமைப்பு) மாணவர் இயக்கம், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக காங்கிரஸ் முதலமைச்சர் சிமன்பாய் படேலை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியது. இது பீகாரில் ஒரு மாணவர் இயக்கத்திற்கு ஊக்கமளித்தது. சோசலிஸ்டுகளும், வலதுசாரி அமைப்புகளும் ஒன்றிணைந்து 'சத்ரா சங்கர்ஷ் சமிதி'யை உருவாக்கின.
மகாத்மா காந்தியின் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் முக்கிய நபரும், காந்தியவாதியுமான ஜெயபிரகாஷ் நாராயண் (JP) இறுதியில் இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ஜூன் 5 அன்று பாட்னாவின் வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் முதன்முதலில் அவர் விடுத்த "சம்பூர்ண கிராந்தி (முழுப் புரட்சி)" என்ற அழைப்பு பீகாரை ஸ்தம்பிக்க வைத்தது.
முன்னதாக, 1974 மே மாதம், சோசலிசத் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் நடந்த ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் மூன்று வாரங்களுக்கு இந்திய ரயில்வேயை முடக்கியது.
1974 மற்றும் 1975 இன் ஆரம்பக் காலங்களில், ஜேபி இயக்கம் நாடு முழுவதும் எதிரொலித்தது. ஜேபி, சுதந்திரப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி செய்தது போல, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, இந்திரா காந்திக்கு எதிரான மக்கள் அதிருப்தியை ஒருமுகப்படுத்தினார்.
"சிம்மாசனத்தை காலி செய், மக்கள் வருகிறார்கள்" என்பது பேரணிகளில் ஜேபி விடுத்த கோஷமாக இருந்தது.
அவசர நிலை அறிவிப்பு:
1975, ஜூன் 12 அன்று, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா, இந்திராவை தேர்தல் முறைகேடுகளுக்காக குற்றவாளி என்று தீர்ப்பளித்து, ரேபரேலியில் இருந்து லோக்சபாவிற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்தார்.
அவரது ராஜினாமா கோரிக்கைகள் வலுப்பெற்ற நிலையில், ஜூன் 25 அன்று இரவு, குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது அவசர நிலை பிரகடனத்தில் கையெழுத்திட்டார். செய்தித்தாள் அலுவலகங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது, மேலும் ஜூன் 26 அன்று காலை 8 மணிக்கு அகில இந்திய வானொலியில் இந்திரா காந்தி ஆற்றிய உரை மூலம் மக்களுக்கு இந்த பிரகடனம் அறிவிக்கப்பட்டது.
மார்ச் 21, 1977 வரை நீடித்த அவசர நிலையில், இந்திரா காந்தியின் அரசு, அரசியலமைப்பின் சிறப்பு விதிகளை பயன்படுத்தி நாடு முழுவதும் பரவலான நிர்வாக மற்றும் சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தியது.
கூட்டாட்சி அமைப்பு, நடைமுறையில் ஒற்றையாட்சி அமைப்பாக மாற்றப்பட்டது. மாநில அரசுகள் இடைநிறுத்தப்படாவிட்டாலும், அவை மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன. நாடாளுமன்றம் மாநிலப் பட்டியலில் உள்ள விஷயங்கள் குறித்து சட்டங்களை இயற்றியது, மேலும் குடியரசுத் தலைவர், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன், ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நிதி ஆதாரங்கள் ஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பு விதிகளை மாற்றினார்.
ஜேபி உட்பட ஏறத்தாழ அனைத்து தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் 1.12 லட்சம் பேர் மிசா (MISA), கோஃபெபோசா (COFEPOSA) மற்றும் இந்திய பாதுகாப்பு சட்டம் (DISIR) போன்ற சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
எதிர்க்கட்சிகள் சிறையில் இருந்த நிலையில், நாடாளுமன்றம் தொடர்ச்சியான அரசியலமைப்பு திருத்தங்களை நிறைவேற்றியது. அதன்படி, 1976 இன் 42 வது திருத்தம், தேர்தல் மனுக்களை விசாரிக்கும் நீதிமன்றங்களின் உரிமையை பறித்தது. மாநில விஷயங்களில் ஒன்றியத்தின் அதிகாரம் அத்துமீறுவதற்கான அதிகாரத்தை விரிவுபடுத்தியது. அரசியலமைப்பை திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு வரம்பற்ற அதிகாரத்தை அளித்தது. மேலும், மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளை செயல்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களை நீதிமன்ற மறுஆய்வுக்கு அப்பாற்பட்டதாக்கியது.
அடிப்படை உரிமைகள், குறிப்பாக 19(1)(a) பிரிவின் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டன. செய்தித்தாள்கள், தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இன் குல்தீப் நய்யார் உட்பட 250 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' போன்ற சில பத்திரிகைகள் அவசர நிலையை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. மேலும், தணிக்கை செய்யப்பட்ட செய்திகளுக்கு பதிலாக பத்திரிகைகளில் வெற்று இடங்களை வெளியிட்டன. அந்த சூழலில், "நாம் தொடர்ந்து வெளியிட்டால், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஒரு காகிதம் என்று அழைக்கப்படலாம். ஆனால் ஒரு செய்தித்தாள் ஆக முடியாது" என்று நாளிதழின் உரிமையாளர் ராம்நாத் கோயங்கா ஒருமுறை கூறினார்.
இந்தியாவை பாதித்த பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதாகக் கூறி, இந்திராவின் மகன் சஞ்சய் காந்தி ஒரு "ஐந்து அம்ச திட்டத்தை" முன்வைத்தார். இதில் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் குடிசை பகுதிகளை அகற்றுதல் ஆகியவை அடங்கும். 1976 ஏப்ரலில், டெல்லியில் உள்ள டர்க்மேன் கேட் அருகே குடிசைப் பகுதிகளை அகற்ற புல்டோசர்கள் நகர்ந்தன. அப்போது, உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி பலரைக் கொன்றனர்.
குடும்பக் கட்டுப்பாடு இலக்குகள், குறிப்பாக வட இந்தியாவில், கட்டாய கருத்தடைக்கு வழிவகுத்தன. அரசு அதிகாரிகள் ஊதிய நிலுவை தொகையை பெறுவதற்கு முன் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. லாரி ஓட்டுநர்கள் கருத்தடைச் சான்றிதழ் இல்லாமல் தங்கள் உரிமங்களை புதுப்பிக்க முடியவில்லை. சில சமயங்களில், கருத்தடை இலக்குகளை அடைய மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். 1976 அக்டோபர் 18 அன்று நடந்த அத்தகைய சம்பவத்தில், உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் கட்டாய கருத்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி குறைந்தது 50 பேரைக் கொன்றனர்.
1976 ஆம் ஆண்டில், லோக்சபா தேர்தல்கள் நடைபெற இருந்த நிலையில், நாடாளுமன்றம் அதன் பதவிக்காலத்தை ஒரு வருடத்திற்கு நீட்டித்தது.
அவசர நிலை நீக்கம் - இந்திரா தோல்வி:
இந்திரா 1977 இன் ஆரம்பத்தில் அவசர நிலையை நீக்க முடிவு செய்தார். சிலர், அடுத்த தேர்தலில் இந்திரா வெற்றி பெறுவார் என்று நம்பியதாக என்று கூறினர்.
1977 தேர்தலில் இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டார். ஜன சங், காங்கிரஸ் (ஓ), சோசலிஸ்டுகள் மற்றும் பாரதிய லோக் தள் ஆகியவற்றுடன் இணைந்த ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. மொரார்ஜி தேசாய் இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமரானார்.
இதைத் தொடர்ந்து, அவசர நிலையின் போது செய்யப்பட்ட பல அரசியலமைப்பு மாற்றங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
அவசர நிலை பிரகடனத்தின் நீதித்துறை மறுஆய்வு மீண்டும் சாத்தியமாக்கப்பட்டது. மேலும் அத்தகைய பிரகடனம் ஒரு மாதத்திற்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு சிறப்பு பெரும்பான்மையால் - அவையின் மொத்த பலத்தின் பெரும்பான்மையாகவும், கலந்துகொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாமலும் - நிறைவேற்றப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.
44 வது திருத்தம், அவசர நிலையை விதிப்பதற்கான காரணமாக "உள்நாட்டு குழப்பம்" என்பதற்கு பதிலாக "ஆயுதக் கிளர்ச்சி" என்று மாற்றப்பட்டது.
அவசர நிலையின் நீடித்த பாரம்பரியம்
ஜனதா அரசு ஓபிசி இட ஒதுக்கீடுகளை ஆராய மண்டல் ஆணையத்தை நியமித்தது. இது இறுதியில் வட இந்தியாவில் ஓபிசிக்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது.
அவசர நிலை இந்தியாவிற்கு பல தசாப்தங்களாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இளம் தலைவர்களை அளித்தது. குறிப்பாக, லாலு பிரசாத் யாதவ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜெட்லி, ராம் விலாஸ் பாஸ்வான் மற்றும் பலர் அடங்குவர்.
மிக முக்கியமாக, அவசர நிலை நாட்டின் மீது காங்கிரஸின் ஒற்றைக் கட்சி பிடியின் முடிவின் தொடக்கத்தைக் குறித்தது. 1979 இல் ஜனதாவின் சரிவு அப்போதைய காங்கிரஸ் எதிர்ப்புவாதித்தின் வரம்புகளை வெளிப்படுத்திய அதே வேளையில், அவசர நிலை அரசியல் சக்திகளையும், செயல்முறைகளையும் இயக்கத்தில் கொண்டு வந்தது. இது பல வழிகளில் 2014 இல் காங்கிரஸின் வீழ்ச்சியுடன் உச்சக்கட்டத்தை அடைந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.