இரு சக்கர மின்சார வாகன தயாரிபு நிறுவனமான ஒகினவா ஆட்டோடெக் (Okinawa Autotech) வாகனத்தில் பேட்டரிகள் தொடர்பான சில சிக்கல்களைச் சரி செய்வதற்காக 3,215 யூனிட்ஸ் பிரைஸ் புரோ ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாகக் கூறியுள்ளது. இந்தியாவில் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்ரு தானாக முன்வந்து வாகனங்களை திரும்பப் பெறுவது இதுவே முதல் நிகழ்வாகும்.
திரும்ப பெறுவது ஏன்? நிறுவனம் கூறியது என்ன?
இந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பேட்டரிகள் தளர்வாக இணைக்கப்பட்டுள்ளதா அல்லது ஏதேனும் சேதம் உள்ளதா என சரிபார்க்கப்படும். இந்தியாவில் உள்ள அனைத்து ஒகினாவா அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களிலும் இலவசமாக இந்த சோதனை செய்யப்பட்டு சரிசெய்யப்படும்.” என்று தெரிவித்துள்ளது.
“மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பழுதுபார்க்கும் அனுபவம் இருப்பதை உறுதிசெய்ய, டீலர் கூட்டாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறது. இதற்காக வாகன உரிமையாளர்கள் தனித்தனியாகத் தொடர்பு கொள்ளப்படுவார்கள்” என்று ஒகினாவா கூறியுள்ளது.
ஒகினாவா ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததில், தந்தையும் அவருடைய பதின்மூன்று வயது மகளும் பலியான சில வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அப்போது, இந்த நிறுவனம் தனது மின்சார இரு சக்கர வாகனத்தை சார்ஜ் செய்வதில் கவனக்குறைவாக செயல்பட்டதால் ஷார்ட் சர்க்யூட் ஆகி தீ விபத்து ஏற்பட்டது என்று கூறியது. முழுமையான விசாரணை வெளிவரும் வரை காத்திருப்பதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், தீ விபத்து ஏற்பட்ட மின்சார வாகன தொகுதிகளை தானாக முன்வந்து திரும்பப் பெறுமாறு உற்பத்தியாளர்களை வலியுறுத்தியதன் பின்னணியிலும் இந்த திரும்பப் பெறும் அறிவிப்பு வந்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம், பிவாதியில் தொடங்கப்பட்ட வாகன உற்பத்தி நிலையத்திலிருந்து தயாரிக்கப்பட்ட ஒகினாவா, 2021-22 ஆம் ஆண்டில் 46,000 க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்தது என்று ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு (FADA) தகவல்களின்படி 0.39 சதவிகித சந்தைப் பங்கை வைத்திருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இந்த நிறுவனம் 8,000 க்கும் மேற்பட்ட மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.
தீ விபத்துகள் ஏன் அதிகரித்து வருகிறது?
கடந்த சில வாரங்களில், ஒகினாவா மின்சார இரு சக்கர வாகனம் மட்டுமல்லாமல், ஓலா எலக்ட்ரிக், ப்யூர் மின்சார வாகனம், மற்றும் ஜிதேந்திரா மின்சார வாகன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை உட்பட ஒரு டஜன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் தீப்பிடித்தது. இந்த நிறுவனங்கள் இந்த தீ விபத்துகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளன.
இதற்கிடையில், சாலைப் போக்குவரத்து அமைச்சகம், இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) பிரிவான தீ வெடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தில் (CFEES) ஒரு சுயாதீன குழுவை உருவாக்கி, இந்த சம்பவங்கள் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவங்களுக்குப் பின்னால் உள்ள உறுதியான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் உற்பத்தி குறைபாடுகள் - வன்பொருள் மற்றும் மென்பொருளில் - தீ விபத்துக்கு காரணங்களாக இருக்கலாம் என்று தொழில் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.