Advertisment

மே. வங்கத்தில் 8 பேர் கொலை: சி.பி.ஐ விசாரணை நடைமுறை என்ன?

மேற்கு வங்கத்தில் 8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட கல்கத்தா நீதிமன்றம்; வழக்குகளை சிபிஐ எப்படி கையாள்கிறது என்பது இங்கே

author-image
WebDesk
New Update
மே. வங்கத்தில் 8 பேர் கொலை: சி.பி.ஐ விசாரணை நடைமுறை என்ன?

Deeptiman Tiwary

Advertisment

Explained: Calcutta HC orders CBI probe into Bogtui killings, here’s how the agency investigates: திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்துத் தலைவர் கொல்லப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, செவ்வாயன்று 8 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் போக்டுய் கிராமத்தில் நடந்த கொலைகள் குறித்து விசாரிக்க கல்கத்தா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) உத்தரவிட்டது.

புதன்கிழமையன்று தானாக முன்வந்து வழக்கைத் தொடங்கிய கல்கத்தா உயர் நீதிமன்றம், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது. மேலும் விசாரணையை மேற்கொள்வதில் சிபிஐக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிபிஐ எப்படி வழக்குகளை விசாரணை செய்கிறது?

NIA போலல்லாமல், ஒரு மாநிலத்தில் உள்ள ஒரு வழக்கை, அது மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரமாகவோ அல்லது வன்முறைக் குற்றச் சம்பவமாகவோ இருந்தாலும், CBI தானாக முன்வந்து விசாரணை நடத்த முடியாது.

மத்திய அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளை எடுத்துக் கொள்ள, அதற்கு மாநில அரசின் பொது ஒப்புதல் (விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது) அல்லது வழக்குக்கு வழக்கு அடிப்படையில் குறிப்பிட்ட ஒப்புதல் தேவை. மற்ற அனைத்து வழக்குகளிலும், அது மாநில அரசின் ஊழல் அல்லது குற்றச் சம்பவமாக இருந்தாலும், சிபிஐ விசாரணையை மாநில அரசு கோர வேண்டும், அதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு கோரிக்கை விடுக்காத பட்சத்தில், சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் சிபிஐ வழக்கை எடுத்துக் கொள்ளலாம்.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சிபிஐ மறுக்க முடியுமா?

சிபிஐ விசாரணைக்கு ஒரு மாநிலம் கோரிக்கை வைத்த பிறகு, அந்த அமைப்பின் கருத்தை மத்திய அரசு கேட்கிறது. இந்த வழக்கில் நேரத்தையும் சக்தியையும் செலவழிப்பது மதிப்புக்குரியது அல்ல என்று சிபிஐ கருதினால், அது வழக்கை எடுக்க மறுக்கலாம். கடந்த காலங்களில், விசாரணைக்கு போதிய ஆட்கள் இல்லை என்றும் கூடுதல் பணிச்சுமையாக இருப்பதாக கூறியும் வழக்குகளை ஏற்க சிபிஐ மறுத்து வந்தது.

வியாபம் ஊழல் வழக்குகளை விசாரிக்க போதிய பணியாளர்கள் இல்லாததால், இனி மேல் விசாரணை நடத்த முடியாது என்று 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்திருந்தது.

"சிபிஐ நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்பாகும், மேலும் இது சிக்கலான மற்றும் முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாநில அரசு சிபிஐ-யிடம் ஒப்படைக்க விரும்பும் ஒவ்வொரு வழக்கையும் விசாரிக்க முடியாது” என்று சிபிஐ அதிகாரி ஒருவர் கூறினார்.

ஒரு முன்னாள் சிபிஐ அதிகாரியின் கூற்றுப்படி, 10 நிகழ்வுகளில் ஒன்பது நிகழ்வுகளில், ஒரு வழக்கை ஏற்கும் அல்லது மறுக்கும் முன், சிபிஐ-யின் கருத்தை மத்திய அரசு கேட்கிறது.

publive-image

“10% வழக்குகளில், ஆளும் கட்சிக்கு ஏற்றதாக இருந்தால், வழக்கு பதிவு செய்ய மத்திய அரசு நேரடியாக உத்தரவிடுகிறது. ஒருமுறை, ஒரு வடகிழக்கு மாநிலத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டு, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மாநில அரசு விரும்பியது. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, சிபிஐக்கு இது மிகவும் சிறிய சம்பவம் என்றும், மாநில காவல்துறை விசாரணையை மேற்கொள்ள முழுத் திறன் கொண்டது என்றும் கூறி வழக்கை ஏற்க மறுத்துவிட்டது” என்று அந்த அதிகாரி கூறினார்.

தற்போது சிபிஐயின் பணிச்சுமை என்ன?

மத்திய விஜிலென்ஸ் கமிஷனின் சமீபத்திய வருடாந்திர அறிக்கையின்படி, சிபிஐ 2019 இல் 608 எஃப்ஐஆர்களையும் 2020 இல் 589 எஃப்ஐஆர்களையும் பதிவு செய்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டது தொடர்பாக மொத்தம் 86 வழக்குகளும், வரம்பு மீறிய சொத்துக்களை வைத்திருந்ததற்காக 30 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆண்டில் 676 வழக்குகளில் (எஃப்ஐஆர்கள் மற்றும் முதற்கட்ட விசாரணைகள் உட்பட), 107 வழக்குகள் அரசியலமைப்பு நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின் பேரிலும், 39 வழக்குகள் மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களின் கோரிக்கைகளின் பேரிலும் எடுக்கப்பட்டன.

சிபிஐயில் 1,300க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. டிசம்பர் 31, 2020 நிலவரப்படி, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 7,273 ஆக உள்ள நிலையில், 5,899 அதிகாரிகள் மட்டுமே பணியில் இருந்தனர், மேலும் 1,374 பணியிடங்கள் காலியாக உள்ளன.

publive-image

வழக்குகளில் சிபிஐயின் முன்னேற்றம் என்ன?

2020 ஆம் ஆண்டின் இறுதியில், சிபிஐயிடம் 1,117 வழக்குகள் (எஃப்ஐஆர்கள் மற்றும் முதற்கட்ட விசாரணைகள் இரண்டும்) விசாரணை நிலுவையில் இருந்தன. 2019 இல், இந்த எண்ணிக்கை 1,239 ஆக இருந்தது. 2020 ஆம் ஆண்டில், 693 FIRகள் மற்றும் 105 முதற்கட்ட விசாரணைகளில் விசாரணை இறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 31, 2020 நிலவரப்படி, 637 வழக்குகள் ஒரு வருடத்திற்கும் மேலாக விசாரணைக்காக நிலுவையில் உள்ளன.

இதையும் படியுங்கள்: கேரளாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட மானுடவியலாளர்! யார் இந்த ஃபிலிப்போ ஓசெல்லா?

2019 இல் 69.19% ஆக இருந்த தண்டனை விகிதம் 69.83% ஆக இருந்தது.

2020 ஆம் ஆண்டின் இறுதியில், பல்வேறு நீதிமன்றங்களில் 9,757 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஊழல் வழக்குகளில் தண்டனை விகிதம் 2020 இல் 67% ஆக சற்று குறைவாக இருந்தது. 2020 ஆம் ஆண்டில், 565 அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 425 ஊழல் வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. இவை உட்பட 429 வழக்குகளில் (முந்தைய வருடங்கள் உட்பட) விசாரணைகளை நிறைவு செய்தது.

191 வழக்குகளில், நீதிமன்ற விசாரணைகள் முடிக்கப்பட்டன, அதில் 128 வழக்குகள் தண்டனையில் முடிந்தது.

இருப்பினும், இந்த ஆண்டில் சிபிஐ வழக்குகளில் விசாரணைக்கு வந்த 655 பேரில், 260 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். அதாவது 60% குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர் அல்லது வழக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

டிசம்பர் 31, 2020 வரை, பல்வேறு நீதிமன்றங்களில் 6,497 ஊழல் வழக்குகள் விசாரணை நிலுவையில் உள்ளன. இவற்றில் 5,193 வழக்குகள் (80%) மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. ஏறக்குறைய 2,000 ஊழல் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நிலுவையில் உள்ளன.

சிபிஐ விசாரணையில் அரசின் ஒப்புதலின் பங்கு என்ன?

2015 முதல், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், கேரளா, மிசோரம் மற்றும் மேகாலயா ஆகிய ஒன்பது மாநிலங்கள் சிபிஐயின் பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ளன. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் சிபிஐ அதன் தலைமையின் குரலாக மாறிவிட்டதாகவும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை நியாயமற்ற முறையில் குறிவைத்து வருவதாகவும் குற்றம் சாட்டின.

பொது ஒப்புதலை திரும்பப் பெறுவது என்பது இந்த மாநிலங்களில் எந்தவொரு வழக்கையும் விசாரிக்க, சிபிஐ மாநில அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். இது தங்கள் கைகளை கட்டிவிட்டதாக சிபிஐ கூறியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில், வழக்குகளை விசாரிக்க அனுமதி கோரிய 150 கோரிக்கைகளில் 78% கோரிக்கைகள் சிபிஐயின் ஒப்புதலை திரும்பப் பெற்ற மாநில அரசுகளிடம் நிலுவையில் இருப்பதாக சிபிஐ சமர்ப்பித்ததற்கு உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்தது.

மறுபுறம், 455 பொது ஊழியர்கள் சம்பந்தப்பட்ட 177 வழக்குகளில், 2020 இறுதி வரை மத்திய அரசிடமிருந்து சிபிஐ வழக்குத் தொடர அனுமதி பெறவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

West Bengal Explained Cbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment