Advertisment

கனடா பூர்வ குடிகளிடம் மன்னிப்பு கேட்ட போப் பிரான்சிஸ்; காரணம் என்ன?

கனடாவில் உள்ள குடியிருப்பு பள்ளிகள் என்பது என்ன? அங்கு கண்டுப்பிடிக்கப்பட்ட கல்லறைகள் யாருடையவை? பூர்வ குடிகளிடம் போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டதது எதற்காக? முழுமையான விளக்கம் இங்கே

author-image
WebDesk
New Update
கனடா பூர்வ குடிகளிடம் மன்னிப்பு கேட்ட போப் பிரான்சிஸ்; காரணம் என்ன?

Sanskriti Falor

Advertisment

Explained: Why Pope Francis has apologised to Canada’s indigenous communities: போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை (ஜூலை 26) கனடாவின் பூர்வீக சமூகங்களிடம் திருச்சபை நடத்தும் குடியிருப்புப் (ரெஷிடென்சியல்) பள்ளிகளில் அவர்களின் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதற்காக மன்னிப்பு கேட்டார். கனடா மண்ணில் மன்னிப்புக் கோரியது இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாட்டிகனில் போப் மன்னிப்பு கேட்டத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகும்.

கடந்த ஆண்டு இந்த பள்ளிகளில் குழந்தைகளின் அடையாளம் தெரியாத கல்லறைகள் கண்டறியப்பட்டது, இது போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

"பழங்குடி மக்களுக்கு எதிராக பல கிறிஸ்தவர்கள் செய்த தீமைக்காக நான் வெட்கத்துடனும் சந்தேகத்திற்கு இடமின்றியும் மன்னிப்புக் கோருகிறேன்" என்று போப் பிரான்சிஸ் திங்களன்று கூறினார்.

இதையும் படியுங்கள்: மனித – வனவிலங்கு மோதல்கள்; எண்ணிக்கையும் காரணங்களும்

மேலும், “நான் இங்கு வந்துள்ளேன், ஏனென்றால் உங்களிடையே எனது புனித யாத்திரையின் முதல் படி மீண்டும் மன்னிப்பு கேட்பது, நான் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன் என்று மீண்டும் ஒருமுறை உங்களிடம் கூறுவது. வருந்தத்தக்க வகையில், பல கிறிஸ்தவர்கள் பழங்குடி மக்களை ஒடுக்கும் சக்திகளின் காலனித்துவ மனநிலையை ஆதரித்த வழிகளுக்கு மன்னிக்கவும். இந்த இழிவான தீமையை எதிர்கொண்டு, கடவுளுக்கு முன்பாக மண்டியிட்டு, தன் குழந்தைகளின் பாவங்களுக்காக சர்ச் மன்னிப்புக் கேட்கிறது,” என்றும் போப் பிரான்சிஸ் கூறினார்.

இந்த குடியிருப்புப் பள்ளிகள் என்ன, போப் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு இங்கு என்ன நடந்தது? விளக்கமாக பார்க்கலாம்.

கல்லறைகளின் கண்டுபிடிப்பு

கடந்த ஆண்டு செப்டம்பர் வரை, 1,300 க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகள் இந்த தேவாலயத்தால் நடத்தப்பட்ட பள்ளிகள் இருந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

கனடாவில் உள்ள சுமார் 150,000 பழங்குடியின குழந்தைகள் அவர்களது குடும்பங்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக இந்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அந்த குழந்தைகள் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டனர். இந்த குழந்தைகளை "கலாச்சார ரீதியாக ஒருங்கிணைக்க" அவர்களின் சமூகங்கள் மற்றும் குடும்பங்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏப்ரல் மாதம் ஒரு அறிக்கையில், “குடியிருப்பு பள்ளி முறையின் சோகமான யதார்த்தத்தால் கனடாவின் வரலாற்றில் என்றென்றும் கறை படிந்திருக்கும், பள்ளியின் இந்த முறையால் குறைந்தபட்சம் 150,000 பழங்குடியின குழந்தைகளை அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களிலிருந்து பலவந்தமாகப் பிரித்தெடுக்கப்பட்டனர். அவர்களின் கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பின்பற்றுவதற்கும் அவர்களின் மொழிகளைப் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டது, என்று கூறினார்.

publive-image

கம்லூப்ஸ் இந்தியன் ரெசிடென்ஷியல் பள்ளியில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளின் 215 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக முதல் தேச பழங்குடியினர் குழு கடந்த ஆண்டு வெளிப்படுத்தியது. மற்றொரு கண்டுபிடிப்பில், கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, சஸ்காட்செவனில் உள்ள மேரிவல் இந்தியன் ரெசிடென்ஷியல் பள்ளியில் 751 குறிக்கப்படாத கல்லறைகள், பெரும்பாலும் குழந்தைகளின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கண்டுபிடிப்புக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, 1890 இல் திறக்கப்பட்ட கிரான்புரூக்கில் உள்ள செயின்ட் யூஜின் குடியிருப்புப் பள்ளியின் மைதானத்தில் 182 குறிக்கப்படாத கல்லறைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

மொத்தத்தில், பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் 4,117 இறப்புகள் கடந்த ஆண்டில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பள்ளிகளில் குழந்தைகளை அடித்து, கிறித்தவ மதத்தைப் பின்பற்றும்படி வற்புறுத்தியதாகவும், அவர்களின் தாய்மொழிகளைப் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் அறிக்கை, தேவாலயத்தால் நடத்தப்படும் குடியிருப்புப் பள்ளிகளின் துஷ்பிரயோகத்தால் 6,000 க்கும் அதிகமானோர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. பழங்குடியின குழந்தைகளை சித்திரவதை செய்வதில் ஈடுபட்டதற்காக திருச்சபையிடம் ஆணையம் மன்னிப்பு கோரியது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் குழந்தைகளின் கல்லறைகள் கண்டெடுக்கப்பட்டபோது கனடா ஆயர்கள் மாநாடு அந்நாட்டின் பழங்குடியின மக்களிடம் மன்னிப்பு கேட்டது.

இந்தக் குடியிருப்புப் பள்ளிகளில் பெரும்பாலானவை 1880கள் மற்றும் 1990 களுக்கு இடையில் இயங்கி வந்தன, மேலும் அவை முக்கியமாக கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்டன.

கனடா அரசாங்கத்தின் 2016 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1,673,785 பழங்குடியினர் கனடாவில் வாழ்கின்றனர். இதில், 977,230 பேர் முதல் தேச குழுவைச் சேர்ந்தவர்கள், 587,545 பேர் மெடிஸ் மற்றும் 65,025 பேர் இன்யூட். 2016 ஆம் ஆண்டில் மொத்த மக்கள்தொகையில் 4.9 சதவிகிதம் பழங்குடியினர்.

குடியிருப்பு பள்ளி அமைப்பு என்ன, அது எப்படி தொடங்கியது?

1880களில், அப்போதைய கனடா பிரதமர் ஜான் ஏ. மெக்டொனால்ட், அமெரிக்காவில் உள்ள பழங்குடியின குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்ய அரசியல்வாதியும் பத்திரிகையாளருமான நிக்கோலஸ் ஃப்ளட் டேவினை நாடினார். டேவின் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், கனடாவில் பழங்குடியின குழந்தைகளுக்காக பிரதமர் மெக்டொனால்ட் குடியிருப்புப் பள்ளிகளை அமைத்தார்.

இந்த பள்ளிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கான உத்தரவு 1883 இல் வந்தாலும், பழங்குடியின குழந்தைகளுக்கான குடியிருப்பு பள்ளி முதன்முறையாக தொடங்கப்பட்டது இப்போது அல்ல. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் ஒரு பகுதியாக கனடா அரசாங்கத்தால் 2008 இல் அமைக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய மையத்தின்படி, "தேவாலயத்தால் நடத்தப்படும் முதல் இந்திய குடியிருப்புப் பள்ளி 1831 இல் திறக்கப்பட்டது."

கனடாவின் முதல் குடியிருப்புப் பள்ளியாக அறியப்பட்ட மொஹாக் இந்தியன் ரெசிடென்ஷியல் பள்ளி, 1813 ஆம் ஆண்டு ஒன்டாரியோவில் உள்ள பிராண்ட்ஃபோர்டில் இயங்கத் தொடங்கியது.

publive-image

1876 ​​ஆம் ஆண்டில், இந்தியச் சட்டம் இயற்றப்பட்டது, இது பழங்குடி சமூகங்களின் கீழ் வந்தவர்கள் யார் என்பதை விவரிக்கிறது மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு சட்ட மற்றும் நில உரிமைகளை நிறுவியது. இந்தச் சட்டத்தின் கீழ்தான் குழந்தைகள் அவர்களது குடும்பங்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

1883 ஆம் ஆண்டில், மேற்கு கனடாவில் குடியிருப்புப் பள்ளிகளை அமைப்பதற்கு பிரதமர் மெக்டொனால்ட் அங்கீகாரம் அளித்தார். 1950களில், குடியிருப்புப் பள்ளிகள் கனடா முழுவதும் பரவின. மாகாணங்களுக்கான மாநிலச் செயலர் சர் ஹெக்டர் லாங்கேவின் நாடாளுமன்றத்தில், “குழந்தைகளை ஒழுங்காகக் கற்க நாம் அவர்களை அவர்களின் குடும்பங்களிலிருந்து பிரிக்க வேண்டும். சிலர் இது கடினமானது என்று கூறலாம், ஆனால் நாம் அவர்களை நாகரீகமாக்க விரும்பினால் அதைச் செய்ய வேண்டும்,” என்று கூறினார்.

1800கள் மற்றும் 1990 களுக்கு இடையில் குறைந்தது 139 குடியிருப்புப் பள்ளிகள் இயங்கியதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 1907 ஆம் ஆண்டில், மருத்துவ ஆய்வாளர் டாக்டர் பி.எச் பிரைஸ், கனடாவில் உள்ள குடியிருப்புப் பள்ளிகளில் உள்ள குழந்தைகளின் சுகாதார நிலைமைகள் "தேசியக் குற்றம்" என்று தீர்ப்பளித்தார்.

மேலும் 1920 இல், இந்தியச் சட்டம் 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டாயக் குடியிருப்புப் பள்ளிகளுக்கு வருவதைத் திருத்தியது. பழங்குடி சமூகத்தின் பல கலாச்சார நடைமுறைகள் கூட சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டன.

பள்ளிகள் மிகவும் அதிகமாகவும், நிதி குறைவாகவும் இருந்ததாக அறியப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை தேவாலயங்களின் நிதியுதவியை பெரிதும் நம்பியிருந்தன.

2008 முதல் 2015 வரை இயங்கிய கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் (TRC) ஒரு அறிக்கையில், இந்தப் பள்ளிகள் “பூர்வகுடியினரின் கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளை அழிக்கவும், பழங்குடியின மக்களை ஒன்றிணைக்கவும், அவர்கள் தனித்துவமான மக்களாக இருக்கக்கூடாது என்பதற்காக ஒரு முறையான, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட முயற்சியாகும்," என்று கூறியது.

publive-image

கலாசார இனப்படுகொலையை மேற்கொள்வதே குடியிருப்புப் பள்ளிகளின் நோக்கம் என்றும் TRC கூறியுள்ளது. குழந்தைகள் தங்களுடைய சொந்த மொழிகளைப் பேசியதற்காகக் குடியிருப்புப் பள்ளிகளில் தண்டிக்கப்பட்டனர், அவர்கள் குழந்தைகளை எப்படி நடத்தினார்கள் என்பதற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்கவில்லை, கல்வித்தரம் சராசரிக்கும் குறைவாக இருந்தது.

கனடா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்த அமைப்பு நடைமுறையில் இருந்த ஆண்டுகளில், குழந்தைகள் வலுக்கட்டாயமாக வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் மற்றும் பள்ளியில், கடுமையான ஒழுக்கம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினி, மோசமான சுகாதாரம், உடல், உணர்ச்சி மற்றும் பாலியல் துன்புறுத்தல், புறக்கணிப்பு மற்றும் அவர்களின் கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளை வேண்டுமென்றே அடக்குதல் ஆகியவை இருந்தது. குடியிருப்புப் பள்ளிகளில் படிக்கும் போது ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்தனர், மேலும் பலரின் புதைக்கப்பட்ட இடங்கள் தெரியவில்லை.

பழங்குடி சமூகங்கள் வேறு இடங்களில் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளார்களா?

ஆஸ்திரேலியாவில் மனித உரிமைகள் மற்றும் சம வாய்ப்பு ஆணையம் நடத்திய விசாரணையில், 1910 மற்றும் 1970 க்கு இடையில், பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகளின் சமூகங்களைச் சேர்ந்த பழங்குடியின குழந்தைகள் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு, ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்த அமைப்பின் துன்புறுத்தல்களைத் தாங்கி பிழைத்தவர்களுக்கு சுமார் 280 மில்லியன் டாலர்களை வழங்க ஒப்புக்கொண்டது.

1997 இன் மற்றொரு மனித உரிமைகள் அறிக்கை, கனடாவின் குடியிருப்புப் பள்ளிகளைப் போலவே, ஆஸ்திரேலியாவின் பழங்குடியின குழந்தைகளை துன்புறுத்தல் செய்வது அவர்களின் அடையாளத்தையும் அவர்களின் கலாச்சாரத்தையும் அகற்றுவதற்காக செய்யப்பட்டது, என்று கூறியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained Canada Pope Francis
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment