நேற்று புது தில்லியில் நடந்த இந்திய மொபைல் காங்கிரசில் “ஒன் நேஷன் ஒன் ஃ பாஸ்டேக் ” என்ற திட்டத்தை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம், வரும் டிசம்பர் 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இந்தியாவிற்குள் பயனிக்கும் அனைத்து வாகனங்களில் செல்லும் பயனர்கள் இனி சுங்கச் சாவடியில் நின்று பணம் செலுத்துவதற்கு பதிலாக, வாகனத்தின் விண்ட்ஸ்கிரீனில் பொருத்தப்பட்டிருக்கும் மின்னணு கட்டண வசூல் அட்டையின் (ஃ பாஸ்டேக்) மூலம் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
பாஸ்டேக் (FASTag) என்றால் என்ன ?
ஃ பாஸ்டேக் என்பது வாகனங்களின் முன்கண்ணாடியின் ஒட்டப்பட்டிருக்கும் மின்னணு ஸ்டிக்கர் ஆகும். ஒவ்வொரு பாஸ்டேக்கும் ஏதோவொரு வங்கி கணக்குகள் அல்லது பிற கட்டண முறைகளுடன் ( உதாரணமாக, கூகிள் பே ) இணைக்கப்பட்டிருக்கும்.
தேசிய (அல்லது) மாநில நெடுஞ்சாலையில் இந்த ஃ பாஸ்டேக் பொருத்தப்பட்ட வாகனங்கள் செல்லும் போது, தானாகவே, கட்டணங்கள் பெறப்படும். இதற்காகவே, அனைத்து நெடுஞ்சாலைகளிலும் RFID சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சென்சார், நமது வாகனம் சுங்கச் சாவடிக்கு வருவதற்கு 25 மீட்டர் தொலைவில் இருக்கும் போதே நமது வாகனத்தை அடையாளப்படுத்தி , நமது ஃ பாஸ்டேக்கில் (FASTag) இருந்து பணம் எடுக்கும் வேலையைத் தொடங்கி விடும். பணம் எடுத்தப் பின்பு, பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு அதற்கான அறிவிப்பு மட்டும் வரும்.
இதனால் மக்கள் வாகானத்தை சுங்கச் சாவடிகளில் எங்கும் நிறுத்த தேவையில்லை. மேலும், முன்னைப் போல் சுங்கச் சாவடி டிக்கெட்டுகளை பத்திரப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.
ஒரு FASTag ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் . மேலும், தேவைக்கேற்ப மட்டுமே ரீசார்ஜ் செய்தால் போதும்.
தற்போது , இந்தியாவில் 60 லட்சம் வாகனங்கள் இந்த ஃபாஸ்டேக்குகளைக் கொண்டுள்ளன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்.எச்.ஏ.ஐ)கூற்றுப்படி, இந்த சாதனங்கள் சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதை கணிசமாக மென்மையாக்கும், ஏனெனில் ஓட்டுநர்கள் இனி பணத்தை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை அல்லது பரிவர்த்தனை செய்ய நிறுத்த வேண்டியதில்லை.
‘ஒன் நேஷன் ஒன் ஃ பாஸ்டேக் (FASTag) ’ திட்டம் :
திங்களன்று நடந்த மாநாட்டில், நாடு முழுவதும் ஒரு ஒருங்கிணைந்த மின்னணு கட்டண தீர்வைக் கொண்டுவருவதற்காக பல மாநில நிர்வாகத்திற்கும், இந்தியன் ஹைவேஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது .
இதன்மூலம், ஒரு வாகனம் ஒரே ஃ பாஸ்டேக் அட்டையின் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து நெடுஞ்சாளிகளிலும் செல்ல முடியும். ஒவ்வொரு மாநிலத்திற்கு தனித்தனியான ஃபாஸ்டேக் மின்னணு அட்டை வாங்க அவசியமில்லை. டிசம்பர் 1 முதல் அனைத்து தேசிய நெடுஞ்சாலை டோல் பிளாசாக்களிலும் ஃபாஸ்டேக்(FASTag) மூலம் மட்டுமே கட்டணங்களை ஏற்றுக் கொள்ளும் என்று மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளதால், இந்த "ஒன் நேஷன் ஒன் ஃ பாஸ்டேக்" நடவடிக்கை குறிப்பிடத்தக்கதாய் அமையும் .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.