நானோ தொழில்நுட்ப பொறியியலாளர்கள் தாவரங்கள் அல்லது பாக்டீரியாக்களிலிருந்து வரும் வைரஸ்கள் மூலம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். குளிர்சாதன பெட்டி தேவைப்படாத இந்த கொரோனா தடுப்பூசிகள் இன்னும் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக சான்டியாகோ கலிபோர்னியா பல்கலைக்கழகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசியை எலிகளில் செலுத்தி பரிசோதித்தபோது SARS-CoV-2 வைரசுக்கு எதிராக நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் உற்பத்தியை தூண்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கினர். அதில் ஒன்று கௌபியா மொசைக் வைரஸ் எனப்படும் தாவர வைரஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மற்றொன்று Q பீட்டா என்ற பாக்டீரியோபேஜிலிருந்து(பாக்டீரியா வைரஸ்) தயாரிக்கப்படுகிறது.
பந்து வடிவிலான நானோ துகள்கள் வடிவில் தாவர வைரஸ் மற்றும் பாக்டீரியோபேஜின் நகல்களை வளர்க்க காராமணி (Cowpea Plant) செடிகள் மற்றும் ஈ.கோலி பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் இந்த நானோ துகள்களை உற்பத்தி செய்து பின்னர் SARS-CoV-2 ஸ்பைக் புரதத்தின் ஒரு சிறிய பகுதியை மேற்பரப்பில் இணைத்தனர். இந்த தயாரிப்புகள் ஒரு தொற்று வைரஸ் போல தோற்றமளித்தது. இதனால் நோயெதிர்ப்பு அமைப்பு அவற்றை அடையாளம் காண முடியும். ஆனால் அவை விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு தொற்று ஏற்படுத்தாது.
தற்போதைய கொரோனா தடுப்பூசிகளைப் போலவே, ஸ்பைக் புரதம் SARS-CoV-2 க்கு எதிராக ஒரு பதிலை உருவாக்க எலியின் நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டியது.
Source: UC, San Diego
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil