/indian-express-tamil/media/media_files/2025/05/06/OPLluOSWnBkWIyI06mCH.jpg)
போர் ஒத்திகை நடத்த அரசு உத்தரவு: இது உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்?
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் நாளை (மே 7) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை (Mock Drills) நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 244 சிவில் பாதுகாப்பு மாவட்டங்களில் சிவில் பாதுகாப்பு மெக்கானிசங்களை வலுப்படுத்தவும் உத்தரவிட்டது.
நாளை நடைபெற உள்ள ஒத்திகையின்போது இதுபோல சைரன் ஒலியை எழுப்ப வேண்டும். பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். சைரன் ஒலியின்போது அந்த இடங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக செல்வது குறித்த அறிவுரைகளை வழங்க வேண்டும். வான்வழி (அ) நில வழித்தாக்குதலின்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்ற முக்கிய நடவடிக்கைகளில் இடம்பெயர்வு திட்டங்களின் பயிற்சி ஒத்திகைகள் மற்றும் மின்நிலையங்கள் மற்றும் ராணுவத்துடன் தொடர்புடைய கட்டிடங்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மறைத்து பாதுகாப்பது ஆகியவை அடங்கும். இதுபோன்ற நடவடிக்கைகள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாலும், விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Govt orders mock drills, boosting civil defence
சிவில் பாதுகாப்பு மாவட்டங்கள் என்றால் என்ன?
சிவில் பாதுகாப்பு மாவட்டங்கள் என்பது அரசு சிவில் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் குறிப்பிட்டுள்ள நகரங்கள் மற்றும் மாவட்டங்களை உள்ளடக்கிய பிரிவுகள் (அ) பகுதிகளைக் குறிக்கின்றன. இந்தப் பிரிவுகள் பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றன.
இந்த பிரிவுகள், பின்வரும் அடிப்படைகளில் தேர்வு செய்யப்படுகின்றன:
-
எல்லைப் பகுதிகளுக்கு அருகிலுள்ள நகரங்கள் அல்லது மாவட்டங்கள்
-
தாக்குதல்களுக்கு சாத்தியம் உள்ள இடங்கள்
-
முக்கிய வளங்களை கொண்டுள்ள இடங்கள் (ராணுவ வளாகங்கள், அணுசக்தி நிலையங்கள், வெப்ப மின் நிலையங்கள், முக்கிய அரசு கட்டிடங்கள்)
-
முக்கிய உட்கட்டமைப்புகள் (தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வழிகள், துறைமுகங்கள்)
மொத்தம் 259 சிவில் பாதுகாப்பு மாவட்டங்கள் உள்ளன. 2010-ல் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. இவை அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் பரவியுள்ளன. இவை 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன:
-
வகை I (13 மாவட்டங்கள்): முழுமையான சிவில் பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படவேண்டும்.
-
வகை II (201 மாவட்டங்கள்): பகுதி பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படும்.
-
வகை III (45 மாவட்டங்கள்): மிகக் குறைந்த அளவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படும்.
இந்த வகைப்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழிகாட்டுகின்றன. இந்தியா முழுவதிலும் 259 சிவில் பாதுகாப்பு மாவட்டங்கள் உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) 2010ல் அறிவித்தது.
-
-
மேற்குவங்காளம் – 32
-
ராஜஸ்தான் – 28
-
அசாம் – 20
-
பஞ்சாப் – 20
-
ஜம்மு & காஷ்மீர் – 20
-
-
வகை I (Category I) மாவட்டங்கள் (முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படும்):
-
டெல்லி (கேன்டோன்மென்ட் உட்பட)
-
குஜராத் – சூரத், வடோதரா, காக்ராபர்
-
மகாராஷ்டிரா – மும்பை, ஊரன், தராபூர்
-
ஒடிஷா – தல்சர்
-
ராஜஸ்தான் – கோட்டா, ராவத் பாடா
-
தமிழ்நாடு – சென்னை
-
உத்தரப்பிரதேசம் – புலந்த்ஷஹர்
-
மேலும், ஜனவரி 2023ல் வெளியான உள்துறை அமைச்சகத்தின் (MHA) தகவலின் படி: மத்திய அரசு, மொத்தம் 295 ஆபத்துக்கிடமான நகரங்கள்/மாவட்டங்களை (vulnerable towns/districts) Peace Time-இல் (அமைதிக்காலத்தில்) சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய இடங்களாக அடையாளம் காண்கின்றது. இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள், எதிர்பாராத தாக்குதல்களில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான முயற்சிகளாகும்.
என்னென்ன நடவடிக்கைகளை உள்ளடக்கியது போர் ஒத்திகை?
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) மே 2 மற்றும் மே 5 தேதிகளில் அனுப்பிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில், மே 7 நடைபெறும் போர்கால் ஒத்திகை கீழ்க்கண்ட முக்கிய நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது:
-
வான்வழி தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் செயல்படுத்தல்
-
தாக்குதல் வரும் முன்னதாக மக்களை எச்சரிக்க சைரன்கள் இயக்கப்பட வேண்டும்.
-
-
இந்திய விமானப்படையுடன் ஹாட்லைன் / வானொலி தொடர்பு இணைப்புகள் செயல்படுத்தல்
-
கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் அதற்கேற்ப மாற்று கட்டுப்பாட்டு அறைகள் (Shadow Control Rooms) இயக்கப்பட வேண்டும்
-
பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிரித் தாக்குதல் நிகழும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பயிற்சி அளித்தல்
-
சிவில் பாதுகாப்பு சேவைகள் (Civil Defence Services) செயல்படுத்தல்
-
முக்கியமாக:
-
வார்டன் சேவைகள்
-
தீயணைப்புப்படை (Firefighting)
-
மீட்பு படை (Rescue Service)
-
டிபாட்ஸ் (Depots)
-
-
-
Crash Blackout ஏற்பாடு
-
தாக்குதலின்போது இலக்காக இருக்கக் கூடாத இடங்களில் மின் விளக்குகளை உடனடியாக அணைக்கின்ற நடவடிக்கை.
-
-
முக்கிய உற்பத்தி நிலையங்கள் மற்றும் அடிப்படை வளங்களை விரைவில் மறைத்து (camouflage) பாதுகாக்கும் ஏற்பாடுகள்
-
சிவில் பாதுகாப்புத் திட்டத்தை (Civil Defence Plan) புதுப்பித்தல் மற்றும் அதற்கான ஒத்திகை நடத்தல்
-
இடம்பெயர்வு திட்டங்களை (Evacuation Plan) புதுப்பித்தல் மற்றும் அதற்கான பயிற்சி ஒத்திகை
-
தடுப்புப்பணிகள், பங்கர்கள், குழிகள் போன்றவை சுத்தப்படுத்தல்
இந்த ஒத்திகை, பொதுமக்கள் மற்றும் நிர்வாக அமைப்புகள் எவ்வாறு ஒரு போர்முனை தாக்குதலின்போது ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை சோதனை செய்வதற்கும், அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மீதான தாக்கம் என்ன?
மே 7-ம் தேதி நடைபெறும் போர்கால ஒத்திகை நேரத்தில், சில மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை தற்காலிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது:
-
திடீர் மின் நிறுத்தங்கள் (Blackout): பாதுகாப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, நகரங்கள் மற்றும் நகராட்சிகளில் மின்விளக்குகள் அணைக்கப்படலாம்.
-
போக்குவரத்து நிறுத்தம்: வான்வழி தாக்குதல் எச்சரிக்கையின் போது, வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும்; பயணிகள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல வேண்டியிருக்கும்.
-
இடப்பெயர்வு நடவடிக்கைகள்: ஆபத்துக்கிடமான பகுதிகளிலுள்ள மக்கள் தாழ்வான இடங்களுக்கு மாற்றப்படலாம்.
-
பள்ளி மற்றும் மக்கள் பங்கேற்பு: மாணவர்கள், தன்னார்வலர்கள், NCC/NSS போன்ற குழுக்கள் போர் ஒத்திகையில் பங்கேற்க வேண்டியிருக்கும்.
-
சட்ட ரீதியாக: 1968-ம் ஆண்டு சிவில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அரசு நெருக்கடியான சூழ்நிலைகளில்:
-
ஊரடங்கு விதிக்கலாம்
-
சொத்துக்களை சுலபமாக எடுத்துக்கொள்ளலாம்
-
ஊடகங்களை கட்டுப்படுத்தலாம்
-
நபர்களை சட்டப்படி கைதுசெய்யாமலேயே தடுத்து வைக்கலாம்
-
இந்த பயிற்சிகள், ஒருவேளை எதிர்பாராத தாக்குதல்களுக்கு முன்னேற்பாடாகவே நடைமுறைக்கு வருகிறது. அவை நிர்வாகத்தின் திறனை மேம்படுத்துவதோடு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் பயிற்சியையும் தருகின்றன.
அரசு ஏன் போர்க்கால ஒத்திகையை அறிவித்தது?
உள்துறை அமைச்சகம் கூறுவதுபோல், இந்த போர்க்கால ஒத்திகை: மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் சிவில் பாதுகாப்பு அமைப்புகளின் தயார் நிலையை மதிப்பீடு செய்யும் நோக்கத்தில் உள்ளது. எதிரித் தாக்குதலுக்கான பொதுமக்கள் பயிற்சி என்பது முக்கிய அம்சமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்குப் பின்னே சில முக்கிய காரணங்கள் உள்ளன:
-
பஹல்காம் தாக்குதல் – அரசின் அறிவிப்பு இந்த தாக்குதலுக்குப் பிறகு வந்துள்ளது.
-
பாகிஸ்தான் 2 ஏவுகணைகள் பரிசோதித்துள்ளது – இது பாதுகாப்பு சூழ்நிலையை அதிகரிக்கிறது.
-
தேசிய அளவிலான பயிற்சி 1971 போருக்கு முன்பாக மட்டுமே நடத்தப்பட்டது
-
உலகளாவிய முன்னுதாரணங்கள்:
-
தென் கொரியா – வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனைக்குப் பிறகு நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்தியது.
-
உக்ரைன்- ரஷ்யாவுடன் போர் ஆரம்பிக்குமுன் போர்க்கால ஒத்திகை நடத்தியது.
-
இந்த போர் ஒத்திகை, பாதுகாப்பு கட்டமைப்பு செயல்படத் தயாராக உள்ளதா என்பதை சோதிக்கும் ஒரு பரிசோதனையாகவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பயிற்சியாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், பாதுகாப்பு பதற்ற சூழ்நிலைக்கு இது ஒரு திறன்மிகு பதிலடி என்றும் கூறப்படலாம்.
உலகில் சிவில் பாதுகாப்பு நாடக ஒத்திகை வரலாறு:
சிவில் பாதுகாப்பு (Civil Defence) என்பது பல நூற்றாண்டுகளாக இருந்தாலும், 20-ம் நூற்றாண்டில் ஒரு முறையான அமைப்பாக உருவெடுத்தது. போர் நேரத்தில் போரில் ஈடுபடாத பொதுமக்களை பாதுகாப்பது என்பது பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது. பழமையான நகரங்களில் சுவர் கோட்டைகள், மறைவிடங்கள் மற்றும் முற்றுகைக்கு எதிரான திட்டங்கள் இருந்தன. இவை அனைத்தும் சிவில் பாதுகாப்பின் ஆரம்ப வடிவங்களாகும். முதல் உலகப்போரின் போது, குறிப்பாக இங்கிலாந்தில் செப்பலின் குண்டுவீச்சுகள் போன்ற வான்வழி தாக்குதல்களின் அனுபவங்கள், பொதுமக்கள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளின் அவசியத்தை தெளிவுபடுத்தின. தொடர்ந்து, சில அடிப்படை வான்வழி எச்சரிக்கை நடவடிக்கைகள் உருவாகத் தொடங்கின.
1920-களிலும் 1930-களிலும், எதிர்காலப் போர்களில் வான்வழி குண்டுவீச்சுகள் முக்கியமான அபாயமாக உருவெடுக்கும் என பல நாடுகள் முன்னே பார்த்தன. உதாரணமாக, இங்கிலாந்து 1930-களின் இறுதியில் தனது Air Raid Precautions (ARP) என்ற பாதுகாப்பு முறையை அமைத்தது. மற்ற நாடுகளும் பொதுமக்களை பாதுகாக்கும் திட்டங்களை உருவாக்கத் தொடங்கின.
ஆனால் 2-ம் உலகப் போர்வரை நவீன சிவில் பாதுகாப்புத் திட்டங்கள் முழுமையாக அமைக்கப்படவில்லை. அப்போதுதான், சிவில் பாதுகாப்பு உலகளாவிய, பரந்த அளவிலான முயற்சியாக உருவெடுத்தது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சோவியத் ஒன்றியம் போன்ற நாடுகள் விரிவான சிவில் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கின. குண்டுவீச்சுகளுக்கு எதிரான மறைவிடங்கள் கட்டப்பட்டன, வெளியேற்றத் திட்டங்கள் மூலம் (லண்டனிலிருந்து கிராமங்களுக்கு குழந்தைகளை அனுப்புதல் போன்ற) கோடிக்கணக்கான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தன்னார்வலர்களுக்கு தீயணைப்பு, முதலுதவி மற்றும் குண்டு செயலிழத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.
குளிர்போர் காலத்தில், கவனம் அணு மிரட்டல்களுக்குத் திருப்பப்பட்டது. பல நாடுகள் புதிய சிவில் பாதுகாப்பு உத்திகளை உருவாக்கின. இதில் அணுகதிர் பாதுகாப்பு மறைவிடங்கள் (fallout shelters), எச்சரிக்கை அமைப்புகள் (உதா: சைரன்கள்) மற்றும் பொதுமக்கள் நாடக ஒத்திகைகள் ஆகியவை அடங்கும். இன்றைய சூழலில், ராணுவ மிரட்டல்களைவிட இயற்கை பேரழிவுகள், பயங்கரவாதம் மற்றும் தொழில்நுட்ப விபத்துகள் போன்றவற்றுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதனால், சிவில் பாதுகாப்பு அமைப்புகள் அவசர நிலை மேலாண்மை (அ) பேரழிவுகளுக்கான அபாய குறைப்பு அமைப்புகளாக பரந்த வடிவம் பெற்றுள்ளன.
இந்தியாவின் முதல் சிவில் பாதுகாப்பு தயாரிப்பும், அதற்கான நாடக ஒத்திகைகளும் பிரிட்டிஷ் இந்தியா காலத்திய 2-ம் உலகப் போருக்கு தொடர்புடையவை சுதந்திர இந்தியாவில், இது ஆரம்பத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சிவில் பாதுகாப்பு நடவடிக்கை தேவையை விழிப்புணர்வுடன் உணர்த்துவதிலும், முக்கியமான நகரங்கள் மற்றும் நகராட்சிகளுக்கான "Civil Defence Paper Plans" தயாராக வைத்திருக்கும்படி அறிவுறுத்துவதிலும் மட்டுமே இருந்தது.
ஆனால், 1962-ம் ஆண்டு சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் 1965-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போர் ஆகியவை, சிவில் பாதுகாப்பு தொடர்பான கொள்கையும் அதன் பரப்பளவும் மீண்டும் சிந்திக்கச் செய்தன. இதன் விளைவாக, 1968-ம் ஆண்டு சிவில் பாதுகாப்பு சட்டம் (Civil Defence Act, 1968) அமலுக்கு வந்தது. பின்னர், 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போர், ஏற்கனவே நிறுவப்பட்ட இந்த சட்டமும், அதன் கீழ் உருவான அமைப்புகளும் பொதுமக்களின் உயிர்களை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றின.
அதற்குப் பின்பு, அரசு கொள்கையின் படி, வகைப்படுத்தப்பட்ட நகரங்கள் மற்றும் பகுதிகளை திட்டமிட்டு மறு பரிசீலனை மற்றும் புதுப்பித்தல் செய்யப்படுகிறது. இந்த வகைப்படுத்தலுக்கான முக்கிய அடிப்படை அளவுகோல் என்றால், அந்த பகுதியின் பாதுகாப்பு அபாய நிலை (threat perception) ஆகும்.
1985 வரை, அனைத்து சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் முக்கியமாக பாரம்பரிய ஆயுதங்களால் ஏற்படும் மிரட்டல்களைக் கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தன. இதன்பின்னர், அரசு அணு ஆயுத மிரட்டல்களையும் சிவில் பாதுகாப்பு திட்டங்களில் இணைக்கத் தொடங்கியது. சமீப காலங்களில், இயற்கை பேரழிவுகளும் (புயல், நிலநடுக்கம், வெள்ளம் போன்றவை) சிவில் பாதுகாப்பு மாவட்டங்களை வகைப்படுத்தும் அரசின் தரவுகளிலும் திட்டங்களிலும் பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.