Ajoy Sinha Karpuram
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி செவ்வாய்க்கிழமை மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட (UCC) மசோதாவை தாக்கல் செய்தார். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பி.தேசாய் தலைமையிலான அரசு நியமித்த குழு பிப்ரவரி 2ஆம் தேதி வரைவைச் சமர்ப்பித்த பிறகு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: How the Uniform Civil Code came to be included in the Indian Constitution
இந்த சட்டம் திருமணம், வாரிசு, விவாகரத்து மற்றும் தத்தெடுப்பு போன்ற தனிப்பட்ட சட்ட விவகாரங்களை அனைத்துச் சமூகங்களுக்கும் ஒரே மாதிரியாக நிர்வகிக்கும்.
2022 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக உத்தரகாண்டில் பா.ஜ.க.,வின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது. இதேபோன்ற மசோதாக்கள் விரைவில் குஜராத் மற்றும் அஸ்ஸாம் சட்டசபைகளிலும் சமர்ப்பிக்கப்படலாம்.
பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாக்குறுதி இந்திய அரசியலமைப்பின் 44 வது சட்டப் பிரிவில் இருந்து வருகிறது, "இந்தியாவின் பிரதேசம் முழுவதும் குடிமக்களுக்கு ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைப் பாதுகாக்க அரசு முயற்சிக்கும்" என்று சட்டப்பிரிவு 44 கூறுகிறது.
இந்த சட்டப் பிரிவு நவம்பர் 23, 1948 அன்று ஒரு உற்சாகமான விவாதத்திற்குப் பிறகு அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்போது பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் என்ன வாதங்கள் இருந்தன?
அகில இந்திய முஸ்லீம் லீக் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக அழுத்தம் கொடுத்தது
அகில இந்திய முஸ்லீம் லீக்கின் (AIML, பிரிவினைக்கு முந்தைய முஸ்லிம் லீக்கின் இந்தியப் பிரிவு) சட்டமன்ற உறுப்பினரான முகமது இஸ்மாயில் கான், வரைவு அரசியலமைப்பின் பிரிவு 35 (பின்னர் இது 44வது பிரிவு) க்கு கூடுதலாக பரிந்துரைத்து விவாதத்தைத் தொடங்கினார். "எந்தவொரு குழு, பிரிவு அல்லது மக்கள் சமூகமும் அத்தகைய சட்டத்தைக் கொண்டிருக்கும் பட்சத்தில் அதன் சொந்த சட்டத்தை விட்டுக்கொடுக்கக் கடமைப்பட்டிருக்காது" என்ற விதியைச் சேர்க்க அவர் வலியுறுத்தினார்.
ஒரு மதச்சார்பற்ற அரசு நீண்டகால மத நடைமுறைகளில் தலையிடக்கூடாது என்று இஸ்மாயில் வாதிட்டார், ஏனெனில் அது நாட்டில் அதிருப்தியை வளர்க்கும் மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்று கூறினார்.
பி.போக்கர் சாஹிப் பகதூரும் இஸ்மாயில் முன்வைத்த திருத்தத்திற்கு ஆதரவாகப் பேசினார், "இது போன்ற ஒரு அமைப்பு (அரசியலமைப்பு சபை) மத உரிமைகள் மற்றும் நடைமுறைகளில் தலையிட்டால், அது கொடுங்கோன்மை ஆகும்," என்று கூறினார்.
மற்றொரு AIML உறுப்பினர் நஜிருதீன் அஹ்மத் இதேபோன்ற, ஆனால் இன்னும் விளக்கமான விதியை அறிமுகப்படுத்த முன்மொழிந்தார்: “சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட எந்தவொரு சமூகத்தின் தனிப்பட்ட சட்டமும், யூனியன் சட்டமன்றம் சட்டத்தால் தீர்மானிக்கக்கூடிய விதத்தில் உறுதிசெய்யப்பட்ட சமூகத்தின் முன்கூட்டிய ஒப்புதல் இல்லாமல் மாற்றப்படாது.”
வரைவு அரசியலமைப்பின் பிரிவு 19 (பின்னர் இது பிரிவு 25 ஆக மாறியது) கீழ் பொது சிவில் சட்டம் மத சுதந்திரத்துடன் மோதுகிறது என்று அஹ்மத் வாதிட்டார். "சட்டப் பிரிவு 19 இல் கொடுக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை உடைக்க" அரசுக்கு இடமளிப்பதன் மூலம் பொது சிவில் சட்டம் மத சுதந்திரத்தை "தவிர்க்கும்" என்று அவர் கூறினார்.
பொது சிவில் சட்டங்களை அமல்படுத்துவது தவிர்க்க முடியாதது என்று அஹ்மத் நம்பினார்.
எவ்வாறாயினும், தனிப்பட்ட சட்டங்களில் எந்தவொரு தலையீடும் "படிப்படியாக இருக்க வேண்டும் மற்றும் காலத்தின் முன்னேற்றத்துடன் முன்னேற வேண்டும்" மற்றும் "சம்பந்தப்பட்ட மக்களின் ஒப்புதலுடன்" செய்யப்பட வேண்டும் என்று அஹ்மத் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் பொது சிவில் சட்டத்தை ஆதரித்தனர்
காங்கிரஸ் உறுப்பினரும், அரசியலமைப்புச் சபை வரைவுக் குழுவின் உறுப்பினருமான கே.எம் முன்ஷி, பொது சிவில் சட்டம் கொடுங்கோன்மையுடையது என்ற கருத்தை எதிர்த்தார். மத நடைமுறைகளில் தலையிடாமல் இருக்க அரசு முயற்சி செய்ய வேண்டும் என்றாலும், சில விஷயங்கள் மதச்சார்பற்ற சட்டத்தால் நிர்வகிக்கப்பட வேண்டும், மதங்களால் அல்ல என்று அவர் கூறினார்.
பரம்பரை மற்றும் வாரிசுரிமை போன்ற விஷயங்கள் தனிப்பட்ட மதச் சட்டங்களின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்டால், பாகுபாட்டுக்கு எதிரான அடிப்படை உரிமை இருந்தபோதிலும் பெண்கள் ஒருபோதும் சமமாக நடத்தப்பட மாட்டார்கள் என்று முன்ஷி சுட்டிக்காட்டினார். "எனவே, இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டம் இருக்கக்கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை," என்று முன்ஷி கூறினார்.
வரைவுக் குழுவின் மற்றொரு உறுப்பினரான அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயர், பொது சிவில் சட்டம் அதிருப்தியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் என்ற கருத்துக்கு எதிராகப் பேசினார். மாறாக, பொது சிவில் சட்டத்தின் நோக்கம், சமூகங்களுக்கிடையில் வேறுபாடுகளுக்கு பங்களிக்கும் காரணிகளை அகற்றுவதன் மூலம் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை அடைவதாகும், என்று கூறினார்.
வரைவுக் குழுவின் தலைவரான டாக்டர் பி.ஆர் அம்பேத்கர், திருமணம் மற்றும் வாரிசு தொடர்பான தனிப்பட்ட சட்டங்களின் "சிறிய மூலையை" தவிர்த்து, "மனித உறவின் அனைத்து அம்சங்களுக்கும்" ஒரே மாதிரியான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன, எனவே பொது சிவில் சட்டத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். UCC நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமா இல்லையா என்பதை வாதிடுவது மிகவும் தாமதமானது என்றும் கூறிய அம்பேத்கர், ஏனெனில் இது ஏற்கனவே பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது, என்றும் கூறினார்.
அம்பேத்கர், சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு சில உறுதிமொழிகளை வழங்கினார். சட்டப்பிரிவின் மொழியில் கவனம் செலுத்தி, "அரசு முயற்சிக்கும்..." என்ற வார்த்தைகளைச் சேர்ப்பது சம்பந்தப்பட்ட சமூகங்களின் நலன்களைப் பாதுகாக்கிறது என்று கூறினார். அனைத்து குடிமக்கள் மீதும் பொது சிவில் சட்டம் திணிக்கப்பட முடியாது என்பதை இந்த வார்த்தைகள் உறுதி செய்வதாகவும், சட்டத்திற்கு கட்டுப்படத் தயாராக இருப்பதாக அறிவிக்கும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அம்பேத்கர் வாதிட்டார்.
இந்த இறுதி வாதங்களுடன், முகமது இஸ்மாயில் கான் மற்றும் நசிருதீன் அஹ்மத் முன்மொழிந்த திருத்தங்களுக்கு எதிராக சட்டமன்றம் வாக்களித்தது மற்றும் இன்று நாம் அறிந்த அரசியலமைப்பின் 44 வது பிரிவை ஏற்றுக்கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“