/tamil-ie/media/media_files/uploads/2019/08/IE-KERALA-RAINS.jpg)
Explained Article : cliamte change and Indian Monsoon, confusion regarding indian monsson
அதிகாரப் பூர்வமாக கருதப்படும் பருவமழைக் காலம் முடிவடைந்து ஒரு வாரக்காலம் ஆனாலும், இன்னும் இந்தியாவில் பல பகுதிகளில் மழை பெய்து தான் வருகிறது. உதாரணமாக, பாட்னா மற்றும் புனே, இந்த செப்டம்பர் மாதத்தில் இயற்கைக்கு மாறான வெள்ளத்தைக் கண்டன. மேலும், பருவக் காற்று பின்வாங்குதல் செயல்முறை இன்னும் அங்கு தொடங்கவே இல்லை. இந்த ஒருக் காரணத்தைக் கொண்டு பார்த்தால், கடந்த ஆண்டிடை விட இந்த வருட பருவக் காலம் சற்று வித்தியாசமாகிறது என்றே சொல்ல வேண்டும்.
மழைப்பொழிவில் ஏற்படும் மாற்ற்கங்கள்:
இந்த ஜூன் மாதத்தில் மழையின் பற்றாக்குறை 33 சதவீதம் குறைவாக இருந்த நிலையில் தான் ஜூலையில் பருவமழை தொடங்கியது . அடுத்து வந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் அடித்து நொறுக்கியது.செப்டம்பர் மாதத்தில் வழக்கமான இயல்பைக் காட்டிலும் 152 சதவீதம் அதிகாமான மழை இந்தியாவில் பதிவானது. கடந்த 1917 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இயல்பை தாண்டி 165 சதவீதம் பதிவானதிற்கு பிறகு தற்போது தான் இது போன்ற சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் இரண்டையும் சேர்த்து பதிவான மலையின் அளவு வழக்கமான இயல்பை விட 130 சதவீதம் அதிகமாகும். 1931ம் ஆண்டிற்கு பின் இப்போது தான் ஜூன் மாதத்தில் 33 சதவீத பற்றாக்குறையில் ஆரம்பித்து இயல்பை தாண்டி( 1௦௦ %) மழைக் கொட்டி தீர்த்தத நிகழ்வு தற்போது தான் நடந்தேறியுள்ளது.
மழையின் அளவில் மட்டும் இங்கு மாற்றம் ஏற்படவில்லை, மாறாக இந்தியாவின் பருவமழை தொடர்பான நமது புரிதல்களும் குழப்பத்த்தை நோக்கியே செல்கின்றன. பருவமழை ஆரம்பம், பின் வாங்குதல், பருவமழையின் நீளம், அதன் இடைவேளை காலம், வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு பருவாமழை தடயங்ககுள், வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற அனைத்தும் புரிந்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக, மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் பூமி அமைப்பு விஞ்ஞானியாக இருக்கும் ரகு முர்டுகுடே தெரிவிக்கின்றார்.
தீவிர மழை நிகழ்வுகள் :
இந்த வருட பருவமழைக் காலம் பல தீவிர மழை நிகழ்வுகளை கொண்டிருந்தது. குறிப்பாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, எம்.பி., குஜராத் மற்றும் மிக சமீபத்தில் பீகாரில் பல நாட்கள் நீடித்த பலத்த மழை பெய்தது என்பதை நாம் அறிந்திருப்போம்.
எது தீவிர மழை என்பதற்கான நிலையான வரையறை நம்மிடம் இன்று வரையில்லை. இந்திய வானிலை ஆய்வுத் மையம் (ஐஎம்டி) மழைப்பொழிவை அதன் தீவிரத்திற்கு ஏற்ப வகைப்படுத்திகிறது . 24 மணி நேரத்திற்குள் 12 செ.மீ க்கும் அதிகமான மழைப்பொழிவு மிகவும் கனமான மழை எனவும், அதே 24 மணி நேரத்திற்குள் 25 செ.மீ க்கும் அதிகமான மழைப்பொழிவு இருந்தால் அதை மிகவும் கடினமான மழை நிகழ்வு என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறது .
ஐஎம்டி இந்த ஆண்டில் மட்டும் 560 க்கும் மேற்பட்ட தீவிர மழை நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் காணப்பட்டதை விட அதிகமாகும் . எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டில் வெறும், 321 தீவிர மழை நிகழ்வுகள் பதிவாகின, அதற்கு முந்தைய ஆண்டுகளில் அதைவிடவும் குறைவான எண்ணிக்கையிலே இருந்தன.
"காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுபோன்ற தீவிர மழைநிகழ்வுகள் அதிகரித்து தான் வருகின்றன. இந்த மாற்றங்கள் அறிவியல் இலக்கியத்திலும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் சாதாரண வெப்பநிலை அல்லது மழையின் தன்மையில் ஏற்படும் மாற்றம் மென்மையாகவோ, தெளிவான முறையிலோ வெளிப்படாது, மாறாக.... தீவிர மழை நிகழ்வுகளின் எண்ணிக்கையால் தான் காலநிலையின் மாற்றம் வெளிப்படும் . மேலும் இந்த அதிகரிப்புகள் மென்மையாகவும் , நிதானமாகவும் இருக்க வாய்ப்பில்லை. மேலும், இந்த தீவிர மழை கணிக்க முடியாததாகவும் , ஒழுங்கற்றதாக இருக்குமென்று, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் மையத்தின் பேராசிரியர் கோவிந்தசாமி பாலா கூறியுள்ளார்.
வழக்கத்திற்கு மாறான செப்டம்பர் மழை :
செப்டம்பர் மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்ததையே இந்த ஆண்டு பருவமழையின் தனித்துவமான அம்சம் என்று சொல்ல வேண்டும் .170.2 மிமீ மழை பெய்ய வேண்டிய மாதத்தில் 259.3 மி.மீ மழை பெய்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பொதுவாக, செப்டம்பர் மாதத்தில் பருவமழை வடஇந்தியாவில் இருந்து பின்வாங்கும். ஆனால். அக்டோபர் மாதம் வந்தும் இன்னும் பின்வாங்கும் நிகழ்வு நடந்தேறவில்லை. கடந்த 1961-ம் ஆண்டு தான் அக்டோபர் 1 - ம் தேதி பருவமழை பின்வாங்கியது மிகப்பெரிய தாமதமாக கருதப்பட்டு வந்தது. ஆனால், இந்த வருடம் அக்டோபர் 10-ம் தேதி தான் வடஇந்தியாவில் இருந்து பருவமழை பின்வாங்கும் நிகழ்வு தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் ஐ.ஐ.எஸ்.சி.யில் உள்ள காலநிலை மாற்றத்திற்கான புகழ்பெற்ற விஞ்ஞானி ஜே.சீனிவாசன் இது குறித்து கூறுகையில், " கடைசியாக, 1917- ம் ஆண்டில் தான் இந்த அளவிற்கு செப்டம்பர் மாதத்தில் மழை பெய்தது, ஆனால் அது லாநினா ஆண்டாக இருந்தது. லா நினா, பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில், கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக குளிர்ச்சியாக மாறும் நிகழ்வு. இந்த லா நினா நிகழ்வு, இந்திய துணைக் கண்டத்தில் பருவ மழையை வலுப்படுத்தும் என்று விஞ்ஞானிகளால் அறியப்படுகிறது.
ஆனால், இந்த வருடம் அது போன்ற , லா நினா நிகழ்வு ஏற்படவில்லை. ஆனால், இந்த வருடம் ஒரு பலவீனமான எல் நினோவுடன் தொடங்கியது . லா நினாவின் எதிர் மறையானது தான் எல் நினோ. எல் நினோ இந்திய பருவமழையில் எதிர்மறையான தாக்கத்தைத் தான் ( வறட்சியைத் தான்)ஏற்படுத்தும், "என்று தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், லா நினா இல்லை என்றாலும், இந்தியப் பெருங்கடல் டைபோல் ( Indian Ocean Dipole) செப்டம்பர் மாத கடுமையான மழைக்கு பங்களித்திருக்கலாம் என்றும் சீனிவாசன் கூறினார்.
பெருங்கடல் அமைப்புகள்:
இந்தியப் பெருங்கடல் டைபோல் என்பது பசிபிக் பெருங்கடலில் காணப்பட்ட ENSO (லா நினா, எல் நினா இரண்டையும் சேர்த்து சொல்வது ) வைப் போன்று இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் ஒரு வானிலை நிகழ்வாகும்.
இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட வெப்பமாகவோ குளிராகவோ இருந்தால் இந்தியப் பெருங்கடல் டைபோல் விளைவு என்று கருதப்படலாம். இந்த மாற்றம் பிராந்திய வளிமண்டலத்தையும் , வானிலை முறைகளையும் பாதித்து இந்திய பருவமழையில் மாற்றத்தை ஏற்படுத்திகிறது.
ஆனால், இந்தியப் பெருங்கடல் டைபோலுக்கும், ENSO விற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஒரு நேரத்தில் எல் நினோ அல்லது லா நினா நிலை ஏற்படாது, ஆனால் டைபோளின் போது, இந்தியப் பெருங்கடல் ஒரே நேரத்தில் சூடான மற்றும் குளிர்ந்த நிலைமைகளை அனுபவிக்கின்றது. எனவே தான் டைபோல் என்றழைக்கப்படுகிறது. இந்த துருவங்களில் ஒன்று அரேபிய கடலிலும் , மற்றொன்று இந்தோனேசியாவின் தெற்கே இந்தியப் பெருங்கடலிலும் அமைந்துள்ளது .
கிழக்கு துருவத்தை விட மேற்கு துருவம் வெப்பமாக இருந்தால், இந்தியப் பெருங்கடல் டைபோல் பாசிடிவ் என்று பொருள், கிழக்கு துருவத்தை விட மேற்கு துருவம் குளிர்ச்சியாக இருந்தால் இந்தியப் பெருங்கடல் டைபோல் நெகடிவ் என்று பொருள் கொள்ளப்படுகிறது .
இந்தியப் பெருங்கடல் டைபோலுக்கும், ENSO விற்கும் தொடர்பில்லாமல் இல்லை. இந்தியப் பெருங்கடல் டைபோல் நெகடிவாக இருக்கும் பொது பசிபிக் கடலில் எல் நினோ உருவாகியிருக்கும். அதேபோன்று, இந்தியப் பெருங்கடல் டைபோல் பாசிட்டிவாக இருக்கும் போது பசிபிக் கடலில் எல் நினோ உருவாகும் தன்மை ஏற்படும்.
பல விஞ்ஞானிகள் இன்டர்ரோபிகல் கன்வெர்ஜென்ஸ் மண்டலம் (ITCZ ) வைத்தும் பருவமழையை விவரிக்க விரும்புகிறார்கள். பருவ மழைக் காலங்களில், இந்த ஐடிசிஇசட் இந்திய துணைக் கண்டத்தின் மீது படந்திருக்கும். செப்டம்பர் மாதத்திற்குள், இந்தியா துணைக் கண்டத்தில் வெப்பநிலை குறையத் தொடங்கும் போது, இந்த ஐ.டி.சி.இசட் இந்திய நிலப்பரப்பின் தெற்கு நோக்கி நகர்ந்து, பூமத்திய ரேகை நோக்கி பயணிக்கும். ஆனால், இந்த ஆண்டு ஐ.டி.சி.இசட் , பூமத்திய ரேகை நோக்கி பயணிக்கும் செயல்முறை இன்னும் தொடங்கப் படாமல் உள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பரில், வடக்கு ஹெமிஸ்பியர் தெற்கு ஹெமிஸ்பியரை விட மிகவும் வெப்பமாக இருந்திருக்கிறது, இதனால் தான் ஐடிசிஇசட் வடக்கு ஹெமிஸ்பியரில் வழக்கத்தை விட நீண்ட காலமாக இருப்பதற்கு காரணமாக இருக்கலாம், என்று சீனிவாசன் விளக்கினார்.
வறட்சியான வடகிழக்கு:
கடந்த 19 ஆண்டுகளில் 18 வது முறையாக, வடகிழக்கில் 100 சதவீதத்திற்கும் குறைவான மழை பெய்துள்ளது. வடகிழக்கு (north-east ) பகுதி "வரட்சியான சகாப்தத்திற்குள்" கடந்து செல்வதை இது குறிக்கிறது என்று ஐஎம்டி கூறியுள்ளது.
ஒவ்வொரு வருடம் வித்தியாசப்படும் என்பதை தாண்டி இந்தியப் பருவமழை 30 ஆண்டு மாறுபாடு சுழற்சியையும் கொண்டுள்ளது. அதவாது, இந்தியாவின் பருவமழை 30 ஆண்டுகளுக்கு அதிகமான மழையும், அதிகமான வறட்சியும் மாறும் தன்மை கொண்டது. வடகிழக்கு தற்போது இந்த வறட்சி சுழற்சியில் சிக்கியுள்ளதாகவும் ஐஎம்டி தெரிவித்துள்ளது.
புவி வெப்பமடைதலின் காரணமாக, தீவிரமான மழை நிகழ்வுகளை நாம் கண்டுவந்துக் கொண்டிருக்கின்றோம். இவை மேலும் தீவிரமாகலாம், என்பதே தற்போதைய விஞ்ஞானத்தின் புரிதலாய் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.