Advertisment

புக்கர் பரிசு இறுதிப் பட்டியலில் பெருமாள் முருகன்: அதி முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?

இந்திய மொழிப் படைப்புகள் ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் அதிக அங்கீகாரத்தைப் பெற்று வரும் நேரத்தில் 'பைர்' நாவலுக்கான பரிந்துரை வந்துள்ளது. 2022-ம் ஆண்டில், 'ரெட் சமாதி'க்காக சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்தி நாவலாசிரியர் கீதாஞ்சலி ஸ்ரீ ஆவார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Who is Perumal Murugan, pyre, Pookkuzhi, novel, biography, booker prize, புக்கர் பரிசு 2023, புக்கர் பரிசு இறுதிப்பட்டியல், எழுத்தாளர் பெருமாள் முருகன், பூக்குழி நாவல், 2023, what is longlist, prize date, tamil authors, books on caste, current affairs, india news, express explained

எழுத்தாளர் பெருமாள் முருகன்

இந்திய மொழிப் படைப்புகள் ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் அதிக அங்கீகாரத்தைப் பெற்று வரும் நேரத்தில் 'பைர்' நாவலுக்கான பரிந்துரை வந்துள்ளது. 2022-ம் ஆண்டில், 'ரெட் சமாதி'க்காக சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்தி நாவலாசிரியர் கீதாஞ்சலி ஸ்ரீ ஆவார்.

Advertisment

தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவல், ஆங்கிலத்தில் 'பைர்' (Pyre) என்ற பெயரில் அனிருத் வாசுதேவன் மொழிபெயர்த்துள்ளார். இந்த நாவல் சர்வதேச புக்கர் பரிசு 2023-க்கான இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இது புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் நாவல். இந்தப் பட்டியல் இந்த வார தொடக்கத்தில் மார்ச் 14-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

1980-களில் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களின் வாழ்க்கைப் பின்னணியில் அமைந்த இந்த புத்தகம், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட வெவ்வெறு சாதிகளைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதியினர் சந்திக்கும் சாதி அடிப்படையிலான வன்முறையைப் பற்றி ஆராய்கிறது.

முருகனின் புத்தகத்தைப் பற்றிப் பேசிய பரிசுக்கான நடுவர்கள், “பெருமாள் முருகன் ஒரு சிறந்த ஆராய்ச்சி வல்லுநர், குறிப்பாக, சாதி வெறி மற்றும் வன்முறையின் ஆழமான அழுகல், கட்டுக்கதைகளின் ஃப்ளாஷ்களுடன், அவரது நாவல் ஒரு குறிப்பிட்ட மற்றும் உலகளாவிய கதையைச் சொல்கிறது: பயமும் மற்றவர்களின் அவநம்பிக்கையும் எவ்வளவு எரியக்கூடியது என்பதைக் கூறுகிறது.

இந்த ஆண்டு புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் மொத்தம் 13 நாவல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் தவிர, பல்கேரியன் மற்றும் கேட்டலான் மொழிகள் இந்த ஆண்டு அறிமுகமாகியுள்ளன. ஜோர்ஜி கோஸ்போடினோவ் எழுதிய ‘டைம் ஷெல்டர்’ பல்கேரிய நாவல், ஏஞ்சலா ரோடெல் மொழிபெயர்த்துள்ளார். அதே சமயம், ஈவா பால்டாசரின் ‘போல்டர்’ ஜூலியா சான்செஸ் மொழிபெயர்த்த கேட்டலான் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது.

50,000 யூரோ அதாவது ரூ 50 லட்சம் மதிப்புள்ள புக்கர் பரிசு, உலகில் எந்த மொழியில் எழுதப்பட்ட ஒரு நாவல் அல்லது சிறுகதை தொகுப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அந்த நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படுகிறது. பரிசுத் தொகை வென்ற புத்தகத்தின் ஆசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. 6 புத்தகங்களின் இறுதிப் பட்டியல் ஏப்ரல் 18-ம் தேதியும், வெற்றியாளர் மே 23ம் தேதியும் அறிவிக்கப்படுவார்கள்.

யார் இந்த எழுத்தாளர் பெருமாள் முருகன்?

பெருமாள் முருகன் ஒரு நாவலாசிரியர், தமிழ் இலக்கியப் பேராசிரியர். இவர் 10 நாவல்கள் (அவற்றில் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன), தலா 5 சிறுகதைகள் மற்றும் கவிதை தொகுப்புகள், 10 கட்டுரைத் தொகுப்புகள் மொழி மற்றும் இலக்கியம் தொடர்பான புத்தகங்களை எழுதியுள்ளார். பல புனைவுகள் மற்றும் புனைவு அல்லாத தொகுப்புகளைத் எடிட்டிங் செய்துள்ளார். ‘நிழல் முற்றத்து நினைவுகள்’ (2013) என்ற நினைவுக் குறிப்பையும் எழுதியுள்ளார்.

அவரது படைப்புகள் தமிழக கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கை, அவர்களின் மரபுகள் மற்றும் சமூக படிநிலைகளை விவரிக்கிறது. குறிப்பாக, அவரது பல புத்தகங்கள் சாதி அமைப்பு, ஒடுக்குமுறை, வன்முறை மூலம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விமர்சிக்கின்றன. அவருடைய மூன்றாவது நாவலான 'கூலமாதாரி' (2000), வி கீதாவால் ஆங்கிலத்தில் 'Seasons of the Palm' (2004) என மொழிபெயர்க்கப்பட்டது. இது கொத்தடிமை உழைப்பு மற்றும் 'உயர்-சாதி' என்று அழைக்கப்படுபவர்களால் 'தாழ்த்தப்பட்ட' மக்கள் என்று அழைக்கப்படுபவர்களை சுரண்டுவதைப் பற்றி பேசுகிறது.

புத்தக விமர்சனம்: பைர் | தவறான காதல்

புனைவு தவிர, அவரது அறிவார்ந்த பணி மேற்கு தமிழ்நாடு, தென்கிழக்கு கர்நாடகா மற்றும் கிழக்கு கேரளாவின் பகுதிகளை உள்ளடக்கிய கொங்கு நாடு பகுதியின் இலக்கியங்களில் கவனம் செலுத்துகிறது. மிக முக்கியமாக, அவர் கொங்கு நாட்டுப்புறக் கதைகள், குறிப்பாக அண்ணமார் சாமி - ஒரு ஜோடி நாட்டுப்புற தெய்வங்கள் பற்றிய நாட்டுப் புறப்பாடல்களைப் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்துள்ளார். அவரது ஆவணப்படுத்தல் முயற்சிகள் பல்வேறு கொங்கு இலக்கிய நூல்களை மறுபதிப்பு செய்வதற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

அவர் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பெருமாள் முருகன் அவருக்காக ஒரு கவிதையை எழுதினார், ‘கையால் மலம் அள்ளுபவர்கள்’ என்ற தலைப்பில் எழுதிய பாடல் அந்த நேரத்தில் பாரம்பரிய கர்நாடக இசை உலகத்தில் கேள்விப்படாத ஒரு பிரச்சினை அது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய எழுத்தாளர் பெருமாள் முருகன், “டி.எம். கிருஷ்ணா பாடுவதற்காக சமூகத்தைப் பற்றி ஏதாவது எழுதச் சொன்னார். இது சமூக உணர்வின் ஒரு பகுதியாக இருந்த ஒரு பிரச்சினை என்பதால், இதை எந்தக் கோணத்தில் அணுகுவது என்று எனக்குத் தெரியாததால், இது எனக்கு ஆறு மாதங்கள் பிடித்தது. இறுதியில், கீர்த்தனையின் மையமாக 'கைகளை' கொண்டு செல்ல முடிவு செய்தேன், ஏனென்றால், கைகள் பொதுவாக உயர்வாண விஷயங்களை செய்யக்கூடிய ஒன்றாக கருதப்படுகின்றன. அதே கைகள் மலத்தை எடுக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?” என்று கூறினார்.

பெருமாள் முருகன் இறந்துவிட்டார் சர்ச்சை

பெருமாள் முருகன் படைப்புகளின் தன்மை ஆர்.எஸ்.எஸ் போன்ற வலதுசாரி குழுக்கள் உட்பட சமூகத்தின் பழமைவாத பிரிவினரின் எதிர்ப்பை அடிக்கடி சந்தித்தது. 2014-ம் ஆண்டு பெருமாள் முருகன் தனது முகநூல் பதிவில், “எழுத்தாளர் பெருமாள் முருகன் இறந்துவிட்டார். அவர் கடவுள் இல்லை. எனவே, அவர் உயிர்த்தெழுப்பப்பட மாட்டார். இனிமேல், ஆசிரியர் பி. முருகன் மட்டுமே வாழ்வார்.” என்று எழுதினார்.

அனிருத்தன் வாசுதேவனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ‘மாதொருபகன்’ (2010) நாவல் மீதான எதிர்ப்புகளின் விளைவாக பெருமாள் முருகனின் இத்தகைய அறிவிப்பு வந்தது. மேற்குத் தமிழ்நாட்டின் செல்வாக்கு மிக்க இடைநிலை சாதியான கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகம், இந்த நாவலில் தங்கள் பெண்களை இழிவுபடுத்தியதாகவும், இந்து தெய்வத்தை இழிவுபடுத்தியதாகவும் குற்றம் சாட்டியது. மூத்த ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகளும் பெருமாள் முருகன் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்தினர்.

நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்ட ஒரு ‘அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம்’ இந்த முகநூல் பதிவுக்கு வழிவகுத்தது. அதே போல், பெருமாள் முருகன் தனது நாவலைத் திரும்பப் பெற ஒப்பந்தம் செய்திருந்தார். போராட்டத்தின் மற்றொரு விளைவு என்னவென்றால், பெருமாள் முருகன் நாமக்கல்லில் உள்ள அரசு கலைக் கல்லூரியின் பேராசிரியராக இருந்த வேலையை விட்டுவிட்டு, முதலில் சென்னைக்கும் பின்னர் ஆத்தூருக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

இருப்பினும், ஜூலை 2016-ல் சென்னை உயர் நீதிமன்றம் இந்த ‘அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம்’ சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது, மேலும், சாதிக் குழுக்களால் எழுத்தாளருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து கிரிமினல் வழக்குகளையும் ரத்து செய்தது. “எழுத்தாளர் அவர் சிறந்த படைப்புகளுக்காக உயிர்த்தெழுப்பப்படட்டும். எழுதுங்கள்” என்று நீதிமன்றம் கூறியது. 2017-ல், மாதொருபாகன் நூல் சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருது பெற்றது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், யாருக்கு எதிராக சாட்சியமளிப்பது என்று தனக்குத் தெரியாததால், மீண்டும் போராடவில்லை என்று பெருமாள் முருகன் கூறினார். “அரசின் பங்கைப் பார்க்க வேண்டும் என்றால், மற்ற இடங்களில் செய்வது போல, வேறு எதையும் விட சட்டம் ஒழுங்குக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நான் கூறுவேன். கடவுள் மற்றும் நம்பிக்கை பற்றிய அவர்களின் கவலைகளை நான் தீவிரமாக சந்தேகிப்பதால், சாதி-வகுப்பு குழுக்களை நான் புண்படுத்தவில்லை” என்று அவர் கூறினார்.

பெருமாள் முருகன் மேலும் கூறுகையில், “எனது மாணவர்கள் போராட்டங்களைத் திட்டமிட்டபோது, ​​எனது படைப்புகளுக்கு எதிராக அவர்கள் பயன்படுத்திய அதே மொழியை நாமும் பயன்படுத்தலாமா என்று அவர்களிடம் கேட்டேன். ஒருமுறை புத்தரிடம் யாரோ ஒருவர் அவரைத் திரும்பத் திரும்பத் தூற்றியதற்கு அவர் ஏன் பதிலளிக்கவில்லை என்று கேட்கப்பட்டது. அவர் அந்த அவமானங்களைப் பெறவில்லை என்று பதிலளித்தார், எனவே, அவை அவற்றை வீசியவர்களின் வசமே இருந்தன.” என்று கூறுகிறார்.

புக்கர் பரிசு இறுதிப் பட்டியல் ஏன் முக்கியமானது?

இந்திய மொழிப் படைப்புகள் அதிக நிறுவன அங்கீகாரத்தையும் ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் மக்கள் ஆதரவையும் பெற்று வரும் நேரத்தில் இந்தப் பரிந்துரை வருகிறது. 2022-ம் ஆண்டில், கீதாஞ்சலி ஸ்ரீ டெய்சி ராக்வெல்லால் ஆங்கிலத்தில் ‘Tomb of Sand’ என மொழிபெயர்க்கப்பட்ட ‘ரெட் சமாதி’க்காக சர்வதேச புக்கரை வென்ற முதல் இந்தி நாவலாசிரியர் ஆனார்.

‘பைர்’ புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறித்து பெருமாள் முருகன் பேசுகையில், “ஒரு தமிழ் நாவல் இறுதிப் பட்டியலில் இடம் பெறுவது இதுவே முதல் முறை. இது தமிழ் மொழிக்கு மிகவும் முக்கியமானது. இது என்னுடைய நாவல் என்பதனால் அல்ல, ஆனால், அந்தத் தேர்வானது இந்தியாவில் உள்ள தமிழ் இலக்கியத்திற்கான அங்கீகாரம் என்பதாலேயே குறிப்பிடத்தக்கது.” என்று கூறினார்.

மேலும், “ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகியவை இந்திய மொழிகளாகப் பேசப்படுகின்றன, மற்றவை பிராந்திய மொழிகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அது தவறு. நமது மொழிகளின் புத்தகங்கள் - தென்னாட்டு மொழிகள் மற்றும் வடநாட்டிலிருந்து வரும் ஹிந்தி அல்லாத மொழிகள் - சர்வதேச விருதுப் பட்டியலில் இடம் பெறும்போது அந்த மாதிரியான கருத்து மாறும,” என்று பெருமாள் முருகன் கூறினார்.

மேலும், பெருமாள் முருகன் படைப்புகளின் கருப்பொருள் குறிப்பிடத்தக்கது. இலக்கியம், சினிமா போன்ற கலை வடிவங்களில் சாதி, சாதி அடிப்படையிலான கொடுமைகளின் சித்தரிப்பு குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஆண்டுகளில் இங்கே ஒரு பெரிய எழுச்சியும் மற்றும் அதிக வரவேற்பு தரும் பார்வையாளர்கள் தோன்றிய போதிலும், இன்றுவரை பின்னடைவையும் தணிக்கையையும் சந்திக்கிறது. சாதி ஆணவக் கொலைகள் தொடர்ந்து செய்தியாகின்றன. இந்தச் சூழலில் ‘பைர்’ நாவல் புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பிடித்திருப்பது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Literature Perumal Murugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment