/indian-express-tamil/media/media_files/2025/09/15/president-and-governors-to-assent-to-bills-2025-09-15-14-13-37.jpg)
மசோதாக்களுக்கு ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவது தொடர்பான அதிகாரங்கள் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய முக்கியக் கேள்விகள் மீது உச்சநீதிமன்றம் நீண்ட விசாரணையை நிறைவு செய்து, தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் செய்ததை சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின் பின்னணியில், குடியரசுத் தலைவர் அரசியலமைப்பின் 143(1) பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை அதிகார வரம்பைக் கோரி இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
வழக்கமாக, பொது முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் அல்லது உண்மை தொடர்பான கேள்விகளில் குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்கலாம். நீதிமன்றத்தின் கருத்து "சுதந்திரமான அறிவுரை" மட்டுமே. எனினும், ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என்ற கேள்வி, நிர்வாகத்திற்கும் நீதித்துறைக்கும் இடையிலான மோதலாக மாறியுள்ளது.
இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை, அதன்பிறகு குடியரசுத் தலைவர் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும், நிர்வாக நடவடிக்கைகளைச் சரிபார்க்கும் நீதித்துறை தலையீடுகள் எந்த அளவுக்கு நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை சோதிப்பதாக அமையும். மேலும், இது 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 2 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பை நிலைநிறுத்துமா? என்பதையும் தீர்மானிக்கும். இந்த வழக்கு, மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் நீதித்துறை தலையீட்டை ஆதரிக்க, மத்திய அரசு அதனை எதிர்ப்பதுடன் ஒரு முக்கிய கூட்டாட்சி விவகாரமாகவும் மாறியுள்ளது. கடந்த 11 நாட்களுக்கு மேலாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள் மற்றும் எதிர்வாதங்களின் கண்ணோட்டம் இங்கே விளக்கப்பட்டுள்ளது.
மசோதா ஒப்புதல்: வாதங்களும் எதிர்வாதங்களும்
1. வழக்கை ஏற்றுக்கொள்வது தொடர்பான வாதம்:
மாநிலங்களின் வாதம்: மாநில அரசுகள், இந்த வழக்கை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தின. கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதுபோல் இந்த வழக்கு உள்ளது எனவும், இது 'முன்முடிவுகளை மதிக்காமல் நீதிமன்றத்தின் நேர்மையைச் சிதைக்கும்' முயற்சி என்றும் தமிழ்நாடு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.
மத்திய அரசின் வாதம்: சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அரசியலமைப்பின் 143-வது பிரிவின் கீழ் நீதிமன்றத்தின் ஆலோசனை அதிகார வரம்பு தனித்துவமானது என்றும், முந்தைய தீர்ப்புகள் இருந்தாலும் அரசியலமைப்புச் சட்ட சந்தேகங்களைத் தெளிவுபடுத்த பயன்படுத்தலாம் என்றும் வாதிட்டார்.
2. ஆளுநரின் அதிகாரங்கள்:
மாநிலங்களின் வாதம்: அரசியலமைப்பின் 163-வது பிரிவின் கீழ், ஆளுநர் மாநில அமைச்சரவையின் 'உதவி மற்றும் ஆலோசனைக்கு' கட்டுப்பட்டவர் என்று மாநிலங்கள் வாதிட்டன. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் விருப்பத்தை ஆளுநர் அபகரிக்க முடியாது என்பதை வலியுறுத்துகிறது.
மத்திய அரசின் வாதம்: ஆளுநர் பதவி 'தபால்காரர்' அல்லது 'காட்சிப் பொருள்' அல்ல என்று மத்திய அரசு வாதிட்டது. ஆளுநரின் சிறப்பு அதிகாரங்களை நீக்க விவாதங்கள் நடந்தபோதும், அது அரசியல் நிர்ணய சபையால் நிராகரிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டது. மத்திய அரசு, ஆளுநரின் பங்கு மாநில சட்டமன்றங்களுக்கு எதிரான சோதனையாக இருக்க வேண்டும் என்று வாதிட்டது.
3. ஆளுநரின் 'பாக்கெட் வீட்டோ' அதிகாரம்:
உச்சநீதிமன்றத்தின் ஏப்ரல் மாத தீர்ப்பு: ஆளுநர் ஒரு மசோதாவை காலவரையின்றி நிறுத்திவைப்பது 'பாக்கெட் வீட்டோ' ஆகும், இது அனுமதிக்கப்படாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மத்திய அரசின் வாதம்: ஒரு மசோதா காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டால், அது காலாவதியாகிவிடும் என்று மத்திய அரசு வாதிட்டது. மேலும், 1935 இந்திய அரசுச் சட்டத்தில் உள்ள அதே மொழிதான் அரசியலமைப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வாதிட்டது.
மாநிலங்களின் வாதம்: "எங்கள் ஆளுநர்கள் வைசிராய்கள் அல்ல" என்று கூறிய மாநிலங்கள், ஆளுநர்களுக்குக் காலனித்துவ காலத்திலிருந்து சில சிறப்பு அதிகாரங்கள் வேண்டுமென்றே அரசியலமைப்பில் இருந்து நீக்கப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டின.
4. காலக்கெடு நிர்ணயம் செய்வதில் நீதிமன்றத்தின் அதிகாரம்:
மத்திய அரசின் வாதம்: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு நீதிமன்றம் காலக்கெடு விதிப்பது, அரசியலமைப்பை நீதித்துறை திருத்துவது போன்றது என்றும், இது அரசியல் சாசன செயல்பாடுகளில் தலையிடுவது என்றும் மத்திய அரசு வாதிட்டது. அரசியலமைப்பு நிர்ணய சபை, ஒப்புதல் வழங்குவதற்கான காலக்கெடுவை (6 வாரங்கள்) நீக்கி, 'முடிந்தவரை விரைவில்' என்ற வார்த்தையை சேர்த்ததை சுட்டிக் காட்டியது.
மாநிலங்களின் வாதம்: கர்நாடகாவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், "முடிந்தவரை விரைவில்" என்ற வார்த்தை ஆளுநரின் கடமையில் 'அவசர உணர்வை' வெளிப்படுத்துகிறது என்றும், ஏப்ரல் மாதத் தீர்ப்பில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு, நீதித்துறை தலையீடு எப்போது ஏற்படும் என்பதை மட்டுமே குறிப்பதாக வாதிட்டார்.
5. மாநிலங்களின் அடிப்படை உரிமைகள்:
மத்திய அரசின் வாதம்: அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ், மாநிலங்கள் ரிட் மனுக்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதித்ததை மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது. 32-வது பிரிவு அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக மட்டுமே என்றும், மாநிலங்கள் தங்களுக்கு அடிப்படை உரிமைகளை கோர முடியாது என்றும் வாதிட்டது.
மாநிலங்களின் வாதம்: இதற்கு எதிராக, சிங்வி, அரசியலமைப்பை உருவாக்கியவர்களே ஆளுநர்களை மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான ஒரு முக்கியமான இணைப்பாகக் கருதினர் என்று வாதிட்டார். ஆந்திரப் பிரதேசம் போன்ற ஆளும் கூட்டணி கட்சிகளும், மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யும் உரிமை உண்டு என வாதிட்டது கவனிக்கத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.