Advertisment

கர்நாடக முஸ்லிம்களுக்கு ஓ.பி.சி ஒதுக்கீடு ரத்து; லிங்காயத், வொக்கலிகாவுக்கு முக்கியத்துவம்: புதிய மாற்றங்கள் என்ன?

கர்நாடகா பா.ஜ.க அரசு முஸ்லிம்களுக்கான ஓ.பி.சி ஒதுக்கீட்டை பறித்து, வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு வழங்கியுள்ளது. மேலும், எஸ்.சி, எஸ்.டி.,களுக்கு அதிக பங்குகளை வழங்கியுள்ளது. சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.,வின் வெற்றி வாய்ப்பு எப்படி?

author-image
WebDesk
New Update
Basavaraj Bommai

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை (புகைப்படம் Twitter.com/BSBommai)

Johnson T A

Advertisment

கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்கு (எஸ்.சி) அரசு வேலைகள் மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான விதிமுறைகளில் பசவராஜ் பொம்மை அரசு சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது.

100 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான 4% பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒதுக்கீட்டை ரத்து செய்ய அமைச்சரவை எடுத்த முடிவை மார்ச் 30 அன்று அரசாங்கம் அறிவித்தது, மற்றும் மாநிலத்தில் உள்ள இரண்டு ஆதிக்க சமூகங்களான லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகாக்களுக்கு அந்த முஸ்லிம் ஓ.பி.சி (OBC) ஒதுக்கீட்டை மறு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையும் படியுங்கள்: விற்பனை வரி மீதான அனுஷ்கா ஷர்மா மனு தள்ளுபடி; காப்புரிமை வழக்கு என்றால் என்ன?

முஸ்லிம்களை OBC அந்தஸ்தில் இருந்து மாற்றுவதற்கான புதிய அறிக்கைகள் அல்லது ஆய்வுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. முதல்வர் பசவராஜ் பொம்மையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், மத சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்று மட்டுமே கூறியுள்ளனர்.

மேலும், மார்ச் 24 அன்று, SCகளுக்கான ஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீட்டை நிர்ணயம் செய்ய அமைச்சரவை முடிவு செய்தது, இது 2012 முதல் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் அரசாங்கங்களால் கைவிடப்பட்ட சிக்கலான அரசியல் விவகாரம் ஆகும். இந்த விவகாரத்தை ஆய்வு செய்த அமைச்சரவை துணைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எஸ்.சி.,க்களுக்கான உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.

மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை (மார்ச் 29 அன்று) தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த முடிவுகள் வந்துள்ளன. முன்னதாக, அக்டோபர் 2022 இல், அரசு வேலைகள் மற்றும் கல்வியில் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC) மற்றும் பழங்குடியினருக்கான (ST) இட ஒதுக்கீட்டை முறையே 2% மற்றும் 4% உயர்த்தப்பட்டது.

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் 113 பெரும்பான்மை இடங்களை ஒருபோதும் கைப்பற்றாத பா.ஜ.க தனது எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த இடஒதுக்கீடு மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன.

2008 இல் 110 இடங்களை வென்றது மற்றும் 2018 இல் 104 இடங்களை வென்றது பா.ஜ.க.,வின் சிறந்த செயல்பாடாகும். பா.ஜ.க 2008 இல் சுயேட்சைகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் 2008 மற்றும் 2018 இல் காங்கிரஸ் மற்றும் JDS இல் இருந்து விலகி பெரும்பான்மையைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

1980களில் இருந்து கர்நாடகாவில் எந்தக் கட்சியும் தொடர்ந்து வெற்றி பெற்றதில்லை. மே 10ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் ஆட்சிக்கு எதிரான கடும் எதிர்ப்பை பா.ஜ.க எதிர்கொள்கிறது.

பா.ஜ.க.,வின் சமூகப் பொறியியல்

அக்டோபர் 9 ஆம் தேதி கொண்டாடப்படும் பழங்குடியின வால்மீகி நாயக்கர் சமூகத்தின் அடையாளமான மகரிஷி வால்மீகியின் பிறந்தநாளான வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, 2018 இல் SC மற்றும் ST ஒதுக்கீட்டை அதிகரிக்க காங்கிரஸ்-ஜே.டி.எஸ் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி நாகமோகன் தாஸ் கமிட்டியின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

கர்நாடகா பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு மற்றும் மாநிலத்தின் கீழ் உள்ள சேவைகளில் பணி நியமனங்கள் அல்லது பதவிகள்) மசோதா, 2022ஐத் தொடர்ந்து SC ஒதுக்கீடு 15% லிருந்து 17% ஆகவும், ST ஒதுக்கீட்டை 3% லிருந்து 7% ஆகவும் உயர்த்தப்பட்டது.

6% SC-ST இடஒதுக்கீடு அதிகரிப்பு, இந்திரா சாவ்னி வழக்கில் (1992) உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50% உச்சவரம்புக்கு மேல், கர்நாடகாவின் மொத்த இடஒதுக்கீடுகளை 56% (ஓ.பி.சி 32%, எஸ்.சி 17%, எஸ்.டி 7%) ஆகக் கொண்டு செல்வதால், நீதிமன்றங்களால் அவை ரத்து செய்யப்படுவதைத் தடுக்க அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் மாற்றங்களைச் சேர்க்குமாறு கர்நாடகா அரசாங்கம் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஐந்தரை மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 24, 2023 அன்று, முஸ்லிம்களை சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பாக அங்கீகரிப்பதை நிறுத்த அமைச்சரவை முடிவு செய்து, அவர்களின் 4% ஓ.பி.சி ஒதுக்கீட்டை லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகாக்களுக்கு சமமாகப் பிரித்து வழங்கியுள்ளது. வரும் தேர்தலில் ஆதிக்க சமூகங்களான லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகாக்களின் ஆதரவை பெற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2019 ஜனவரியில் நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு (103வது திருத்தம்) சட்டத்தால் உருவாக்கப்பட்ட பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) 10% ஒதுக்கீட்டின் கீழ் மட்டுமே முஸ்லிம்கள் இப்போது இடஒதுக்கீட்டைப் பெற முடியும். ஏழை (தகுதி அளவுகோல்களால் வரையறுக்கப்பட்டபடி) முஸ்லிம்கள் மட்டுமே EWS ஒதுக்கீட்டிற்குத் தகுதியுடையவர்கள், இது முன்பும் இருந்தது (விளக்கப்படத்தில் வகை II B); இருப்பினும், ஒவ்வொரு வருங்கால ஏழை முஸ்லீம் பயனாளியும் இப்போது மற்ற ஏழை முஸ்லீம்களுடன் மட்டுமல்லாமல் ஜைனர்கள், பிராமணர்கள், வைசியர்கள் போன்ற "மேல்" சாதிகள் என்று அழைக்கப்படும் அனைத்து உயர் சாதி ஏழைகளுடனும் போட்டியிடுவார்கள்.

முந்தைய ஒதுக்கீட்டு நடைமுறையில் பிரிவு I (II அல்ல) இன் ஒரு பகுதியாக இருந்த மிகவும் பின்தங்கிய ஏழு முஸ்லீம் துணை ஜாதிகளின் குழு, அதே பிரிவில் தொடர்ந்து உள்ளது, மேலும் அந்த குழுக்கள் 4% ஒதுக்கீட்டை தொடர்ந்து அனுபவிப்பார்கள்.

தற்செயலாக, பசவராஜ் பொம்மை அமைச்சரவை ஆரம்பத்தில் 10% EWS ஒதுக்கீட்டில் இருந்து 6%ஐ எடுத்து லிங்காயத் மற்றும் வொக்கலிகா ஒதுக்கீட்டை அதிகரிக்க முயன்றது, ஆனால் EWS ஒதுக்கீடு சமூகத்தில் பின்தங்கிய சமூகங்களுக்கு மட்டுமே என்பதாலும், வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகள் தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி வருவதாலும், அந்த யோசனையை கைவிட்டது.

மார்ச் 24 அன்று, கர்நாடக அமைச்சரவை SC உள் இடஒதுக்கீடு தொடர்பான நீதிபதி ஏ.ஜே சதாசிவா கமிஷனின் பரிந்துரைகளை நிராகரித்தது மற்றும் ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீட்டுக்கான அதன் சொந்த சூத்திரத்தைக் கொண்டு வந்தது.

சதாசிவா கமிஷன் மிகவும் பிற்படுத்தப்பட்ட SC 'இடது' பிரிவினருக்கு 6%, பிற்படுத்தப்பட்ட SC 'வலது' பிரிவினருக்கு 5%, SC 'தீண்டக் கூடிய' பிரிவினருக்கு (லம்பானி, போவிஸ், கொரச்சஸ், கோர்மாஸ்) 3% மற்றும் மற்றவர்களுக்கு 1% என பரிந்துரைத்தது.

2022 அக்டோபரில் SC ஒதுக்கீட்டை 15% லிருந்து 17% ஆக உயர்த்திய பிறகு அமைச்சரவை, SC 'இடது' பிரிவினருக்கு 6%, SC 'வலது' பிரிவினருக்கு 5.5%, 'தீண்டக் கூடியவர்களுக்கு' 4.5% மற்றும் மற்றவர்களுக்கு 1% வழங்கியது.

முஸ்லிம் இட ஒதுக்கீடு பிரச்சினை

முஸ்லீம்களுக்கான OBC ஒதுக்கீட்டை (வகை II B) திரும்பப் பெறுவதை நியாயப்படுத்தும் வகையில், 2010 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பா.ஜ.க மேற்கோள் காட்டியது, அந்த தீர்ப்பு OBC ஒதுக்கீட்டின் கீழ் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தடை செய்தது. 1994 இல் முஸ்லிம்களை ஓ.பி.சி பிரிவில் சேர்க்கும் ஹெச்.டி தேவகவுடா அரசின் முடிவை ஆதரிக்க எந்த அனுபவ தரவுகளும் இல்லை என்று பா.ஜ.க வாதிட்டது.

பா.ஜ.க.,வின் வகுப்புவாத அரசியலால் சர்வாதிகாரம் செய்யப்பட்ட இழிவான நடவடிக்கை என எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ் ஆகியவை இந்த இடஒதுக்கீட்டை திரும்பப் பெறும் நடவடிக்கையை விமர்சித்துள்ளன. சிறுபான்மையினரிடம் இருந்து பறித்து தங்கள் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகாக்கள் கேட்கவில்லை என்று கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் கூறியுள்ளார்.

சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையின் அடிப்படையில் முஸ்லிம்கள் பின்தங்கிய சமூகமாக வகைப்படுத்தப்பட வேண்டும் என்று, மில்லர் கமிஷன் (1918), நாகன் கவுடா கமிஷன் (1961), ஹவனூர் கமிஷன் (1975), வெங்கடசாமி கமிஷன் (1983) மற்றும் சின்னப்பா ரெட்டி கமிஷன் (1990) போன்ற கர்நாடகா மற்றும் பழைய மைசூர் பிராந்திய அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட பல கமிஷன்களின் பரிந்துரைகளை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சின்னப்ப ரெட்டி அறிக்கையின் அடிப்படையில், எம்.வீரப்ப மொய்லியின் காங்கிரஸ் அரசாங்கமும் பின்னர், ஜனதா தளம் அரசாங்கமும் 1994-95 இல் முஸ்லிம்களை OBC களில் II B வகையாக வகைப்படுத்த நடவடிக்கை எடுத்தது. ஆரம்பத்தில் 6% ஒதுக்கீடு பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் 50% உச்சவரம்புக்கு இணங்க 4% ஆக குறைக்கப்பட்டது.

முன்னாள் எம்.எல்.ஏ ஜெய்பிரகாஷ் ஹெக்டே தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் முஸ்லிம்கள், வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்தாக்களுக்கான இட ஒதுக்கீட்டை மாற்றியமைக்கும் பசவராஜ் பொம்மை அரசின் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்களுக்கான OBC Category II B ஒதுக்கீட்டை நீக்க பரிந்துரை செய்யவில்லை என்று ஆணையம் கூறியுள்ள நிலையில், இடைக்கால அறிக்கையின் இரண்டாம் பகுதி, உச்ச நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்ட 10% EWS ஒதுக்கீட்டை, "பல்வேறு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் "அதிகரித்த இடஒதுக்கீட்டுக்கான" "புதிய கோரிக்கைகளுக்கு இடமளிக்க" பயன்படுத்தலாம் என்று கூறுகிறது என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். "சில பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு EWS ஒதுக்கீட்டில் இருந்து மீதமுள்ள ஒதுக்கீட்டை வழங்கலாம் என்று ஆணையம் கருதுகிறது" என்றும் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

தேர்தல் கணக்கீடுகள்

சிறிய பிற்படுத்தப்பட்ட குழுக்கள், எஸ்.சி.,க்கள் மற்றும் எஸ்.டி.,களை ஈர்ப்பது, வலுவான இந்துத்துவா மற்றும் மக்கள் நலத் திட்டங்களுடன், உ.பி., குஜராத் போன்ற மாநிலங்களில் ஆட்சிக்கு எதிரான அலையைத் திருப்ப பா.ஜ.க.,வுக்கு உதவியது. கர்நாடகாவில் ஒதுக்கீட்டை மாற்றியமைப்பதன் மூலம், லிங்காயத்துகள், வொக்கலிகாக்கள், எஸ்.சி ‘இடது’ மற்றும் எஸ்.டி.,களின் ஆதரவைப் பெற முடியும் என பா.ஜ.க நம்புகிறது, இது முழுமையான பெரும்பான்மையை வெல்வதற்கு முக்கியமாகும்.

சக்தி வாய்ந்த லிங்காயத்துகள், அந்தச் சமூகத்தின் வலிமைமிக்கவரும் முன்னாள் முதல்வருமான பி.எஸ் எடியூரப்பாவை இழிவான முறையில் நடத்துவதால் பா.ஜ.க.,வை விட்டு வெளியேறுவதாக நம்பப்படுகிறது. மேலும் வொக்கலிகாக்கள் பல ஆண்டுகளாக ஜே.டி.எஸ்-ஐ உறுதியாக ஆதரித்து வருகின்றனர்.

2022 அக்டோபரில் SC-ST ஒதுக்கீட்டை 6% உயர்த்தும் முடிவு உள்ளிட்ட கருத்துகளின் விளைவாக, சமீபத்திய ஆண்டுகளில் வால்மீகி நாயக்கர்கள் போன்ற STகள் மற்றும் SC 'இடது' தொகுதிகளில் மதிகர்கள் போன்ற சாதிகள் மத்தியில் பா.ஜ.க ஆதரவைப் பெற முடிந்தது. .

கடந்த காலங்களில், எடியூரப்பா போன்ற உள்ளூர் தலைவர்கள் மூலம் கர்நாடகாவில் உள்ள பல்வேறு சாதிகள் மற்றும் சமூகங்களைச் சென்றடைய பா.ஜ.க முயன்றது. ஆனால், முக்கிய சாதிக் குழுக்களின் மதத் தலைவர்களை நேரடியாக அணுகும் உத்தியை இப்போது பா.ஜ.க செயல்படுத்தி வருகிறது, மேலும் இந்தத் திட்டத்தில் புதிய ஒதுக்கீட்டைப் பயன்படுத்த முடியும் என்று நம்புகிறது.

இருப்பினும், எஸ்.சி ஒதுக்கீட்டை மாற்றுவது சில எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது. 17% SC ஒதுக்கீட்டில் போவிகள், கோரச்சாக்கள் மற்றும் கோர்மாக்களுடன் சேர்ந்து பஞ்சாராக்கள் பெற்றுள்ள 4.5% பங்கு, SC 'இடது' (6%) மற்றும் SC 'வலது' (5.5%) ஆகியோரை விட குறைவாக இருப்பதால் வருத்தம் அடைந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment