Long-lasting Covid-19 symptoms rare in kids : கொரோனா அறிகுறிகளுடன் உள்ள குழந்தைகள் 6 நாட்களில் நலம் பெறுகின்றனர். அதே போன்று நான்கு வாரங்கள் வரை நீடித்திருக்கும் கொரோனா தொற்று என்பது மிகவும் குறைவாகவே (4.4%) உள்ளது என்று தி லான்செட் சைல்ட் அண்ட் அடொலசெண்ட் ஹெல்த் ஜேர்னலில் (The Lancet Child and Adolescent Health) இங்கிலாந்தின் மிகப்பெரிய ஆராய்ச்சி முடிவுகள் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியின் தலைவரும், கட்டுரையின் முதன்மை ஆசிரியருமான, லண்டனில் உள்ள கிங்க்ஸ் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் எம்மா டுன்கன் அறிக்கை ஒன்றில், “கோவிட் -19 அறிகுறிகளின் நீண்டகால அறிகுறிகளை அனுபவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பதை இது உறுதி செய்கிறது. ஒரு சிறிய எண்ணிக்கையிலான குழந்தைகள் கோவிட் -19 உடன் நீண்டகால நோய்களை அனுபவிக்கிறார்கள், எங்கள் ஆய்வு இந்த குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் அனுபவங்களை உறுதிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆராய்ச்சிக்காக ஆராய்ச்சியாளர்கள் ZOE COVID ஸ்டடி ஸ்மார்ட்போன் செயலியை பயன்படுத்தியுள்ளனர். 5 முதல் 17 வயது வரை உள்ள 2, 50,000 நபர்களிடம் இருந்து இந்த தரவுகள் பெறப்பட்டு ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய் அறிகுறிகள் குறித்து குழந்தைகள் தரவுகளை அளிப்பதற்கு பதிலாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தரவுகளை வழங்கியுள்ளனர். இந்த குழு பள்ளி வருகை குறித்து எந்த தரவுகளையும் பெறவில்லை.
செப்டமர் 1,2020 முதல் பிப்ரவரி 22, 2021 வரையில் பெறப்பட்ட தரவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது ஆராய்ச்சிக் குழு. சுமார் 1,734 குழந்தைகள் கோவிட் -19 இன் அறிகுறிகளை பெற்றனர். அறிகுறிகளின் தொடக்கத்திற்கு நெருக்கமான நேர்மறையான பிசிஆர் சோதனை முடிவைப் பெற்றனர். நோயில் இருந்து முழுமையாக மீண்டு வரும் காலம் வரை அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது.
சராசரியாக 6 நாட்கள் அவர்கள் உடல்நலக் கோளாறால் அவதியுறுகின்றனர். குறைந்தபட்சம் மூன்று நோய் அறிகுறிகளை முதல் வாரத்தில் பெறுகின்றனர். இது கோவிட் -19 குழந்தைகளில் லேசான நோயாக வெளிப்படுவதையும் அவர்கள் வழக்கமாக விரைவாக குணமடைவதையும் உறுதிப்படுத்துகிறது.
பெரும்பாலான குழந்தைகள் நான்கு வாரங்களுக்குள் குணம் அடைந்தனர். மிகவும் சிறிய எண்ணிக்கையில் (77/1734) நான்கு வாரங்களுக்கும் மேலாக குழந்தைகள் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனர். ஆனாலும் நான்கு வாரங்களுக்குப் பிறகு அவர்களுக்கு இரண்டு அறிகுறிகள் மட்டுமே அதிகமாக இருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil