உண்மையில் எதற்காக மதுரை வருகிறார் அழகர்? மீனாட்சிக்கு எதற்கு திருமணம்? சித்திரை திருவிழா கதை!

சைவ தெய்வமான மீனாட்சி கல்யாணத்திற்கும், வைணவ தெய்வமான அழகர் ஊர்வலத்திற்கும் என்ன தொடர்பு? அழகர் கோவிலில் இருந்து 'கள்ளர்' வேடமேற்று மதுரை வருவது ஏன்? தல்லாகுளம் வரை கள்ளழகர் வேடத்தில் வந்தவர் அங்கு மீண்டும் அழகராக மாறுவது ஏன்?

சைவ தெய்வமான மீனாட்சி கல்யாணத்திற்கும், வைணவ தெய்வமான அழகர் ஊர்வலத்திற்கும் என்ன தொடர்பு? அழகர் கோவிலில் இருந்து 'கள்ளர்' வேடமேற்று மதுரை வருவது ஏன்? தல்லாகுளம் வரை கள்ளழகர் வேடத்தில் வந்தவர் அங்கு மீண்டும் அழகராக மாறுவது ஏன்?

author-image
Meenakshi Sundaram S
New Update
Madurai Meenakshi Kallalagar

அழகர் ஏன் மதுரை வருகிறார்..? பல்லாண்டு கால வரலாறு இதுதான்.. சித்திரை திருவிழா கதை!

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவிற்காக ஒட்டு மொத்த மதுரையும் ஒரு வருடம் காத்திருக்கும் என்றே சொல்லலாம்..!
Advertisment
விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் இன்றும், அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் மே 12-ம் தேதியும் நடைபெறுகிறது. அந்தவகையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தின்போது, ஒட்டு மொத்த மதுரை மக்களின் பெண்களும் தாலி கயிறை புதுப்பித்து கொள்வதுவழக்கம். திருக்கல்யாண கதை, பாரம்பரியமாக ஏன் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், என்பது வருடாந்திர தெய்வீகத் திருமணத் திருவிழா ஆகும். இது சித்திரை திருவிழா என்று போற்றப்படுகிறது. இந்த திருவிழா, சக்தி தேவியின் வடிவமான மீனாட்சி மற்றும் சிவபெருமானின் வடிவமான சுந்தரேஸ்வரருடன் திருமண வைபவம் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. விஷ்ணுவின் ஒரு வடிவமான அழகரும், கள்ளழகர் கோயில் மதுரையில் கௌரவிக்கப்படுகிறார்.
மேலும், அவர் மீனாட்சியின் மூத்த சகோதரராக கருதப்படுகிறார். பண்டைய இதிகாசத்தின்படி, தங்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததால், மன்னன் மலையத்துவஜன் பாண்டியன் அவரது மனைவி காஞ்சனமாலா ஆகியோர் யாகம் நடத்திய போது, மீனாட்சி சிறு குழந்தையாக யாகசாலையில் காட்சியளித்ததாக கூறப்படுகிறது.

அப்போது, குழந்தை மீனாட்சி, சக்தி தேவியின் அவதாரம் என்றும், சிவபெருமானே சரியான தருணத்தில் அவளைத் திருமணம் செய்துகொள்ள வருவார் என்றும் வானத்திலிருந்து தெய்வீகக்குரல், அரச தம்பதியினருக்குத் தெரிவித்தது. மீனாட்சி அனைத்து வகையான கலைகளிலும் பயிற்சி பெற்றார். மேலும், அவரது தந்தைக்கு பின் பாண்டிய நாட்டின் ராணியாக முடிசூட்டப்பட்டார்.
தனது திறமையால், அவர் பூமியில் உள்ள மன்னர்களைத் தோற்கடித்தார். இறுதியாக சிவபெருமானை வெல்ல கைலாய மலைக்குச் சென்ற மீனாட்சி, போர்க்களத்தில் சுந்தரேஷ்வரை நேருக்குநேர் சந்தித்தபோது, அவர் மீது காதல் கொண்டார். மேலும், அவர் சிவபெருமானின் சக்தியின் அவதாரம் என்பதையும் அறிந்து கொண்டார். மீனாட்சியிடம் தக்க சமயத்தில் திருமணம் செய்துகொள்ள மதுரைக்கு வருவதாக சுந்தரேஷ்வரர் உறுதியளித்தார். உரிய நேரத்தில் சிவபெருமான், தேவர்கள், பூதகணங்கள் மற்றும் ரிஷிகளுடன் மதுரைக்கு வருகைபுரிந்தார். 
சிவபெருமான் மீனாட்சியை மணமுடித்து பாண்டிய நாட்டைத் தனது மனைவி மீனாட்சியுடன் நல்ல முறையில் ஆட்சி செய்தார். இவர்கள் ஆட்சி செய்த காலத்தில் அனைத்து காலங்களிலும் சீராக மழை பெய்தது, பயிர்கள் செழித்து விளைந்தது. மதுரை மாநகரம் தெய்வீக தம்பதியினரால் சிறப்பாக ஆளப்பட்டதால், மதுரை மக்கள் எந்தவிதமான பிரச்னைகளும் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர்.

மீனாட்சி கல்யாணத்தன்று, பக்தர்கள் அதிகாலையிலேயே எழுந்து தெய்வீக அன்னையை தரிசனம் செய்ய, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆவலுடன் செல்வது வழக்கம். பொன்னாளில் மீனாட்சியையும், சுந்தரேஸ்வரரையும் வழிபட்டு பூஜிக்க வேண்டும். பக்தர்கள் பழங்கள், பூக்கள், மலர் மாலைகள், தேங்காய், பிற பூஜை பொருட்களைக் கடவுளுக்கு காணிக்கையாகச் செலுத்த வேண்டும். மீனாட்சி, சுந்தரேஸ்வரர் சிலைகள் அழகிய ஆபரணங்களாலும், ஆடைகளாலும் அலங்கரிக்கப்படும். 
உண்மையில் எதற்காக மதுரை வருகிறார் அழகர்?
சைவ தெய்வமான மீனாட்சி கல்யாணத்திற்கும், வைணவ தெய்வமான அழகர் ஊர்வலத்திற்கும் என்ன தொடர்பு? அழகர் கோவிலில் இருந்து 'கள்ளர்' வேடமேற்று மதுரை வருவது ஏன்? தல்லாகுளம் வரை கள்ளழகர் வேடத்தில் வந்தவர் அங்கு மீண்டும் அழகராக மாறுவது ஏன்?
அழகர் கோயிலில் இருந்து 20 கி.மீ. தூரம் ஊர்வலமாக மதுரை வரும் அழகர் தனது தங்கை மீனாட்சி கோயிலுக்குச் செல்லாதது ஏன்? ஆற்றில் இறங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு நடக்கும் கல்யாணத்திற்கு ஏன் வரவில்லை? தல்லாகுளம் வரை வந்துவிட்டு ஆற்றைக் கடந்து மதுரைக்குள் நுழையாமலேயேத் திரும்பி விடுவது ஏன்? வண்டியூரில் உள்ள பெருமாள் கோயிலில் தங்கும் அழகரை துலுக்கநாச்சியார் வீட்டிற்குச் செல்வதாக கூறுவது ஏன்?
இப்படியாக, அழகரின் மதுரை வருகை குறித்து எழுந்த பல்வேறு கேள்விகளால் அலைக்கழிக்கப்பட்ட மனதிற்கு அமைதி தேடும் விதமாகவே மக்கள் அப்படி ஒரு கதையினை படைத்து வழங்கி வருகின்றனர் என தன்னுடைய 'அழகர் கோயில்' ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ள பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன், அதற்கான உண்மை காரணங்களை தகுந்த ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.
Alagar kovil
அழகரின் மதுரை பயண நோக்கம்:
மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காக வண்டியூர் அருகிலுள்ள தேனூர் மண்டபத்திற்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைப் பெற்றுக்கொள்வதற்காக தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கும் வருவதுதான் அழகரின் மதுரை பயணத்தின் நோக்கம் எனக் கோயில் திருவிழா அழைப்பிதழ் கூறுகிறது.
மீனாட்சி கல்யாணம்-அழகர் வருகைக்கும் உள்ள தொடர்பு:
பாண்டிய நாட்டில் சைவ-வைணவ எதிர்ப்பு போராட்டம் நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது. எனவே, சைவ - வைணவ சமயங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவே இரு விழாக்களும் இணைக்கப்பட்டுள்ளன. மாசி மாதம் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாண திருவிழாவை, அறுவடை முடியாத நிலையில் வேளாண்மை பெருமக்களால் காணமுடியாமல் இருந்ததால் அந்த விழா சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா தேரோட்டம் மாசிவீதியில் நடப்பது இதற்கான சான்று. சோழவந்தான் அருகேயுள்ள தேனூர் எனும் இடத்திற்கு சென்றுவந்து கொண்டிருந்த அழகர் ஊர்வலம், திருக்கல்யாணம் முடிந்து 2 நாட்கள் கழித்து மதுரைக்கு வரும்படி மாற்றப்பட்டுள்ளது.
வண்டியூர் அருகே மண்டூக முனிவருக்கு சாபவிமோஷனம் கொடுக்க அழகர் செல்லும் மண்டபம் பெயர் 'தேனூர் மண்டபம்'. தேனூரைச் சேர்ந்தவர்களே இங்கு கோயில் மரியாதை பெறுகின்றனர் என்பதும் அதற்கான சான்றாக அமைந்துள்ளது. இந்த 2 விழாக்களையும் திருமலை நாயக்கர் அவரது ஆட்சிக்காலத்தில்தான் (கி.பி.1623 - 1659) இணைத்துள்ளார். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அமைத்த தேர்களை இழுக்க ஆட்களை சேர்க்கவும், கால்நடை சந்தைகளை நடத்தவும், மக்கள் தம்முள் கலந்துறவாடவும், மிகப்பெரிய திருவிழாவாக சித்திரை திருவிழாவை மாற்றும் நோக்கத்திலும் திருமலை நாயக்கர் இதை செய்துள்ளார்.
அழகர் ஊர்வலத்தில் உடைகள், நகைகள், பிற அணிகலன்களை எடுத்துவரும் வண்டிகளும், உண்டியல்களை ஏந்திய வண்டிகளும் வரும். அதனையே தங்கை மீனாட்சிக்கு அண்ணன் அழகர் திருமண சீர்கொண்டு வருவதாகவும் நம்பிய மக்கள் தங்கள் கதைக்குள் சேர்த்துள்ளனர். மற்றபடி அழகர் ஊர்வலத்திற்கும்-மீனாட்சி கல்யாணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அழகர் - கள்ளழகராக மாறுவதன் காரணம்:
திருமலை நாயக்கர் காலத்திற்கு பின்னர் மதுரையை ஆண்ட விஜயரங்க சொக்கநாதன் ஆட்சிக் காலத்தில் (கி.பி.1706 - 1717) ஊருக்குள் புகுந்து தாக்கும் அளவிற்கும், அழகர் கோயில் பகுதியில் உழவுத்தொழில் நடத்த இயலாமல் தொல்லை தருமளவும் கள்ளர் சாதியினர் வலிமை பெற்றிருந்துள்ளனர். அந்த காலகட்டத்தில் அழகர் ஊர்வலத்தை ஒருமுறை கள்ளர்கள் மறித்து உள்ளனர். அதன்தொடர்ச்சியாக அந்த சமூகத்தினருக்கு 'இறைவனின் கள்ளர் திருக்கோல மரியாதை' தருவதற்கு கோயில் உடன்பட்டிருக்கிறது. மேலும், கோயில் சொத்துடைமை நிறுவனமாக இருந்ததால் அதனை காத்துக் கொள்வதற்கும், கள்ளர்களோடு உறவு கொண்டு அதற்கு ஆன்மீக வண்ணமும் தரப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே அழகர் கோயிலில் இருந்து மதுரை நோக்கி கிளம்பும் அழகர், ஒரு கையில் வளரித்தடி, மற்றொரு கையில் சாட்டைக்கம்பு, ஆண்கள் இடுகின்ற கொண்டை, உருமால், காதுகளில் கடுக்கன், கருப்பு புடவை ஆகியவை அணிந்து கள்ளர் தோற்றத்தில் வருகிறார்.
தல்லாகுளத்தில் கள்ளழகர் - அழகராக மாறுவதன் காரணம்:
அழகர் ஊர்வலம் மதுரையைச் சேர்ந்த சைவர்களால் தல்லாகுளத்தில் மறிக்கப்பட்டிருக்கலாம். பிராமண பூசைபெறும் பெருந்தெய்வமான அழகர், கள்ளர்களைபோல வேடமணிந்து வந்தது இதற்கு வலுவான காரணமாகயிருக்கலாம். மோதலுக்கு பின்னர் ஏற்பட்ட உடன்பாட்டில் அழகர் மதுரை நகருக்குள் வருவது தடுக்கப்பட்டு, வைகையாற்று பகுதியிலும், வண்டியூரிலும் கள்ளர் வேடம் தடை செய்யப்பட்டிருக்கலாம்.
"அழகரின் ஊர்வலம் தல்லாகுளம் பகுதிக்கு வரும்போது ஒருமுறை பாண்டிமுனி அதனை மறித்துக் கொண்டதாகவும், உடனே அழகர் அவரது காவலாளியான பதினெட்டாம்படி கருப்பனை நினைத்ததாகவும், கருப்பன் வந்து பாண்டிமுனியை விரட்டிவிட்டு அந்த இடத்திலேயே அமர்ந்துவிட்டதாகவும்" என தல்லாகுளத்தில் கருப்பசாமி கோயில் ஏற்பட்டதற்கு ஒரு கதையும் வழக்கில் உள்ளது.
மதுரை நகருக்குள் அழகர் வராததன் காரணம்:
"மதுரை தங்கச்சி பூமி; அழகருக்கு அக்கரையும் மீனாட்சிக்கு இக்கரையும் தீந்திட்டு; அழகருக்கு எல்லை அவ்வளவு தான்" எனும் புழங்குமொழிகள் அழகருக்கும் மீனாட்சிக்கும் எல்லைகள் வரையறுக்கப்பட்டன என்பதை உணர்த்துகின்றன. 
அழகருக்கு வைகையாற்றின் தென்கரையில் நகர்ப்பகுதிக்குள் ஒரே ஒரு திருக்கண் உண்டு. யானைக்கல் பகுதியில் திருமலைராயர் படித்துறையை அடுத்து ஐயங்கார் தோப்பு மண்டகப்படி எனும் திருக்கண் உண்டு. இந்த மண்டகப்படிக்கு அழகர் பல்லக்கு வருவதில்லை. மாறாக, வைகையின் வடகரையில் ஒரு மண்டகப்படியில் அழகரின் பல்லக்கு இருக்க, அழகரின் திருவடியாக கருதப்படும் சடாரியை மட்டும் சிறிய பல்லக்கில் எடுத்துவந்து பூசை செய்து திரும்பவும் கொண்டு செல்கின்றனர். அழகர் வர முடியாத காரணத்தால்தான் அவரது திருவடியை மட்டும் அங்கு எடுத்து செல்கிறார்களோ என்ற எண்ணம் அழகரின் வருகை நகருக்குள் தடுக்கப்பட்டதை உறுதி செய்கிறது.
அப்படியெனில், அழகர் கள்ளர் வேடம் ஏற்க துவங்கும் முன்னர் நகருக்குள் வந்திருப்பாரா? எனும் கேள்விக்கும் ஒரு சான்று இருக்கிறது. மதுரை அரசரடி - ஆரப்பாளையம் பகுதியில் 'அழகரடி' எனும் பகுதி இருக்கிறது. அங்கு அழகரின் இரு பாதங்கள் கல்லில் செதுக்கப்பட்டு, சிறிய கோயிலாக மாற்றப்பட்டு மக்களால் அழகரடி என அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் அழகர் வந்து இங்கு தங்கியதாக ஒரு மரபும் இப்பகுதி மக்களிடத்தே நிலவுவதாலும், 'அடி' எனும் சொல் இடத்தை குறிப்பதாலும் இப்பகுதி அழகரடி என குறிப்பிடப்படுகிறது. எனவே, கிராமப்புற தாழ்த்தப்பட்ட சாதியினரான அழகரின் அடியவர்களுக்கும், மதுரை நகரத்து உயர்சாதியினரான சைவர்களுக்கும் நடந்த போராட்டங்கள் காரணமாகவே அழகர் மதுரை நகருக்குள் வருவதில்லை.
துலுக்கநாச்சியார் வீட்டிற்கு அழகர் செல்வதாக கூறுவதன் நோக்கம்:
வண்டியூரில் துலுக்கநாச்சியார் கோயில் இல்லை, அங்குள்ள பெருமாள் கோயிலில்தான் அழகர் தங்குகிறார். அதையே துலுக்கநாச்சியார் கோயில் எனவும், அங்கு பல்லாண்டுகளுக்கு முன்னர் அழகர் தங்கும் இரவில் இஸ்லாமியர்களும் கலந்துகொண்டு வாணவேடிக்கைகள் நடத்தியதாகவும் தகவல்கள் உண்டு.
இஸ்லாமியர்கள் படையெடுப்பின்போது திருவரங்கம் கோயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களுக்கு பின்னர் திருமால் ஆணையால் 'சாந்து நாச்சியார்' எனும் துலுக்க நாச்சியார் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, துலுக்கநாச்சியார் கதை இஸ்லாமிய படையெடுப்பு மற்றும் திருவரங்க கோவில் சிதைவு ஆகியவற்றின் நினைவில் இருந்து உருவாகியிருக்கும். துலுக்கநாச்சியார் கதை வழியாக தெய்வீகச்சாயலுடன் ஒரு உறவுமுறையை கற்பித்துக்கொண்டு, வலிமையான எதிரிகளான இஸ்லாமியர்களின் பகையுணர்ச்சியை தமிழ்நாட்டு வைணவம் மழுங்கச்செய்திருக்கிறது. இதுவே, வண்டியூரில் தன் காதலி துலுக்கநாச்சியார் வீட்டில் அழகர் இரவு தங்குவதாக கூறப்படும் கதைக்கு காரணம்.
பொறுப்பு துறப்பு : இக்கட்டுரையில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன் எழுதிய 'அழகர் கோயில்' எனும் ஆய்வு நூலில் இருந்து எழுதப்பட்டுள்ளன.
Madurai Meenakshi Amman Temple

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: