இந்தியாவில் ஆண்டுதோறும் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களின் தாக்கம் குறைந்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2017ம் ஆண்டில், 8,44,558 மலேரியா பாதிப்புகளும், 1,88,401 டெங்கு பாதிப்புகளும் மற்றும் 67,769 சிக்குன் குனியா பாதிப்புகள் இருந்த நிலையில், 2018ம் ஆண்டில் 4,29,928 மலேரியா பாதிப்புகளும், 1,01,192 டெங்கு பாதிப்புகள் மற்றும் 57,813 சிக்குன் குனியா பாதிப்புகளே கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டில் மலேரியா பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களில் உத்தரபிரதேசம் (86.486) முதலிடத்திலும், அடுத்தடுத்த இடங்களில், சட்டீஸ்கர் (78,717), ஒடிசா (66,311), ஜார்க்கண்ட் (57,095) மற்றும் மேற்குவங்கம் (26,440) உள்ளன.
2017ம் ஆண்டில், உத்தரபிரதேச மாநிலத்தில் 32,345 மலேரியா பாதிப்புகளே இருந்தநிலையில், 2018ம் ஆண்டில் 86,486 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெங்கு பாதிப்பை பொறுத்தவரையில், 2018ம் ஆண்டில் பஞ்சாப் (14,890) முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா (11,011), ராஜஸ்தான் (9,587), குஜராத் (7,579) மற்றும் டில்லில (7,136) உள்ளது.
2017ம் ஆண்டை ஒப்பிடும்போது பஞ்சாப் மற்றும் டில்லியில் மட்டுமே டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. மற்ற 3 மாநிலங்களிலுமே பாதிப்பு அதிகரித்துள்ளது.
சிக்குன் குனியா பாதிப்பை ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டில் அதிக அளவாக கர்நாடகா ( 20,411) உள்ளது. 2017ம் ஆண்டில் இதன் பாதிப்பு கர்நாடகாவில் 32.831 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவை தொடர்ந்து குஜராத் (10,601), மகாராஷ்டிரா (9,884), ஜார்க்கண்ட் (3,405) மற்றும் மத்திய பிரதேசம் (3,211) உள்ளது.
சிக்குன் குனியா மற்றும் டெங்கு நோய்கள் காலநிலை சார்ந்து இருப்பதால், அதன் பாதிப்பு விகிதம் மாநிலத்திற்கு மாநிலம் கால அளவு விகிதங்களில் மாறுபடுவதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.