National Education Policy 3-language policy draft revised : தமிழகம் மற்றும் சில தென்னிந்திய மாவட்டங்களில் பெரிய அளவு அதிர்ச்சியை உருவாக்கிய மும்மொழிக் கொள்கை 11 பேர் கொண்ட குழு பரிந்துரை செய்த தேசிய கல்விக் கொள்கையின் (National Education Policy ) திட்ட வரைவில் இடம் பெற்றிருந்தது.
6ம் வகுப்பில் இருந்து மாணவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியை தேர்வு செய்து இரண்டு வருடங்களுக்கு படிக்க வேண்டும் என்று அந்த கொள்கை உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழ் மக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். பின்னர் மத்திய மனிதவள அமைச்சர் பொக்ரியால், கஸ்தூரி ரங்கன் சார்பாக திருத்தி அமைக்கப்பட்ட புதிய வரைவினை வெளியிட்டனர்.
National Education Policy 3-language policy draft revised - கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு
11 நபர்கள் கொண்ட அந்த குழுவில் இருவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாபா சாஹேப் அம்பேத்கார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராம் சங்கர் குரீல் மற்றும் உத்திரப்பிரதேசம் உயர்நிலை மற்றும் இடைநிலைக் கல்வி தேர்வு வாரியத்தின் முன்னாள் தலைவர் கே.எம். திருப்பதி உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திட்டவரைவில் மாற்றம் செய்யப்பட்டது அவர்களுக்கு ஏமாற்றம் அளித்திருப்பதாகவும் குழு உறுப்பினர்கள் இடையே கலந்து ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டிருப்பது குறித்தும் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : ‘கட்டாயமாக இந்தியை திணிக்க முயன்றால் திமுக போர் தொடுக்கும்’ – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
மனிதவள மேம்பாட்டுத் துறையில் இருந்து கஸ்தூரி ரங்கன் சார்பாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் மாற்றங்கள் உருவாக்கப்பட்டது குறித்து அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அது குறித்து பேசிய குரீல் இந்த முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார். திருப்பதி கூறுகையில் கமிட்டி உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசனை செய்யாமல் முடிவுகள் எட்ட்டபப்ட்டது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் திருப்பதியிடம் பேச முற்படுகையில் அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.
நாட்டின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட மும்மொழிக்கொள்கையின் திட்ட வரைவு மே மாதம் 31ம் தேதி மனித வள அமைச்சகத்திடம் கொடுக்கப்பட்டது. நான் என்னுடைய முடிவில் இருந்து மாறமாட்டேன். மும்மொழிக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாகும் என்று கூறினார் குரில். மேற்கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை.
திருத்தப்பட்ட வரைவிற்கு முன்பு, மனிதவள மேம்பாட்டு இணையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ”இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் 6ம் வகுப்பில் இருந்து மாணவர்கள் மூன்று மொழியினைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், முதல் இரண்டு மொழிகளாக ஆங்கிலம் மற்றும் இந்தி இருக்கும் என்றும், மூன்றாவது மொழியாக இந்திய மொழிகளில் எதையாவது தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதே போன்று இந்தி பேசாத மாநிலங்களில் முதலில் பிராந்திய மொழி, பின்பு இந்தியும் ஆங்கிலமும் கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.