/indian-express-tamil/media/media_files/2025/09/05/new-gst-rates-tax-reduction-2025-09-05-19-45-54.jpg)
GST rate changes: Why was this done, who is impacted how, explained in 5 points
அடுத்த மாதம் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கிவிட்டது! நீங்கள் விரும்பும் பட்டாசுகள், ஆடைகள் மற்றும் இனிப்புகளின் விலைகள் இந்த ஆண்டு சற்று குறைவாக இருக்கலாம் என்று மகிழ்ச்சியுடன் எண்ணுகிறீர்களா? ஆம்! புதிய ஜிஎஸ்டி வரிக் குறைப்புகள் உங்கள் கனவை நனவாக்கும் வாய்ப்புள்ளது.
கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 3) மத்திய அரசு வெளியிட்ட புதிய ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) விகிதங்கள், எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பது பற்றிய பரபரப்பான விவாதங்கள் அனைத்திடத்திலும் நடைபெறுகிறது. இந்த புதிய ஜிஎஸ்டி விதிகளால் உங்கள் தீபாவளி உண்மையிலேயே பிரகாசமாக இருக்குமா? யார் அதிகம் பயனடைவார்கள்? ஜிஎஸ்டி குறைப்பால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுமா?
பயப்படாதீர்கள்! இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில்களை நாம் விரிவாக காண்போம். முதலில், ஜிஎஸ்டி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம்.
ஜிஎஸ்டி என்றால் என்ன?
ஜிஎஸ்டி என்பது Goods and Services Tax என்பதன் சுருக்கமாகும். இது 2017 ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன் இருந்த விற்பனை வரி, சேவை வரி, கலால் வரி, நுழைவு வரி, ஆடம்பர வரி போன்ற பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசின் மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து, ஒரே சீரான வரி அமைப்பை ஜிஎஸ்டி உருவாக்கியது. இந்த வரி, ஒரு பொருள் அல்லது சேவை நுகர்வோரிடம் சென்றடையும் இடத்திலேயே விதிக்கப்படுகிறது. ஒரு பொருளைத் தயாரிப்பவர் மூலப்பொருட்களை வாங்கும்போதும் வரி செலுத்துவார், ஆனால் இறுதி நுகர்வோராகிய நாம், அந்தப் பொருளை வாங்கும்போதும் வரி செலுத்துவோம்.
இந்த வரி முறை அமலுக்கு வந்ததால், அதிகமான வணிகங்கள் முறையான வர்த்தகத்தில் ஈடுபடத் தொடங்கின. ஏனெனில், இந்த வரி விதிப்பு முறை வர்த்தகத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த உதவியது. அரசாங்கத்திற்கு வருவாய் தேவை என்பதற்காகத்தான் நாம் பொருட்கள் வாங்கும் போது வரி செலுத்துகிறோம். ஜிஎஸ்டி, வருமான வரி செலுத்தும் மக்களை விட அதிகமான மக்களை உள்ளடக்குவதால், அரசாங்கத்திற்கு அதிக வருவாயைக் கொண்டு வந்து சேர்க்கிறது.
ஜி.எஸ்.டி.யில் என்னதான் நடந்தது?
ஜி.எஸ்.டி கவுன்சில், அதன் 56வது கூட்டத்தில், ஜிஎஸ்டி விதிமுறைகளில் சில சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு அடுக்கு வரி விகிதங்களாக இருந்த ஜி.எஸ்.டி., இப்போது 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக எளிமையாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, ஆடம்பரப் பொருட்களுக்கும், புகையிலை போன்ற பொருட்களுக்கும் புதியதாக 40% வரி அடுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விகிதங்கள் வரும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.
விலை குறையும் பொருட்களின் பட்டியல்!
புதிய மாற்றங்களின் விளைவாக, அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் எண்ணற்ற பொருட்களின் விலை குறையவிருக்கிறது. டூத்பேஸ்ட், வெண்ணெய், சீஸ், பதப்படுத்தப்பட்ட பால், பாஸ்தா, தேங்காய் தண்ணீர், நட்ஸ், பேரிச்சம்பழம், சாசேஜஸ், ஃபிரிட்ஜ், டிவி சிறிய கார்கள், இருசக்கர வாகனங்கள், மருத்துவப் பொருட்களான காஸ், பேண்டேஜ்கள், நோய் கண்டறியும் கருவிகள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் ஏன் இப்போது இந்த மாற்றங்களைச் செய்தது?
நீண்ட காலமாகவே எதிர்க்கட்சிகளும், தொழில் துறையினரும் ஜிஎஸ்டி-யை எளிதாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இந்த வரி அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் அரசாங்கத்தின் வருவாயைப் பாதிக்கும் என்பதால், இந்த மாற்றங்களை அரசாங்கம் தாமதப்படுத்தி வந்தது. உண்மைதான், வருவாய் துறை செயலாளர் அர்விந்த் ஸ்ரீவஸ்தவா, இந்த மாற்றங்கள் சுமார் ரூ. 48,000 கோடி நிகர வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
இருந்தாலும், நுகர்வோர் தேவையை அதிகரிக்க வேண்டும் என்ற அவசியமே அரசாங்கத்தை இந்த மாற்றங்களுக்குத் தள்ளியது. பொருட்களின் விலை குறையும்போது, மக்கள் கையில் அதிகப் பணம் இருக்கும். இது நுகர்வை அதிகரிக்கும். இந்த "வளர்ச்சிச் சக்கரம்" (virtuous capex cycle) பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடைய உதவும் என்று அரசு நம்புகிறது. எளிமையாகச் சொன்னால், மக்கள் கையில் அதிக பணம் இருந்தால், பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும். தேவை அதிகரித்தால், உற்பத்தி அதிகரிக்கும், இதனால் தொழில்துறையில் முதலீடும், வேலைவாய்ப்பும் பெருகும். மேலும், அதிக வேலைவாய்ப்பு இருந்தால், மக்கள் செலவழிக்க அதிக பணம் கிடைக்கும், இந்த சுழற்சி தொடர்ந்து நடக்கும்.
ஒரு பற்பசையின் விலை குறைந்தால், நீங்கள் ஒரு பற்பசைக்கு பதில் மூன்று வாங்க மாட்டீர்கள். ஆனால், பற்பசை, சோப்பு, ஷாம்பூ, பன்னீர், தயிர் என அனைத்து பொருட்களின் விலையும் குறைந்தால், உங்களுக்கு சேமிக்கப்பட்ட பணத்தில் ஹோட்டலுக்கு செல்லலாம், பயணிக்கலாம் அல்லது ஜிம் மெம்பர்ஷிப் வாங்கலாம். இது மொத்தமாக பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு?
புதிய ஜி.எஸ்.டி. மாற்றங்களால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றாலும், மக்களின் நுகர்வு அதிகரிப்பால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி, நீண்ட கால அடிப்படையில் இந்த இழப்பை ஈடுகட்டும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் வாழ்க்கை எளிதாகும் போது, வரி செலுத்தும் மனப்பான்மையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தப் பொருட்களுக்கு அதிக வரி?
அதிகபட்சமாக 40% வரி, சொகுசு கார்கள் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற "சின் வரி" (sin tax) பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், இந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து இழப்பீட்டு வரி (compensation cess) விதிக்கப்பட்டது. இந்த வரி இப்போது நீக்கப்பட்டுவிட்டதால், அவற்றின் மொத்த வரி விகிதம் முன்னரை விடக் குறைவாக இருக்கலாம்.
இருந்தாலும், ரூ.2,500க்கு மேல் உள்ள ஆடைகளுக்கான ஜிஎஸ்டி 12%லிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, உயர்தர பிராண்டுகளின் ஆடைகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு என்ன விளைவை ஏற்படுத்தும்?
அமெரிக்காவின் புதிய வரிகளால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு அரசு சலுகைகளை நீட்டிக்க வேண்டிய சூழலில், அரசின் வருவாய் குறையும். ஆனாலும், நுகர்வு அதிகரிப்பு, மக்களின் வாங்கும் திறன் மற்றும் மக்களின் வாழ்க்கை எளிதாக மாறுவதால், வருவாய் இழப்பை விட அதிக லாபம் கிடைக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது.
இந்த மாற்றங்கள் உங்கள் தீபாவளியை இனிமையாக்கும் என்று நம்புவோம்!
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.