Sandeep Singh
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தியுள்ளார், அதாவது ஒரு தனிநபருக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் இருந்தால், அவருக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்படும்.
ஆங்கிலத்தில் படிக்க: New Income Tax Slabs Explained: What does the Rs 12 lakh I-T rebate mean? What will you pay if you earn above that?
அதாவது ரூ.15 லட்சம் வருமானம் உள்ளவர்கள் ரூ.3 லட்சத்துக்கு மட்டுமே வரி கட்டினால் போதுமா?
இல்லை, ரூ.12 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி பொருந்தும். உங்களின் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.12 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், புதிய வரி விதிப்பின் கீழ் வரி அடுக்கு விகிதங்களின்படி நீங்கள் வரி செலுத்த வேண்டும். இதற்கு முன், 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள், புதிய வரி விதிப்பின் கீழ், 80,000 ரூபாய் வரி செலுத்தினர்.
அதாவது உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.12.1 லட்சமாக இருந்தால், நீங்கள் செலுத்த வேண்டிய வரி ரூ.61,500 ஆக இருக்கும்.
ஏனென்றால், உங்கள் வருமானம் ரூ.12 லட்சத்துக்கு மேல் இருந்தால், ரூ.4 லட்சம் முதல் 8 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5% வரி செலுத்த வேண்டும்; 8 லட்சம் முதல் 12 லட்சம் வரை வருமானத்திற்கு 10% மற்றும் ரூ 12 லட்சம் முதல் 16 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரி செலுத்த வேண்டும்.
எனவே ரூ.15 லட்சம் சம்பாதிக்கும் தனிநபர் ரூ.1,05,000 வரி செலுத்த வேண்டும்.
15 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு என்ன பலன்?
ரூ.15 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரையிலான வருமானங்களுக்கான வரி விகிதங்களை கடுமையாகக் குறைப்பதன் மூலம், ரூ.15 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்குக் கூட நிதியமைச்சர் குறிப்பிடத்தக்க சேமிப்பை வழங்கியுள்ளார்.
முன்னதாக, புதிய வரி முறையில், ரூ. 15 லட்சத்துக்கும் மேலான வருமானங்களுக்கு 30% வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 12 லட்சம் முதல் 16 லட்சம் வரையிலான வருமானங்களுக்கு 15% வரி விதிக்க நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார். இதேபோல் ரூ.16 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20%; மற்றும் 20 லட்சம் முதல் 24 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25%, மற்றும், 24 லட்ச ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு 30% வரி செலுத்த வேண்டும்.
புதிய வரி விதிப்பின் கீழ் ரூ.24 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.1.1 லட்சம் வரை சேமிப்பு இருக்கும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.