/indian-express-tamil/media/media_files/2025/06/11/bLrIsKrCFoVL3mLAjZ7I.jpg)
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு முக்கிய பொறுப்பு: இந்தியாவுக்கு கவலையா?
'ஆபரேஷன் சிந்துர்' நடந்து முடிந்த சுமார் ஒரு மாதத்திற்குப் பின், இம்மாத தொடக்கத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) இரு முக்கிய துணை அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளைப் பாகிஸ்தான் பெற்றுள்ளது. 2025-26ம் ஆண்டுக்கான நிரந்தரமற்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாகிஸ்தான், இந்த புதிய பதவிகளின் மூலம் சர்வதேச அரங்கில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பெற்றுள்ள பதவிகள் என்ன?
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் தற்போது கீழ்க்கண்ட முக்கியப் பொறுப்புகளை ஏற்றுள்ளது:
- தலைவர், 1988 தலிபான் தடைகள் குழு (TSC): இந்த அமைப்பு 2011-ல் தனித்துவமான குழுவாக நிறுவப்பட்டது.
- துணைத் தலைவர், 1373 பயங்கரவாத எதிர்ப்பு குழு (CTC): இது பயங்கரவாதத்திற்கு எதிரான மிக முக்கியமான குழுவாகும்.
- இணைத் தலைவர்: பாதுகாப்பு கவுன்சிலின் 2 Informal Working Groups இணைத் தலைவர் பொறுப்பையும் வகிக்கிறது.
இந்த பதவிகளின் முக்கியத்துவம் என்ன?
ஐ.நா.வின் தடைகள் குழுக்கள் (Sanctions Committees), குறிப்பிட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக (1988 குழுவைப் போல) அல்லது சில நாடுகளுக்கு எதிராக (1970 லிபியா தடைகள் குழுவைப் போல) தடைகளை விதித்து, அதைக் கண்காணித்து செயல்படுத்துகின்றன. மறுபுறம், பயங்கரவாத எதிர்ப்பு குழுவானது (CTC), அமெரிக்காவில் நடந்த 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, பாதுகாப்பு கவுன்சிலால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 1373 தீர்மானத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. ஐ.நா. சாசனத்தின் 7வது அத்தியாயத்தின் (Chapter VII) கீழ் வரும் இந்தத் தீர்மானம், அனைத்து உறுப்பு நாடுகளையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் ஒவ்வொரு நாட்டின் கடமைகளையும் இந்தத் தீர்மானம் விரிவாக வரையறுக்கிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்தியா, தனது கடைசி பதவிக்காலமான 2021-2022-ல், பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இருந்தபோது, மூன்று முக்கிய குழுக்களுக்குத் தலைமை தாங்கியது. 1988 தலிபான் தடைகள் குழு (TSC), 1970 லிபியா தடைகள் குழு, 1373 பயங்கரவாத எதிர்ப்பு குழு (CTC)
பாகிஸ்தான் எப்படி இந்தப் பதவிகளைப் பெற்றது? இதன் விளைவுகள் என்ன?
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) முக்கிய குழுக்களில் பாகிஸ்தான் தலைமை மற்றும் துணைத் தலைமைப் பொறுப்புகளைப் பெற்றது, ஒரு திட்டமிட்ட அரசியல் வெற்றி என்பதை விட, நடைமுறைப்படி தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாகும் (procedurally inevitable). இதற்கான காரணங்கள் ஐ.நா.வின் அமைப்பு மற்றும் செயல்பாட்டு விதிகளிலேயே அடங்கியுள்ளன.
1. குழுக்களின் அமைப்பு (Subsidiary Organs): ஐ.நா. சாசனத்தின் 28வது பிரிவின்படி, இந்தக் குழுக்கள் அனைத்தும் பாதுகாப்பு கவுன்சிலின் "துணை உறுப்புகள்" (subsidiary organs) என்று கருதப்படுகின்றன. இதன் பொருள், 1988 தலிபான் தடைகள் குழு (TSC) மற்றும் 1373 பயங்கரவாத எதிர்ப்பு குழு (CTC) ஆகிய இரண்டிலுமே, அந்தந்த நேரத்தில் பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் 15 உறுப்பினர்களும் (5 நிரந்தர மற்றும் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள்) அங்கம் வகிப்பார்கள்.
2. நிரந்தரமற்ற உறுப்பினர்களின் பங்கு: பாதுகாப்பு கவுன்சிலுக்கு இரண்டு ஆண்டு காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் எந்தவொரு நிரந்தரமற்ற உறுப்பினரும், தனது பதவிக்காலத்தில் ஏதாவது ஒரு சமயத்தில், கவுன்சிலின் பல துணை அமைப்புகளில் ஒன்றிற்குத் தலைமை ஏற்பது என்பது ஒரு எழுதப்படாத விதியைப் போல் உள்ளது. இது புள்ளிவிவரப்படியும் தவிர்க்க முடியாததாகிறது.
3. நிரந்தர உறுப்பினர்கள் தலைமை ஏற்காதது: பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா (P5) ஆகியோர் தடைகள் விதிக்கும் குழுக்களுக்கு (sanctions committees) தலைமை ஏற்பதில்லை. காரணம், நலன் முரண்பாடுகளைத் (conflicts of interest) தவிர்ப்பதேயாகும்.
ஏனெனில், தடை விதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிரான முக்கியத் தடைகளை அமல்படுத்துவதில் இந்த நிரந்தர உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது. உதாரணமாக, தலிபான்கள் மீது அமெரிக்கா தனது சொந்த ஒருதலைப்பட்சமான OFAC தடைகளை விதித்துள்ளது. மேலும், சர்வதேச நிதி அமைப்பில் அமெரிக்காவுக்கு இருக்கும் செல்வாக்கு, தடைகளைச் செயல்படுத்துவதற்கு மிக முக்கியமானது. இத்தகைய சூழலில், அவர்களே தடைகள் குழுவுக்குத் தலைமை வகித்தால், அது பாரபட்சமாக அமைய வாய்ப்புள்ளது. இதனால்தான், அமெரிக்கா இதுவரை 1988 தலிபான் தடைகள் குழுவிற்குத் தலைமை வகித்ததே இல்லை.
4. தற்போதைய நடைமுறை: நிரந்தர உறுப்பினர்கள் தலைமை ஏற்காததால், நிரந்தரமற்ற உறுப்பினர்களே இந்தக் குழுக்களுக்குத் தலைமை வகிக்க வேண்டியுள்ளது. இது ஒருபுறம் அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தாலும், மறுபுறம் அவர்களுக்கு அதிகப்படியான பணிச்சுமையை (overburdened system) ஏற்படுத்துகிறது. 2018 ஆம் ஆண்டின் பாதுகாப்பு கவுன்சில் ஆண்டறிக்கைக் கூட்டத்தில், "நிரந்தர மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடையே தலைமைப் பதவிகளை நியாயமாகப் பகிர்ந்தளிக்கும் ஒரு புதிய அமைப்பு தேவை" என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த பழைய நடைமுறை தொடர்ந்தாலும், குழுக்களின் தலைவர்களை "சமநிலையான, வெளிப்படையான, திறமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வழியில்" தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த முயற்சி, ஜூலை 2016 தேதியிட்ட பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் குறிப்பில் (UNSC Presidential Note) வெளிப்படையாகவே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா கவலைப்பட வேண்டுமா?
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் துணைக் குழுக்களில் பாகிஸ்தான் பெற்றுள்ள தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள், ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள இந்திய நலன்களுக்கு நேரடியான ராஜதந்திர அச்சுறுத்தலை (direct diplomatic threat) ஏற்படுத்தாது. இருப்பினும், இந்தியா கவலைப்பட வேண்டிய அம்சங்கள் வேறு உள்ளன. உண்மையான பிரச்சினை, பாகிஸ்தான் வகிக்கும் இந்தப் குறிப்பிட்ட பதவிகளில் இல்லை; மாறாக, அதன் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மற்றும் வரவிருக்கும் கவுன்சில் தலைவர் பொறுப்பில் உள்ளது.
1. குழுப் பதவிகள் ஏன் நேரடி அச்சுறுத்தல் இல்லை?
ஐ.நா. பதவிகளைத் தனது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் பாகிஸ்தானின் விருப்பமும் நோக்கமும் நீண்ட காலமாகவே வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனாலும், இந்தக் குழுப் பதவிகள் மட்டும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில், இந்தப் பிரச்னையின் மூலம் வெளிப்படுவது, பாகிஸ்தானின் அச்சுறுத்தலை விட, பயங்கரவாதத்தை திறம்பட சரிபார்க்கும் கருவிகளாக பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அதன் துணைக் குழுக்கள் அமைப்பு ரீதியாக அடைந்துள்ள பெரிய தோல்வியே (larger structural failures) ஆகும். இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒரு கொள்கைக் கருவியாக பாகிஸ்தான் தொடர்ந்து பயன்படுத்துவதே இதற்குச் சான்று.
மேலும், இந்தக் குழுக்கள் திறம்பட செயல்படாததற்கும் காரணங்கள் உள்ளன:
- விவாதமின்மை: இந்தக் குழுக்களில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடப்பதில்லை.
- மிதமிஞ்சிய ஒருமித்த கருத்து (Consensus Model): ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதுவே "குழுவின் செயல்திறனுக்கு மிகப்பெரிய தடையாக" இருப்பதாக 2016ல் நியூசிலாந்தின் ஜெரார்ட் வான் பொஹேமன் போன்ற முன்னாள் தலைவர்களே குறிப்பிட்டுள்ளனர்.
2. இந்தியாவின் உண்மையான கவலை என்ன?
இந்தியா கவலைப்பட வேண்டிய முக்கிய விஷயம், பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருப்பதுதான். குறிப்பாக, ஜூலை மாதம் சுழற்சி முறையிலான தலைவர் பதவியை (rotational Presidency) பாகிஸ்தான் ஏற்கும்போது இது ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும்.
இதற்கு கடந்த கால நிகழ்வுகளே சாட்சி:
- 2013-ல் காஷ்மீர் பிரச்சினை: பாகிஸ்தான் தனது சுழற்சிமுறை தலைவர் பதவியைப் பயன்படுத்தி, ஐ.நா.வின் கவனத்தை காஷ்மீர் பக்கம் திருப்ப முயற்சித்தது.
- பயங்கரவாத விவாதம்: அமெரிக்க கடற்படை வீரர்கள் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் கொன்ற இரண்டு ஆண்டுகளுக்குள், அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர் தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த ஒரு அமைச்சர்கள் விவாதத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது. இதன் மூலம், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் தனது சொந்தக் குறைபாடுகளை மறைக்க பாகிஸ்தான் முயன்றது.
3. தலைவர் பதவியால் கிடைக்கும் அதிகாரங்கள்:
பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவி பாகிஸ்தானுக்கு எந்தவொரு சிறப்பு அதிகாரத்தையும் வழங்காவிட்டாலும், சில நடைமுறை ரீதியான அனுகூலங்களை (procedural advantages) அது வழங்குகிறது. இவற்றை பாகிஸ்தான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
உதாரணமாக, கவுன்சிலின் தற்காலிக நடைமுறை விதிகளின்படி, கூட்டங்களைக் கூட்ட கவுன்சில் தலைவருக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் தனக்கு வேண்டிய ரகசிய அல்லது முறைசாரா ஆலோசனைக் கூட்டங்களை (closed door/informal consultations) ஏற்பாடு செய்ய முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.