கடந்த ஞாயிற்றுக்கிழமை, கனடா ஒன்டாரியோ மாகாணம் டொராண்டோ நகரில் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலூச் மரணமடைந்தார் என்று பலூசிஸ்தான் போஸ்ட் செய்தி வெளியிட்டது. இவர், பலுசிஸ்தான் பிராந்தியத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த கரிமா பலூச் ?
பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் பிரிந்து தனிநாடாக உருவாகும் போராட்டத்திற்காக 2016 ஆம் ஆண்டில், ‘பிபிசியின் 100 பெண்கள் தொடர் ’ பட்டியலில் கரிமா பலூச் இடம் பிடித்தார். பலுசிஸ்தான் மக்கள் கடத்தப்பட்டு, காணாமல் போயுள்ளார்கள். ஆட்கடத்தல்கள், காணாமல் போதல், சித்ரவதைகள் போன்றவற்றை பாகிஸ்தான் அரசாங்கமும், இராணுவமும் திட்டமிட்டு செய்து வருவதாக கரிமா பலூச் உலகளவில் தீவிர பிரச்சாரம் செய்தார் .
தனது போராட்டத்தில், பலுசிஸ்தான் பெண்களின் அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். மேலும், சட்ட இயந்திரங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் சட்ட அமைப்புகளும், மதக்குழுக்களும் பெண்களுக்கு குறிப்பாக விளிம்பு நிலைப் பிரிவிலிருக்கும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கையையும் எடுத்துரைத்தார்.
அவரது மரணம் பற்றி ?
கடைசியாக டிசம்பர் 20 ஆம் தேதி டொராண்டோவின் பே ஸ்ட்ரீட் மற்றும் குயின்ஸ் க்வே வெஸ்ட் பகுதியில் பலூச் காணப்பட்டதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்ததாக பலூசிஸ்தான் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டது. பொதுமக்களின் உதவியுடன் கரிமா பலூச்-ன் உடல் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களால் கரிமா பலூச் பாகிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறி கனடா நாட்டில் அடைக்கலம் புகுந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிவைக்கப்பட்ட மற்ற பலூச் ஆர்வலர்கள் ?
இது ஒரு தனி நிகழ்வு இல்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து எடுத்துரைத்த 'தி பலூசிஸ்தான் போஸ்ட்' நாளிதழின் நிறுவனர் சஜித் உசேன், ஸ்வீடனின் உப்சாலா நகருக்கு அருகே அமைதுள்ள ஃபைரிஸ் ஆற்றில் (Fyris )இறந்து கிடந்தார். அவரது உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரை காணவில்லை.
அவர் பாகிஸ்தான் அரசை விமர்சித்ததால் மரண அச்சுறுத்தல்கள், காவல்துறை சோதனைகள் மற்று ம் இதர துன்புறுத்தல்களுக்கு ஆளான ஹுசைன் 2017 ல் பாகிஸ்தானிலிருந்து தப்பிச் சென்று, ஸ்வீடனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்தார்.