Advertisment

ரஷ்யா - உக்ரைன் யுத்தம்: தெற்காசிய நாடுகள் இந்த போரை எப்படி பார்க்கின்றன?

இம்ரான் கானிடம், ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து ஐ.நாவின் சாசன கொள்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டதற்கு, உலக நாடுகள் ஏன் இந்தியா காஷ்மீரை தன்னோடு இணைத்துக் கொண்ட விவகாரத்தில் இதே போன்று ஏன் செயல்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Russia Ukraine Crisis How South Asia views the war

Nirupama Subramanian 

Advertisment

தங்கள் நாட்டின் வரலாறு, பொருளாதாரம், அதிகாரத்திற்காக சண்டையிடும் போட்டியாளர்கள், உலக நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவுகளை அடிப்படையாக கொண்டு இந்தியாவின் அண்டை தெற்காசியா நாடுகள் தற்போது நடைபெற்று வரும் ரஷ்ய - உக்ரைன் போரில் தங்களின் நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இந்த ஏழு நாடுகளில், ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் மற்றும் நடுநிலைமையை கடைப்பிடித்தவர்களுக்கு மத்தியில் ஒரு தெளிவான பிளவு இருக்கிறது.

ஆப்கானிஸ்தான், பூட்டான், மாலத்தீவுகள், நேபாளம் ஆகிய நாடுகள் ஐ.நா. பொதுசபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது. வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. ஐ.நா. மனித உரிமை குழுவின் உறுப்பினராக இருக்கும் நேபாளம், உக்ரைனில் மனித உரிமைகளை மீறும் ரஷ்யா மீது சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற மனித உரிமை குழுவின் தீர்மானத்திற்கும் ஆதரவாக வாக்களித்துள்ளது.

ஊடுருவ முயன்ற ரஷ்யா.. உஷாரான உக்ரைன்..! யானை திருவிழாவை கொண்டாடிய நாடு.. மேலும் செய்திகள்

இலங்கை சுற்றுலாவும் தேயிலையும்

இலங்கையின் சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்று வருகின்ற நிலையில் பொருளாதார நெருக்கடி இந்த ஆண்டு சரி செய்யப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் உக்ரைன் நெருக்கடி அதனை கேள்விக் குறியாக்கியுள்ளது. அந்நிய செலாவணி பற்றாக்குறை இலங்கையின் இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் காரணமாக எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு, எரிபொருள் கொள்முதலுக்காக இலங்கைக்கு இந்தியா வழங்கிய 500 மில்லியன் டாலர் நிதி தற்போது போதுமானதாக இல்லை.

ஏற்கனவே 2019 ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் 2020 கொரோனா பெருந்தொற்றால் அடிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக புத்துயிர் பெற்று வரும் இலங்கையின் சுற்றுலாத்துறையும் மேலும் ஒரு முறை அடிவாங்க துவங்கும். ஏன் என்றால் ரஷ்யாவும் உக்ரைனும் இலங்கையின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய நாடுகள்.

இலங்கையின் தேயிலை அதிக அளவு ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது விதிக்கப்பட்டிருக்கும் சர்வதேச தடைகளை கொழும்பு ஓரளவுக்கு சமாளித்தால் மட்டுமே இலங்கையின் தேயிலை ரஷ்யாவில் விற்பனை செய்யப்படும்.

இந்த காரணங்களால் தான் இலங்கை ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானத்தில் வாக்களிக்கவில்லை என்றாலும், கொழும்புவின் நடுநிலைத் தன்மையை பலரும் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். வங்கதேச விடுதலைக்கு வழிவகை செய்த 1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் இலங்கை பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தது மட்டுமின்றி பாகிஸ்தான் விமானப்படை விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் வசதிகளையும் இலங்கை கொடுத்து உதவியது. இந்த சூழலை தற்போது இலங்கையின் சார்புநிலையோடு ஒப்பிட்டும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

“பாகிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் உரிமை இந்தியாவுக்கு இல்லை. 1971ம் ஆண்டு இலங்கை எடுத்த இந்த நிலைப்பாட்டிற்கு பின்னால் வலிமையான சுயநலம் இருந்தது என்று தான் கூற வேண்டும். இலங்கையின் இருத்தல் தொடர்பான பிரச்சனைகள் இந்தியாவிடம் இருந்து வரலாம் என்று அது கணித்தது. இலங்கையின் சிறுபான்மையினருக்கான இந்தியாவின் ஆதரவையும் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீறுவதை ஆதரிக்கும் எந்த முன்னுதாரணத்தையும் உருவாக்க முடியாது” என்று ரொஹான் சமரஜீவ கொழும்பு டெலிகிராப்பில் கூறினார்.

பாகிஸ்தானின் நிலைப்பாடு

ஐ.நா. பொதுசபையின் தீர்மானத்திற்கு எதிராக பாகிஸ்தான் வாக்களிக்க மறுத்துவிட்டது. வாக்களிப்பிற்கு முன்னால் அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட பேசுவதற்கான நேரத்தையும் கடந்துவிட்ட சூழலில் வாக்களிக்கவும் இல்லை, வாக்களிக்காமல் போனதற்கான காரணத்தையும் விளக்கவில்லை. இது பிராந்தியத்தில் நிலவும் புதிய புவிசார் அரசியல் சாத்தியக்கூறுகளின் பிரதிபலிப்பாகும். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற ஆப்கான் யுத்தத்தின் மத்தியில் அமெரிக்கா உடன் நிலவிய பதட்ட சூழலை தணிக்கும் பொருட்டு உருவாகி வளர்ந்தது தான் ரஷ்யாவுடனான பாகிஸ்தானின் உறவு.

பைடன் ஆட்சியின் போது, குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து தன்னுடைய படைகளை அமெரிக்கா திரும்பப் பெற்ற நிலையில் பாக் - அமெரிக்கா இடையேயான உறவு ஒரு சீர்நிலையை அடைந்தது. அமெரிக்க அதிபரும் பாகிஸ்தான் பிரதமரும் ஒரு நாளும் பேசியதில்லை. சீனாவுடன்னும் ரஷ்யாவுடனும் பாகிஸ்தான் மேற்கொள்ள இருக்கும் புதிய உறவு ஆப்கானிஸ்தான் மற்றும் யூராசியா பகுதியில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் நம்புகின்றது.

ஆனால் சரியான நேரத்தில் மாஸ்கோவிற்கு சென்ற இம்ரான் கான், போர் துவங்கிய பிறகு புடினை சந்தித்த முதல் உலக தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்தார். பாகிஸ்தானில் உள்ள பல்வேறு அரசியல் நிகழ்வுகளை ஆய்வு செய்யும் முக்கிய நபர்களும், “தவறான ஆலோசனை மூலம் நிகழ்ந்த செயல் இது” என்று மேற்கோள்காட்டினார்கள். இந்த வார துவக்கத்தில் இஸ்லமாபாத்தில் இம்ரான் கானிடம், ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து ஐ.நாவின் சாசன கொள்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டதற்கு, உலக நாடுகள் ஏன் இந்தியா காஷ்மீரை தன்னோடு இணைத்துக் கொண்ட விவகாரத்தில் இதே போன்று ஏன் செயல்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

வங்கதேசம் 1971, 2021 நினைவுகள்

வங்க தேசம் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காமல் போனதற்கு சொந்த காரணங்களைக் கொண்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமென் “உலகம் முழுவதும் அமையும் ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும் என்பது தான் டாக்காவின் நிலைப்பாடு” கூறியுள்ளார். நாங்கள் ஏற்கனவே அமைதி மூலம் தீர்வு காண வேண்டும் என்று உலக நாடுகளிடம் கூறியதைப் போலவே ஐ.நாவிலும் கூறியுள்ளோம். தற்போது நிலவும் சூழல் குறித்து நாங்கள் அதிக அக்கறை செலுத்துகிறோம். அதனால் தான் ஐ.நா. பொதுசபையின் பொதுச் செயலாளர் இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சமூக முடிவுகளை எட்ட முயல வேண்டும் என்று கூறுகிறோம்” என்று ஐ.நா.பொதுசபையின் தீர்மானத்திற்கு பிறகு டாக்காவில் மோமென் தெரிவித்தார்.

அமெரிக்காவும், ஷேக் ஹசினா ஆட்சிக்கும் இடையே இருக்கும் பதட்டமான சூழல் பின்னணியில் இந்த விவகாரத்தை காண வேண்டும். பைடனின் நிர்வாகம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாத் குழுவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ரேபிட் ஆக்‌ஷன் பெட்டாலியன் மீது சுமத்தப்பட்ட மனித உரிமை அத்துமீறல்கள் குற்றச்சாட்டை தொடர்ந்து பொருளாதார தடை விதித்தது.

மற்றொரு புறம், பாகிஸ்தான் - இந்தியா 1971ம் ஆண்டு போரின் போது மாஸ்கோர் இந்தியாவுக்கு உதவியதை நன்றியுடன் நினைவு கூறுகிறது டாக்கா. அந்த சமயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா நின்றது. தற்போது அதே ரஷ்யா டாக்காவில் அதன் முதல் அணு மின் நிலையத்தை கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுக்கு எதிராக நேபாளம்

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை புறக்கணித்த சீனா மற்றும் இந்தியாவுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த குட்டி நாடு எடுத்த முடிவு, அதன் சொந்த அரசியல் பிரச்சனைகளை பிரதிபலிக்கிறது. அமெரிக்காவிடம் இருந்து 500 மில்லியன் டாலர் நிதியை நாட்டின் மேம்பாட்டு தேவைக்காக பெறலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் நேபாளம் இருக்கும் போது இத்தகைய முடிவை எடுத்துள்ளது நேபாளம். 2020ம் ஆண்டு காத்மாண்டு வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவின் நிலப்பகுதியை தன்னுடையதாக காட்டிய நிலையில் இருநாட்டிற்கும் இடையேயான உறவு தடுமாற்றத்தில் இருக்கிறது.

ஐ.நாவிற்கான நிரந்த நேபாள பிரதிநிதி அம்ரித் ராய் எந்தவொரு இறையாண்மையுள்ள நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அரசியல் சுதந்திரத்திற்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலையும் அல்லது சக்தியைப் பயன்படுத்துவதையும் தனது நாடு எதிர்க்கிறது என்று UNGA இல் கூறினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான மின் விநியோகம் மற்றும் சாலை கட்டுமானத்திற்காக அமெரிக்கா வழங்க இருக்கும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஏற்பது தொடர்பாக நடத்தப்பட்ட தொடர் போராட்டங்கள் போன்ற பெரிய உள்நாட்டு அரசியல் மோதலில் இருந்து மேம்பட்டு வருகிறது நேபாளம். நேபாள அரசியல் தலைவர்கள், அமெரிக்காவிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொள்வது என்பது இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான முகாமில் சேருவதற்கு சமம் என்று கருதுகின்றனர்.

பணத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் நேபாளத்துடனான உறவு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று அமெரிக்கா மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிதியை ( Millennium Challenge Corporation (MCC)) பெற்றுக் கொள்வதற்கான காலக்கெடு முடிவதற்கு சில மணி நேரங்கள் இருக்கும் போது நேபாள நாடாளுமன்றத்தில் இந்த நிதியை பெறுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். எம்.சி.சி. என்பது பண்டோரா பெட்டியா அல்லது அன்பளிப்பா என்று கேள்வி எழுப்பிய சீனா, தன்னுடைய தேவையை பூர்த்தி செய்ய வற்புத்தும் ராஜதந்திரத்தை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது என்றும் குற்றம் சாட்டியது.

பூட்டான்

இந்தியாவின் துணைகோளாக கருதப்பட்ட பூட்டான் கடந்த சில காலங்களில் சுதந்திரமான்ன வெளிநாட்டுக் கொள்கைகளை பின்பற்றி வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக நிலைப்பாட்டைக் கொண்டுள்ள பூட்டான் ஐ.நா. பொதுசபையில் அந்நாட்டிற்கு எதிராகவும் வாக்களித்தது.

நேபாளத்தைப் போன்றே இரண்டு பெரிய நாடுகளுக்கு மத்தியில் பூட்டான் இடம் பெற்றுள்ளது. எத்தகைய போட்டிக்குள்ளும் சிக்கிக் கொள்ள கூடாது என்று மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது இந்நாடு. பூடான் பிரதேசத்தில் சீனா உரிமை கோரியது, மூன்று-படி எல்லை ஒப்பந்தத்துக்காக அக்டோபர் 2021 இல் இரு தரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக வழிவகை செய்தது.

”ரஷ்யாவின் பாதுகாப்பின்மை என்ற காரணத்திற்காக ஆதரவாக நாம் சென்றால், நமக்கு பிடிக்காத, நம்முடன் பிரச்சனையில் ஈடுபட்ட அனைத்து அண்டை வீட்டுக்காரர்களின் வீடுகளையும் மக்கள் ஆக்கிரமிப்பு செய்யலாம் என்பது போல் ஆகிவிடும் என்று பூட்டான் கூறியுள்ளது. நீங்கள் ஒரு பெரிய சக்தியாக இருந்தால், உண்மையான அல்லது கற்பனையான பாதுகாப்பின்மை இருந்தால், நீங்கள் ஒரு சிறிய நாட்டின் இறையாண்மையின் மீது போர் தொடுக்கலாம் என்பதாகவே இருக்கிறது உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவின் வாதம்” என்று தி பூட்டானிஷ் இதழின் ஆசிரியர் டெஞிங் லாம்சாங் ட்வீட் செய்துள்ளார்.

மாலத்தீவு

கடந்த ஆண்டு, சோலிஹ் ஆட்சியின் கீழ் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது மாலத்தீவு. மேலும் கடந்த யாமீன் ஆட்சியின் போது சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த வெளியுறவுக் கொள்கையை ஒன்றுமில்லாமல் செய்த மாலத்தீவு நிர்வாகமும் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்துள்ளது. மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் ஐநா பொதுச் சபையின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் ரஷ்யா - உக்ரைன் விவகாரம் மிகப்பெரிய ஒன்றாக மாறும் அனைத்து சாத்தியக் கூறுகளையும் உள்ளடக்கியுள்ளது. எல்லைக்கு உள்ளும் வெளியும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதோடு நெருக்கடி சூழலை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பிராந்திய நாடுகளின் நெருக்கமான ஒத்துழைப்பின் அவசியத்தை நாங்கள் நினைவுப்படுத்துகிறோம் என்று மாலத்தீவு பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியா திதி, மாலேவில் நடைபெற்ற கொழும்பு பதுகாப்பு மாநாட்டில் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான்

தாலிபான்களால் கவிழ்க்கப்பட்ட ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளே ஐ.நா பொதுசபையில் ரஷ்யாவுக்கு எதிராக தங்களின் வாக்கை பதிவு செய்தனர். தாலிபான் அரசை அதிகாரப்பூர்வ ஆப்கானிஸ்தான் அரசாக இன்னும் அங்கீகரிக்கவில்லை என்ற நிலையில் தாலிபான் அரசு நடு நிலைத்தன்மையை கொண்டிருப்பதாக இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்துள்ள நிலையில் ஆப்கான் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் உலக நாடுகளின் கவனம் தற்போது வேறெங்கோ திசை திருப்பப்பட்டுள்ளது என்று ஆப்கான் மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment