Advertisment

உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு: ராஜீவ் கொலை வழக்கு பேரறிவாளன் கதை

பேரறிவாளனுக்கு தடா நீதிமன்றம் 1998 இல் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனை 1999 இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
Perarivalan, Perarivalan case, Perarivalan bail, பேரறிவாளன், பேரறிவாளன் விடுதலை வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு, உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தி கொலை வழக்கு, Perarivalan parole, SC on Perarivalan, Tamil Indian Express

1991 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி கைது செய்யப்பட்டபோது அறிவு என்கிற ஏ.ஜி. பேரறிவாளனுக்கு 19 வயது. இந்த சதித்திட்டத்தை தீட்டிய விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிவராசனுக்காக இரண்டு 9 வோல்ட் 'கோல்டன் பவர்' பேட்டரி செல்களை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வெடிகுண்டில் அந்த பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டன.

Advertisment

பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தின் வேலூர் மற்றும் புழல் மத்திய சிறைகளில் இருந்து வரும் நிலையில், பேரறிவாளன் விடுதலை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையை முடித்து, உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (மே 11) தீர்ப்பை ஒத்திவைத்தது.

பல சட்டப் போராட்டங்களும் சிறைவாசமும்

பேரறிவாளனுக்கு 1998-இல் தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1999-ல் உச்ச நீதிமன்றம் இந்த தண்டனையை உறுதி செய்தது. இந்த வழக்கில் மற்ற குற்றவாளிகளான முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, 2014 பிப்ரவரி 18-ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு பேரறிவாளன், அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்யக் கோரி தமிழக ஆளுநரிடம் சமர்ப்பித்த மனுவுக்கு பதில் கிடைக்காததால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆகஸ்ட் 2017 இல், தமிழ்க் கவிஞரும், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியருமான தனது நோய்வாய்ப்பட்ட தந்தையைப் பார்ப்பதற்காக பேரறிவாளன் முதல் முறையாக பரோல் (சிறை விடுப்பு) பெற்றார்.

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி பேரறிவாளன், விடுதலை செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பேரறிவாளன் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்ட பல்வேறு குற்றங்களுக்காக வழங்கப்பட்ட தண்டனைகளை அவர் அனுபவித்து முடித்துவிட்டதாகவும், இப்போது அவர் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலைக்கான தண்டனை) இன் கீழ் மட்டுமே சிறைவாசம் அனுபவித்து வருவதாகவும் அந்த பரோல் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியின் வழக்கை பரிசீலிக்க உரிய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று அந்த உத்தரவு கூறியது.

பேரறிவாளன் மனு மீது முடிவெடுப்பதில் தாமதம் ஆனது குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருடைய மனு மீது முடிவெடுக்க ஆளுநருக்கு உரிமை உண்டு என்று செப்டம்பர் 2018 இல் கூறியது. சில நாட்களில், அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை, இந்த வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்தது. ஆனால், அமைச்சரவையின் பரிந்துரை குறித்து ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்து வருகிறார்.

publive-image

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ ஜெயலலிதாவை பிப்ரவரி 2014 இல் சென்னையில் சந்தித்தார். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

2020 ஜூலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து ஆளுநர் கடுமையான கருத்துக்களை எதிர்கொண்டார். “அரசியலமைப்பு பதவியின் மீதுள்ள நம்பிக்கை மற்றும் பற்றுறுதி காரணமாக மட்டுமே இது போன்ற பிரச்சினைகளில் முடிவெடுக்க அரசியலமைப்பு அதிகாரம் உள்ள ஆளுநருக்கு காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை. அத்தகைய அதிகாரப் பதவியில் உள்ளவர் உரிய நேரத்தில் முடிவெடுக்கத் தவறினால், நீதிமன்றம் தலையிட்டு கட்டுப்படுத்தப்படும்” என்று உயர் நீதிமன்றம் கூறியது.

ஜனவரி 2021 இல், உச்ச நீதிமன்றமும் ஆளுநர் தரப்பில் நீண்ட கால தாமதம் செய்வது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியது. இதனால், உச்ச நீதிமன்றம் ஒரு முடிவை எடுக்க நிர்பந்திக்கப்படலாம் என்று எச்சரித்தது. மேலும், முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படாது என அரசு வழக்கறிஞர் உறுதியளித்தார். ஆனால், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, ஆளுநர் அலுவலகம் பிப்ரவரி 2021 இல் முடிவெடுப்பதற்காக இந்த கோப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு அனுப்பியது.

மூத்த நீதிபதிகள் ஆளுநரின் நடவடிக்கையை சட்டவிரோதம் என்று விவரித்தனர். அதன் பிறகு, பல விசாரணைகளில் உச்ச நீதிமன்றம் இந்த நகர்வு குறித்து கேள்விகளை எழுப்பியது. இந்த விவகாரம் ராஷ்டிரபதி பவனில் தொடர்ந்து இருக்கிறது.

இதனிடையே, மே 19, 2021 -இல் பேரறிவாளனுக்கு மாநில அரசு பரோல் வழங்கியது. பின்னர், அவருடைய பரோல் உடல்நலக் காரணங்களுக்காக நீட்டிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் மார்ச் 9, 2022 -இல் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டுகள்

“…மேலும், இரண்டு 9 வோல்ட் பேட்டரி செல்களை (கோல்டன் பவர்) வாங்கி சிவராசனிடம் கொடுத்தேன். வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய அவர் அவற்றை மட்டுமே பயன்படுத்தினார்” என்று பேரறிவாளனின் வாக்குமூலம் தடா பிரிவு 15 (1) இன் கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வாக்குமூலம் கொலையாளிகளுடன் அவருக்கு தொடர்பு ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தது.

தடா நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்த ஒப்புதல் வாக்குமூலம் அவருக்கு தெரிந்திருந்ததையும் அந்த படுகொலையில் அவருக்கு உள்ள பங்கையும் நிறுவ பயன்படுத்தப்பட்டது என்பதைக் காட்டுகிறது. ஆனால், 1999 ஆம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதில் இருந்து, ஆளுநர், குடியரசுத் தலைவர், நீதிமன்றங்களின் முன்பு அளித்த மனுக்களில், பேரறிவாளன் பலமுறை நிரபராதி என்று தொடர்ந்து கூறிவந்தார்.

பேரறிவாளனின் கருத்துக்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையில், 1981 -ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான வி தியாகராஜன் என்பவர், தடா சட்டத்தின் கீழ் பேரறிவாளன் காவலில் இருந்தபோது, ​​பேரறிவாளனிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையை மாற்றியதாக 2013ஆம் ஆண்டு தெரிவித்தார். பேட்டரிகளை வாங்கியதாக பேரறிவாளன் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால், அதன் நோக்கம் அவருக்கு என்னவென்று தெரியாது என்றும் தியாகராஜன் தெரிவித்தார்.

“ஒரு புலணாய்வு விசாரணை அதிகாரியாக அது என்னை ஒரு இக்கட்டான நிலையில் தள்ளியது. சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததை அவர் ஒப்புக் கொள்ளாமல் அது ஒப்புதல் வாக்குமூலத்துக்கான தகுதியைப் பெறாது. அங்கே அவருடைய அறிக்கையின் ஒரு பகுதியை தவிர்த்துவிட்டு எனது விளக்கத்தையும் சேர்த்துள்ளேன்” என்று தியாகராஜன் கூறினார். இது தொடர்பான பிரமாண பத்திரமும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பேரறிவாளனின் வாக்குமூலத்தை உறுதிப்படுத்தும் வகையில் 9 வோல்ட் பேட்டரி தொடர்பான நான்கு சாட்சிகளிடம் தடா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நான்கு சாட்சிகளில், மூன்று சாட்சிகள் தடயவியல் நிபுணர்கள், அவர்கள் பேட்டரி மற்றும் வெடிகுண்டு குறித்து கருத்துக்களை வழங்கினர். நான்காவது சாட்சி சென்னையில் உள்ள ஒரு கடையில் பேட்டரியை விற்றதாகக் கூறிய ஊழியர் ஆவார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் இறுதி உத்தரவை வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.டி. தாமஸ் தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு 2017 ஆம் ஆண்டு அளித்த பேட்டியில், பேரறிவாளன் வழக்கு தீவிர விவாதத்தை உருவாக்கிய வழக்கின் மற்றொரு அம்சத்தை முன்னுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறினார். குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வாக்குமூலத்தை மற்றொருவருக்கு எதிராக பயன்படுத்துவது குறித்து தீவிர விவாதத்தை உருவாக்கியது.

publive-image

பேரறிவாளன் தனது சகோதரிகள் அருள்செல்வி (இடது) மற்றும் அன்புமணியுடன். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

“இந்திய சாட்சியச் சட்டத்தின் கீழ், ஒப்புதல் வாக்குமூலத்தை உறுதிப்படுத்தும் ஆதாரமாக மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், எனது அமர்வில் இருந்த மற்ற இரண்டு நீதிபதிகளும் ஒப்புக்கொள்ளவில்லை. நாம் அதை ஆதாரமாக பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதுபோல தவறாக சட்டம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, நான் அவர்களை எனது இல்லத்துக்கு அழைத்தேன். அங்கே நாங்கள் பல சுற்று விவாதங்களை நடத்தினோம். அதில், நான் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தேன். ஆனால், தீர்ப்பில் பெரும்பான்மையானவர்கள் வாக்குமூல அறிக்கையை தடா (பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்) கீழ் இருந்ததால் அதை முக்கியமான ஆதாரமாகக் கருதினர். பின்னர், பல மூத்த நீதிபதிகள் என்னை அழைத்து, இந்த வழக்கில் பெரும்பாலான உத்தரவு தவறான சட்டத்தை பயன்படுத்தியுள்ளது என்று கூறினார்கள்.” என்று கூறினார்.

பேரறிவாளனுக்கு ஆதரவாக நின்ற நீதிபதிகள்

மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தின் முகமாக உருவெடுத்த பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் உறுதியும் அர்ப்பணிப்பும், அனைத்துத் தரப்பு மக்களிடமும் அவர் பெற்ற அனுதாபமும், கருணையும் பேரறிவாளனின் நீண்ட காலப் போராட்டத்துக்கு துணையாக இருந்தது.

“அவருடைய ஆன்மா விலைமதிப்பற்றது, அவருடைய மதிப்புகள் உன்னதமானது. அவரது சிறை வாழ்க்கை அவரை ஒரு குற்றவாளியாக்கவில்லை” என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, மறைந்த நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் 2006 இல் எழுதினார். நீதிபதி கிருஷ்ணய்யர் அவர் இறக்கும் வரை பேரறிவாளனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.

2014 இல் மூன்று குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட வழக்கில், 2013 இல் 'இரட்டை ஆபத்து' என்று கேள்வி எழுப்பிய நீதிபதி தாமஸ், சோனியா காந்தியிடம் பெருந்தன்மை காட்ட வேண்டும் என்று கோரினார். குடியரசுத் தலைவருக்கு மீண்டும் அனுப்புவதற்கான ஆளுநரின் முடிவை விசாரிக்கப்படாதது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறினார்.

மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேவை 14 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்க 1964 இல் மத்திய அரசு எடுத்த முடிவை அவர் மேற்கோள் காட்டினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Perarivalan Rajiv Gandhi A G Perarivalan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment