பாகிஸ்தானின் ஜிஹாதி ஜெனரல்... யார் இந்த அசிம் முனீர்?

பாகிஸ்தான் ராணுவத் தலைவர்களில் ஜெனரல் ஆசிம் முனீர் மிகவும் சக்திவாய்ந்த நபராக உள்ளார். அவர் ஒரு மத வெறியர். ஐ.எஸ்.ஐ. மற்றும் ராணுவ உளவுத்துறை ஆகிய இரண்டையும் வழிநடத்திய ஒரே நபர் ஆசிம் முனீர்தான்.

பாகிஸ்தான் ராணுவத் தலைவர்களில் ஜெனரல் ஆசிம் முனீர் மிகவும் சக்திவாய்ந்த நபராக உள்ளார். அவர் ஒரு மத வெறியர். ஐ.எஸ்.ஐ. மற்றும் ராணுவ உளவுத்துறை ஆகிய இரண்டையும் வழிநடத்திய ஒரே நபர் ஆசிம் முனீர்தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Asim Munir, Pakistan

யார் இந்த அசிம் முநீர்? பாகிஸ்தானின் ஜிஹாதி ஜெனரலின் கதை!

பாரம்பரியமாக, இந்தியாவை வெளிப்படை மற்றும் ரகசியமாக எதிர்ப்பதே பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய நோக்கமாக இருந்துவந்துள்ளது. இதன் விளைவாக, ஏப்.22 அன்று காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் ஆதரவாளர்கள் மீது அனைவரின் கவனத்தை திருப்பியுள்ளது.

Advertisment

பஹல்காம் சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான், பாகிஸ்தானின் மிகவும் சக்திவாய்ந்த நபராகக் கருதப்படும் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர், பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் விதமாக உரையை நிகழ்த்தியிருந்தார். முகமது அலி ஜின்னாவால் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட சொற்றொடரான காஷ்மீரை பாகிஸ்தானின் "கழுத்து நரம்பு" என்று குறிப்பிட்ட ஆசிம் முனீர், ஏப்.15 அன்று இஸ்லாமாபாத்தில் பேசுகையில், "பாகிஸ்தான் தனது காஷ்மீரி சகோதரர்களை  ஒருபோதும் கைவிடாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, பிப்ரவரியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK) முசாஃபா நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய முனீர், மேலும் ஒரு படி மேலே சென்றார். "உடலின் கழுத்து நரம்பை வெட்டுவது உயிருக்கு முடிவைக் குறிக்கும்" என்று கூறிய அவர், "முஸ்லீம் போராளிகள் விருப்பம் எப்போதும் நம்பிக்கை, பக்தி மற்றும் அல்லாஹ்வின் வழியில் ஜிஹாத் ஆகியவற்றின் அடிப்படையில் மேலோங்கும்" என்றும் குறிப்பிட்டார்.

இந்த தொடர்ச்சியான நிகழ்வுகள், காஷ்மீரில் அதிகரித்து வரும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் மறைமுகமான ஆதரவு (அ) ஊக்குவிப்பு இருக்கக்கூடுமோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இந்திய அரசு தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், பாகிஸ்தான் தனது மண்ணில் இயங்கும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்கு பாகிஸ்தானின் எதிர்கால நடவடிக்கைகள் முக்கியமானதாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

”முல்லா ஜெனரல்”:

பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்களைப் பொறுத்தவரை, 57 வயதான முனீர் பல வழிகளில் தனித்துவமானவராக தெரிகிறார். 2015 முதல் 2020 வரை ராணுவ உளவு அமைப்பான R&AW-ன் பாகிஸ்தான் பிரிவின் தலைவராக இருந்த ராமநாதன் குமார், முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முனீரை பாகிஸ்தானின் முதல் "முல்லா ஜெனரல்" என்று வர்ணித்திருந்தார்.

சவுதி அரேபியாவில் ராணுவ பிரிவில் பணியாற்றியபோது, அப்போதைய 38 வயதான லெப்டினன்ட் கர்னலான முனீர், புனித குர்ஆனை மனப்பாடம் செய்தார். இந்த சாதனை அவருக்கு ஹாஃபிஸ்-இ-குரான் என்ற பட்டத்தை பெற்றுத் தந்தது. பாகிஸ்தான் ராணுவத் தலைவராக பதவியேற்ற பிறகு, முனீர் தனது உரைகளில் குர்ஆன் வசனங்களையும் இஸ்லாமிய இறையியலையும் தயக்கமின்றி பயன்படுத்தினார். ஆங்கிலம் அல்லது உருது மொழியிலிருந்து செம்மொழியான அரபுவில் சரளமாக பேசுவார்.

ஏப்.15 அன்று முனீர் பேசுகையில், "கலிமாவின் அடித்தளத்தில் கட்டப்பட்ட 2 நாடுகள் மட்டுமே இதுவரை உள்ளன... முதலாவது ரியாசத்-இ-தயீபா (ரியாசத்-இ-மதீனா, நபி முகமதுவால் நிறுவப்பட்ட முதல் இஸ்லாமிய அரசு) மற்றும் இரண்டாவது, அல்லாஹ் ஆயிரத்து 300 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டியது, உங்கள் நாடு (பாகிஸ்தான்)" என்று குறிப்பிட்டார்.

முனீரின் மதப்பற்று அவரது பேச்சில் உள்ளன. பாகிஸ்தான் ராணுவத்தின் உயர்மட்டத்தில் உள்ள பலரைப் போலல்லாமல், அவர் பாரம்பரியமிக்க ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. 1947-ல் இந்தியாவின் ஜலந்தரில் இருந்து  பாகிஸ்தானின் ராவல்பிண்டிக்கு குடிபெயர்ந்த ஒரு முஹாஜிர்ரான அவரது தந்தை, ஒரு பள்ளி தலைமையாசிரியராகவும் உள்ளூர் மசூதியின் இமாமாகவும் இருந்தார்.

முனீர் கல்வி மற்றும் பின்னணி:

முனீர் தனது ஆரம்பக் கல்வியை ராவல்பிண்டியில் உள்ள இஸ்லாமிய மதப் பள்ளியில் பயின்றார். பின்னர், 1986 ஆம் ஆண்டில் மங்லாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் பட்டம் பெற்றார். மேலும் எல்லைப்புற படைப்பிரிவின் 23வது பட்டாலியனில் பணியமர்த்தப்பட்டார். இது ஜெனரல் ஜியா உல்-ஹக்கின் ஆட்சியின் உச்சக்கட்டமாக இருந்தது. "பாகிஸ்தான் ராணுவத்தில் வெளிப்படையான மதப்பற்றை ஊக்குவிப்பவராக ஜியா-உல்-ஹக் கொண்டு வந்த மாற்றங்களின் உச்சக்கட்டமே முனீர்" என்று முனீர் ராணுவத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது 2022-ல் குமார் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குத் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

அமெரிக்க அறிஞர் ஸ்டீபன் கோஹன் தனது மிக முக்கியமான படைப்பான "தி ஐடியா ஆஃப் பாகிஸ்தான்" (2004)-ல், "ஜியா ஆட்சியில், இஸ்லாமியமயமாக்கல் மதுவிலக்குக்கு அப்பாற்பட்டது. அதிக அதிகாரிகள் தாடி வளர்க்கத் தொடங்கினர், மேலும் குர்ஆன் மற்றும் நபியின் மேற்கோள்களைக் கொண்ட பல அறிவிப்புப் பலகைகள் ராணுவ குடியிருப்புகளைச் சுற்றி வைக்கப்பட்டன. மதிப்பீட்டு படிவங்களில் ஒரு அதிகாரியின் மத நேர்மை குறித்த கருத்துகளுக்கான பெட்டியும் சேர்க்கப்பட்டது என்று எழுதினார்.

முனீர் தற்போது நீண்ட காலமாக இல்லாத அளவிற்கு பொதுமக்களால் வெறுக்கப்படும் ஒரு ராணுவ அமைப்பை வழிநடத்துகிறார். 2024-ல் பொதுத் தேர்தலில் இம்ரானின் PTI கட்சி போட்டியிட அனுமதிக்கப்படாதது, இம்ரானின் நீண்டகால சிறைவாசம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் போராட்டங்களுக்கு எதிரான அடக்குமுறை ஆகியவை ராணுவத்தின் பொதுமக்களுடனான உறவை பாதித்துள்ளது. ராணுவத்திலேயே இம்ரானுக்கு ஆதரவான மற்றும் எதிரான பிரிவுகள் உள்ளன.

பலுசிஸ்தானில் கிளர்ச்சி தீவிரமடைகிறது. அதேபோல் பாகிஸ்தான் தாலிபான் மற்றும் காபூல் ஆட்சியுடனான பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. மார்ச் 11 அன்று, பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கடத்தி நூற்றுக்கணக்கானவர்களை பணயக்கைதிகளாக வைத்தனர். இந்த சம்பவம் இறுதியில் 64 பேர் உயிரிழப்பிற்கு வழிவகுத்தது. பஞ்சாபிகள், ஷியாக்கள், சிந்தி மற்றும் சீன குடிமக்களை குறிவைத்து கொலை செய்வது பலுசிஸ்தான் மற்றும் கைபர்-பக்துன்க்வாவில் அடிக்கடி நிகழ்கிறது. 

முனீரின் சமீபத்திய அறிக்கைகள், கடினமான நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் அதன் ராணுவத்திற்கு ஆதரவை திரட்டும் முயற்சியாக இந்தியாவால் பார்க்கப்படுகிறது. ஏப்.15 அன்று முனீர் தனது உரையில், "எங்கள் (இந்துக்கள்-முஸ்லிம்களின்) மதங்கள் வேறு, எங்கள் பழக்கவழக்கங்கள் வேறு, எங்கள் மரபுகள் வேறு, எங்கள் எண்ணங்கள் வேறு, எங்கள் லட்சியங்கள் வேறு... நாங்கள் 2 தேசங்கள், நாங்கள் ஒரு தேசம் அல்ல" என்று கூறினார். "பாகிஸ்தானின் இந்த கதையை" அவரது பார்வையாளர்கள் மறக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

ஒரு இந்திய அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், முனீர் அமைதியான, தனிமை விரும்பும் மனிதர், குறைவாகவே பேசுகிறார். "ஆனால் அவர் பேசும்போது, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். எனவே அவர் இதயத்திலிருந்து, அவர் உண்மையில் நம்புவதை பேசினார்."

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ஏப்.15 அன்று அவர் ஆற்றிய உரை, குழப்பமான நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்த போராடும் ஒரு மனிதனின் விரக்தியான முயற்சியாக தோன்றுகிறது. நவம்பரில் அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு இது அவரது கடைசி உரையாக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Pakistan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: