The history of Tulu and the demand for official language status : கேரளா மற்றும் கர்நாடகாவில் பேசப்பட்டு வரும் துளுவ மொழிக்கு அலுவல் மொழி அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் ட்விட்டரில் “கேம்பைன்கள்” நடத்தினர். இதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையில் 2.5 லட்சம் நபர்கள் இம்மொழிக்கான அலுவல் மொழி அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளனர்.
இந்தியாவில் யார் துளு மொழி பேசுகின்றனர்? இதன் வரலாறு என்ன?
கர்நாடகாவின் இரண்டு கடலோர மாவட்டங்களான தக்ஷின கன்னடா மற்றும் உடுப்பியிலும், கேரளத்தின் காசர்கோடு பகுதியிலும் பேசப்பட்டு வரும் திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள மொழி தான் துளுவம். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 18,48, 427 நபர்கள் இம்மொழி பேசி வருகின்றனர். 2000 ஆண்டுகள் பழமை கொண்ட, திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள பழமையான மொழிகளில் ஒன்று என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ராபர்ட் கால்ட்வெல், A Comparative Grammar of the Dravidian- என்ற தன்னுடைய புத்தகத்தில் திராவிட மொழிக்குடும்பத்தில் நன்கு வளர்ச்சி அடைந்த மொழிகளில் ஒன்றாக துளுவை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
துளு மக்களின் உணமையான கோரிக்கை என்ன?
கர்நாடகா மற்றும் கேரளாவில் இருக்கும் துளு மொழி பேசும் மக்கள் இம்மொழியை அலுவல் மொழியாக அறிவிப்பதோடு இந்திய அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணையின் கீழ் இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். அஸ்ஸாமிஸ், பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடா, கஷ்மீரி, கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ் , தெலுங்கு, உருது, போடோ, சந்தாலி, மைதிலி மற்றும் டோக்ரி ஆகிய 22 மொழிகள் 8வது அட்டவணையில் இடம் பெற்றுள்ளன.
இந்த கோரிக்கையை ஆதரித்தவர்கள் யார்?
இந்த ட்விட்டர் “கேம்பனை” ஆதரித்து தக்ஷின கன்னடா எம்.பி. மற்றும் கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின் குமார் கத்தீல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணையில் துளுவை இணைப்பதற்கான முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சில நுட்பமான பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியது உள்ளது. எங்கள் ஆட்சி நிறைவடைவதற்குள் துளுவை அலுவல் மொழியாக அறிவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று ட்வீட் செய்திருந்தார். தக்ஷின கன்னடாவின் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோட்ட ஸ்ரீநிவாஸ் பூஜாரி, “துளு ஒரு மொழி மட்டும் அல்ல. வரலாற்றுடன் கூடிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அம்மொழி கொண்டுள்ளது” என்று கூறினார். துளு எங்களின் தாய்மொழி. அனைவரும் துளுவை அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் என்று எம்.எல்.ஏ வேதவ்யாஸ் காமத் கூறினார். அரசியல்வாதிகளைத் தவிர கன்னட நடிகர்கள், துளுவை தாய்மொழியாக கொண்ட ரக்ஷித் ஷெட்டி, ப்ருத்வி அம்பார் ஆகியோரும் இதற்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்தனர்.
துளு மொழியின் தற்போதைய நிலை என்ன?
கர்நாடகாவின் துளு சாகித்ய அகாதெமி தலைவர் தயானந்த கி. கத்தல்சர், துளு மொழி பேசும் மக்கள் மேல் கூறிய பகுதிகளில் கேரளா மற்றும் கர்நாடகாவில் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளை துளுநாடு என்று அழைக்கின்றோம். துளு தற்போது அலுவல் மொழி அல்ல. ஆனால் துளுவை அட்டவணை 8-ன் கீழ் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துளு 8வது அட்டவணையில் இணைக்கப்பட்டால், சாகித்ய அகாதெமியின் அங்கீகாரம் துளு மொழிக்கு கிடைக்கும் என்று கூறினார்.
கல்வியில் துளு
கர்நாடக அரசு துளுவை சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக் கல்வியில் அறிமுகம் செய்தது. மாநில கல்வித்துறையின் படி, 2020ம் ஆண்டு மொத்தமாக தக்ஷின கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களை சேர்ந்த 956 பள்ளி மாணவர்கள் தங்களின் மூன்றாவது மொழியாக துளுவை தேர்வு செய்து 10ம் வகுப்பு தேர்வை எழுதினார்கள். துளு அறிமுகம் செய்யப்பட்ட போது 2014-15 ஆண்டுகளில் 18 மாணவர்கள் துளுவை தங்களின் மூன்றாவது விருப்ப மொழியாக தேர்வு செய்தனர். கடந்த ஆண்டு ஜெய் துளுநாட் என்ற அமைப்பு புதிய தேசிய கல்விக் கொள்கையில் துளு மொழியை இணைக்க வேண்டும் என்று இணையங்களில் பிரச்சாரங்கள் மேற்கொண்டது. #EducationInTulu என்ற ஹேஷ்டேக்கில் தங்களின் கோரிக்கைகளை அவர்கள் வைத்தனர்.
துளு நாடு – தனி மாநில கோரிக்கை
29ஏ பிரிவு, மக்கள் பிரதிநிதி சட்டம் 1951ன் கீழ் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்ற துளுவேரே பக்ஷா என்ற அரசியல் கட்சி, துளு மொழி பேசும் மக்களின் அரசியல் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க துவங்கியுள்ளது. துளுவேரே பக்ஷா கட்சியின் மத்திய குழு தலைவர் ஷைலேஷ் ஆர்.ஜே. இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, மொழி அடிப்படையில் நாடு மறுசீரமைக்கப்பட்டபோது துளுநாடு கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் மக்களுக்கு தனி மாநிலங்கள் இருக்கின்ற போது துளுநாடு ஏன் தனி மாநிலமாக இருக்க கூடாது? என்ற கேள்வியை வைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil