இந்திய ரிசர்வ் வங்கியின் கார்டு-ஆன்-ஃபைல் (CoF) டோக்கனைசேஷன் விதிமுறைகள் அக்.1ஆம் தேதி சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளன. இது அட்டை பரிவர்த்தனைகளின் மேம்பட்ட பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் டி ரபி சங்கர் வெள்ளிக்கிழமை கூறுகையில்,“இந்த அமைப்புக்கு பல நீட்டிப்புகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “டோக்கனைசேஷனைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக வாடிக்கையாளரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் விரும்பினோம்” என்றார்.
மேலும், “ஏற்கனவே 35 கோடி டோக்கன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. செப்டம்பரில் மட்டும், 40 சதவீத பரிவர்த்தனைகள், 63 கோடி ரூபாய் மதிப்பிலானவை, டோக்கன்களைப் பயன்படுத்தி நடந்துள்ளது” என்றார்.
டோக்கனைசேஷன் என்றால் என்ன?
டோக்கனைசேஷன் என்பது 'டோக்கன்' எனப்படும் தனித்துவமான மாற்றுக் குறியீட்டைக் கொண்டு உண்மையான அட்டை விவரங்களை மாற்றுவதைக் குறிக்கிறது.
டோக்கனைசேஷன் செய்ய இந்தியா எப்படி முன்வந்தது?
செப்டம்பர் 2021 இல், இந்திய ரிசர்வ் வங்கி, வணிகர்கள் தங்கள் சேவையகங்களில் வாடிக்கையாளர் அட்டை விவரங்களை ஜனவரி 1, 2022 முதல் சேமித்து வைப்பதைத் தடைசெய்தது, மேலும் மாற்றாக கார்டு-ஆன்-ஃபைல் (CoF) டோக்கனைசேஷனைக் கட்டாயமாக்கியது.
தொடர்ந்து வியாபாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இதனை மேலும் 6 மாதங்களுக்கு அதாவது 2022 ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டித்தது.
இந்த டோக்கன்களின் அடிப்படையில் டோக்கன் உருவாக்கம் மற்றும் பரிவர்த்தனை செயலாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இந்த கருத்து அனைத்து வகை வணிகர்களிடமும் இன்னும் இழுவை அடையவில்லை என்பதை ஆர்.பி.ஐ., உணர்ந்தது.
தொடர்ந்து, காலக்கெடு 2022 செப்டம்பர் 30 வரை மேலும் நீட்டிக்கப்பட்டது.
இது குறித்து ரிசர்வ் வங்கி துணை கவர்னர் சங்கர், “ஒரு சில பங்கேற்பாளர்கள் தயாராக இல்லாமல் இருக்கலாம். இதுபோன்ற பின்னடைவுகள் காரணமாக வாடிக்கையாளர் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை.
மேற்கூறிய நபர்கள் இந்தக் கட்டமைப்பில் இணைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். எனினும் அவர்கள் கட்டமைப்பில் இணைவார்கள்” என்றார்.
டோக்கனைசேஷன் எப்படி வேலை செய்யும்?
டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வைத்திருப்பவர், டோக்கன் கோருபவர் வழங்கிய ஆப்ஸில் கோரிக்கையைத் தொடங்குவதன் மூலம் கார்டை டோக்கனைஸ் செய்துகொள்ளலாம்.
டோக்கனைசேஷன் சேவையைப் பெறுவதற்கு வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.
முன்னதாக, கார்டு டோக்கனைசேஷன் வசதி, ஆர்வமுள்ள கார்டு வைத்திருப்பவர்களின் மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கு மட்டுமே இருந்தது.
அதைத் தொடர்ந்து, டோக்கனைசேஷன் அளவின் அதிகரிப்புடன், நுகர்வோர் சாதனங்களான மடிக்கணினிகள், டெஸ்க்டாப்கள், அணியக்கூடிய பொருட்கள் (கைக்கடிகாரங்கள், பட்டைகள் போன்றவை) மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) சாதனங்களை உள்ளடக்கிய டோக்கனைசேஷன் நோக்கத்தை நீட்டிக்க ஆர்.பி.ஐ., முடிவு செய்தது.
டோக்கனைசேஷன் சேவைகளை யார் வழங்க முடியும்?
அங்கீகரிக்கப்பட்ட அட்டை நெட்வொர்க் மூலம் மட்டுமே டோக்கனைசேஷன் செய்ய முடியும். கார்டு நெட்வொர்க்கைத் தவிர வேறு எவராலும் டோக்கனில் இருந்தும் அதற்கு நேர்மாறாகவும் பான் எண்ணைக் கண்டறிய முடியாது என்பதை உறுதிப்படுத்த போதுமான பாதுகாப்புகள் வைக்கப்பட வேண்டும்.
டோக்கன் உருவாக்கும் செயல்முறையின் ஒருமைப்பாடு எல்லா நேரங்களிலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
டோக்கனைசேஷன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு என்ன லாபம்
பரிவர்த்தனை செயலாக்கத்தின் போது உண்மையான அட்டை விவரங்கள் வணிகருடன் பகிரப்படாததால், டோக்கனைஸ் செய்யப்பட்ட கார்டு பரிவர்த்தனை பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
உண்மையான அட்டை தரவு, டோக்கன் மற்றும் பிற தொடர்புடைய விவரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அட்டை நெட்வொர்க்குகளால் பாதுகாப்பான முறையில் சேமிக்கப்படும்.
இது குறித்து Axis வங்கியின் தலைவர் (பணம் செலுத்துதல் மற்றும் கார்டுகள்) சஞ்சீவ் மோகே, “கார்டு டோக்கனைசேஷன் மூலம், ஒரு கார்டு மற்றும் வணிகர் குறிப்பிட்ட டோக்கன் உருவாக்கப்படுகிறது.
இது மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும். வணிகரின் தரவில் ஏதேனும் தரவு மீறல் அல்லது ஹேக்கிங் முயற்சி நடந்தால், வாடிக்கையாளரின் கார்டு விவரங்கள் பாதுகாக்கப்படும்” என்றார்.
கார்டு வணிகம்
ரிசர்வ் வங்கியின் 2021-22 ஆண்டு அறிக்கையின்படி, 2021-22 ஆம் ஆண்டில், கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகள் அளவு அடிப்படையில் 27 சதவீதம் அதிகரித்து 223.99 கோடியாகவும், மதிப்பு அடிப்படையில் 54.3 சதவீதம் அதிகரித்து 9.72 லட்சமாகவும் இருந்தது.
ரிசர்வ் வங்கி மொத்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனை தரவை மதிப்பு மற்றும் அளவுகளின் அடிப்படையில் வழங்கினாலும், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கு தனி எண்களை வழங்குவதில்லை.
இருப்பினும், கணினியில் உள்ள டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை, டோக்கனைசேஷன் துறையைப் பற்றிய சில யோசனைகளை அளிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஜூலை 2022 இறுதி வரை, வழங்கப்பட்ட கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை சுமார் 8 கோடியாக இருந்தது, கணினியில் உள்ள டெபிட் கார்டுகள் 92.81 கோடி என்று சமீபத்திய ரிசர்வ் வங்கி தரவு காட்டுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.