Uttarkhand's Jim Corbett Tiger Reserve : உத்திரகாண்ட் மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது ஜிம் கார்பெட் தேசிய பூங்கா. இங்கு புலிகள் சரணாலயமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் தேசிய பூங்கா என்ற பெருமையை கொண்டது இந்த பூங்கா. கடந்த ஐந்தாண்டுகளில் 32 வன உயிரினங்கள், சரணாலயத்தில் இருக்கும் மற்ற வன உயிரினங்களால் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்பெட் புலிகள் வனகாப்பகத்தில் உள்ள புலிகள், யானைகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் தங்களுக்குள் ஒன்றையொன்று மாற்றி தாக்கி உயிரிழந்து வருவதாக அவ்வனக்காப்பகத்தின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து அம்மாநிலத்தின் தலைமை வனக்காப்பாளர் முழுமையான அறிக்கை ஒன்றை சமர்பிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம், மற்றும் பருவமாற்ற அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதில் ஜனவரி 1,2014 துவங்கி மே 31, 2019 வரையிலான ஐந்தரை ஆண்டு காலத்தில் காப்பகத்துக்குள் பலியான 36 வன உயிரினங்களின் இறப்பு குறித்த அறிக்கையை சமர்பித்துள்ளார்.
மேலும் படிக்க : ஒரே நாடு ஒரே தேர்தல் : நடைமுறை சிக்கல்களும் பயன்களும் என்னென்ன?
21 யானைகள்
உயிரிழந்த 36 வன உயிரினங்களில் 21 உயிரினங்கள் யானைகள் ஆகும். இதில் 13 யானைகள் (60%) புலிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. சாம்பர் போன்று மிகவும் வேகமாக ஓடும் மான்களை வேட்டையாடுவதற்கு தேவையான சக்தியில் மிகக் குறைவான சக்தியே இதற்கு தேவைப்படுவதால் யானைகள் கொல்லப்படுகின்றன. மேலும் ஒரு யானை வேட்டையாடப்பட்டால் கிடைக்கின்ற உணவின் அளவும் மிக அதிகம் என்பதால், அது விரைவில் இறைக்கான வேட்டையாகிறது. இதர யானைகள், சேர்க்கைகான துணைகளுக்கு நடைபெறும் போட்டியில் கொல்லப்படுகின்றன.
9 புலிகள்
இந்த ஐந்தாண்டுகளில் 9 புலிகள் கொல்லப்பட்டுள்ளன. அதில் 7 புலிகள் (80%) தங்களின் கூட்டத்துக்குள் நடக்கும் சண்டையில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது, மீதம் இருக்கும் புலிகளோ முள்ளம்பன்றி போன்ற விலங்குகளால் கொல்லப்பட்டுள்ளன.
6 சிறுத்தைப்புலிகள்
கொல்லப்பட்ட 6 சிறுத்தைப்புலிகளில் 4 சிறுத்தைப்புலிகள் சக வேட்டை விலங்குகளால் கொல்லப்பட்டன என்று தகவல்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் 2 சிறுத்தைப்புலிகள், புலிகளால் கொல்லப்பட்டன என்றும், மீதம் இரண்டு சிறுத்தைப்புலிகள் எப்படி கொல்லப்பட்டன என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஒரு பெண் புலி உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த கேள்விகள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த அறிக்கையும் தயார் செய்யப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது.