Arun Janardhanan
Vanniyar movement in Tamil Nadu : உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற நிலையில் வன்னியர் மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி 1987ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு விழுப்புரத்தில் நினைவிடம் எழுப்புவதாக திமுக அரசு கூறியுள்ளது.
இந்த இனத்தின் போராட்டம், தமிழக அரசியலில் இதற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், மற்றும் தங்களின் கடும் போட்டியாளரான, அஇஅதிமுக - பாஜக கூட்டணியின் ஒரு அங்கமாக இருக்கும் பாமகவிற்கு திமுகவின் இத்தகைய நகர்வு எம்மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி இங்கே காண்போம்.
வன்னியர் இயக்கம்
வன்னியர்கள், தமிழகத்தில் மிகப்பெரிய மற்றும் ஒருங்கிணைந்த பின் தங்கிய சமூகங்களில் ஒன்றாகும். 1980களின் மைய காலங்களில் அவர்கள் மாநிலத்தில் 20% இட ஒதுக்கீடு மற்றும் மத்திய சேவைகளில் 2% இட ஒதுக்கீடு கோரி பெரிய அளவில் போராட்டங்களை நடத்தினார்கள்.
இந்த போராட்டங்கள் சுயமரியாதை இயக்கம் மற்றும் நீதி கட்சி ஆதரித்தது. மருத்துவர் ராமதாஸ் தலைமையில் முதலில் வன்னியர் சங்கம் என்று சங்கம் ஆரம்பித்து அதன் மூலம் போராட்டங்கள் நடைபெற துவங்கின. பிறகு அவர் பாமக என்ற கட்சியை நிறுவினார்.
இதற்கு ஆதரவை தருமாறு 100 கணக்கான கடிதங்கள் மற்றும் தந்தி செய்திகளை அன்றைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு செயற்பாட்டாளார்கள் மூலம் அனுப்புவதன் மூலம் போராட்டம் துவங்கின. அப்போது ஆட்சியாளர்களாக இருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ராஜீவ்காந்தியிடம் இருந்து பதில்கள் ஏதும் வராத நிலையில், வன்னியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற துவங்கின. ரயில் மற்றும் சாலை போக்குவரத்தினை அவர்கள் முற்றுகையிட்டனர்.
ஒவ்வொரு கிராமத்தின் உறுப்பினர்களும், தங்கள் கிராம எல்லைகளில் இருக்கும் நெடுஞ்சாலைகளை முடக்க துவங்கினார்கள். மாநில நெடுஞ்சாலைகளில் இரு பக்கமும் இருந்த மரங்களை வெட்ட துவங்கினார்கள்.
1986ம் ஆண்டு நடைபெற்ற ஒரு முற்றுகை மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தது. ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். . டிசம்பர் 1986இல் ஒரு நாள் ரயில்கள் முற்றுகை தொடர்ந்தது. செப்டம்பர் 1987இல் உச்சக்கட்டமாக ஒரு வாரம் முழுவதும் போக்குவரத்து வட தமிழகத்தில் ஸ்தம்பித்தது.
1987ம் ஆண்டு நிகழ்ந்த மரணங்கள்
1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி துவங்கி 23ம் தேதி வரையில் போராட்டம் ஒன்றை அறிவித்தனர். ஆனால் அது விரைவிலேயே வன்முறைக் கலவரமாக மாறியது. குறைந்தது 21 நபர்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும்பாலானோர் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்கள். மேலும் சிலர் பட்டியல் இன மக்களுடன் ஏற்பட்ட வன்முறை கலவரத்தில் கொல்லப்பட்டனர்.
இது எம்.ஜி.ஆரின் ஆட்சியை அசைத்து பார்த்தது. ஆனால் இந்த போராட்டங்களுக்கு தீர்வு ஏதும் எட்டப்படவில்லை. மேலும் அதே ஆண்டில் டிசம்பர் மாதம் எம்.ஜி.ஆர். மரணம் அடைந்தார்.
இட ஒதுக்கீடு
மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 1989ம் ஆண்டு, ஓ.பி.சி. இரண்டாக பிரிக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று வழங்கப்பட்டது. வன்னியர்களுக்கு எம்.பி.சியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. வன்னியர்கள் 20% இட ஒதுக்கீட்டில், 107 பிற சமூகங்களுடன் எம்.பி.சியில் வகைப்படுத்தப்பட்டனர். 30 ஆண்டுகள் கழித்து, அஇஅதிமுக அரசு மசோதா ஒன்றை நிறைவேற்ற, அதனை திமுக அரசு அமல்படுத்தியது. 20% எம்.பி.சி இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்திய அறிவிப்பு
வன்னியர்களின் பிரதிநிதியாகக் கருதப்படும் பாமக, பொதுவாக சமூகத்திற்கு ஆதரவாக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அனைத்துவிதமான கொள்கைகளிலிருந்தும் பயனடைகிறது.
வன்னியர் நினைவிடம் அறிவிப்பு மற்றும் ஆட்சிக்கு வந்த உடனேயே பிரத்யேக 10.5% இட ஒதுக்கீடு வழங்க முந்தைய அதிமுக அரசின் முடிவிற்கு ஒப்புதல் வழங்கியது ஆகியவை திமுகவின் சிறந்த நகர்வுகளாக பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் பாமகவுன் ஒரு புரிதலை ஏற்படுத்த திமுக இவ்வாறு செயல்படுகிறது என்று பலர் நினைக்கின்ற போதும் கூட, திமுக தலைவர் ஒருவர், பாமகவை நடுநிலையாக்க திமுக முயல்கிறது என்று கூறினார். எதிர்க்கட்சி கூட்டணியுடன் பாமக தொடர்ந்தாலும், இந்த அறிவிப்புகள் நூற்றுக்கணக்கான வட கிராமங்களில் திமுக தங்கள் நிலையை மேம்படுத்த உதவும்.
வன்னியர்களிடமும் திமுகவிற்கு செல்வாக்கு இருக்கிறது. தற்போதைய மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 3 அமைச்சர்கள் வன்னியர் பிரிவை சேர்ந்தவர்கள். ஒருவர் கருணாநிதி காலத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறார். துரைமுருகன். மற்றொருவர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்.
இட ஒதுக்கீடு தோல்வி
10.5% உள் ஒதுக்கீடு அஇஅதிமுகவின் தோல்விக்கு வழி வகுத்தது. எம்.பி.சி பிரிவில் இருக்கும், தமிழகத்தின் மற்றொரு சக்தி வாய்ந்த சமூகமான தேவர்களை புண்படுத்தியது. முன்னாள் துணை முதல்வர் பன்னீர் செல்வம், தேர்தலுக்கு முன்பு ஒரு சமூகத்தினரை மட்டும் திருப்திப்படுத்தும் நோக்கில் எடப்பாடி பழனிசாமியால் கொண்டு வரப்பட்ட இந்த முடிவை எதிர்த்து தன்னுடைய கருத்துகளை பதிவு செய்தார். தென் தமிழகத்தில் அஇஅதிமுக பல தொகுதிகளை தேர்தலின் போது இழந்தது. வட தமிழ்நாட்டில் வன்னியர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.