இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குடிமக்களின் அடிப்படைக் கடமைகளை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில், உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வழக்கறிஞர் துர்கா தத் தாக்கல் செய்த மனுவில், குடிமக்கள் நாட்டின் லட்சியங்களை நிலைநிறுத்துவதற்கும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிப்பதற்கும் கடமைப்பட்டுள்ளனர். ஆனால், குடிமக்களின் அடிப்படைக் கடமைகளைச் செய்யாமல் இருப்பது அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அடிப்படை கடமைகள் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு நிலையான நினைவூட்டலாக செயல்பட வேண்டும். அரசியலமைப்பு குறிப்பிட்ட சில அடிப்படை உரிமைகளை வழங்கியிருந்தாலும், குடிமக்கள் ஜனநாயக நடத்தைக்கான சில அடிப்படை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் உரிமைகள் மற்றும் கடமைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை.
சட்ட அதிகாரிகள் உட்பட மக்களால் அடிப்படைக் கடமைகள் வெட்கக்கேடான முறையில் மீறப்பட்டு, பிற குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வழக்குகள் உள்ளன என தெரிவித்திருந்தார்.
அடிப்படை கடமைகள் தொடர்பான விவாதம் அவ்வப்போது பொது மேடையில் நிகழ்வது உண்டு. 2019இல், நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வில் தனது அரசியலமைப்பு தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பு கடமைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அதே நேரத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு இடையிலான வேறுபாட்டை வலியுறுத்தினார்
தொடர்ந்து, துணை குடியரசுத் தலைவர் வெங்கையை நாயுடு, பள்ளி பாடத்திட்டத்தில் அடிப்படை கடமைகளை சேர்க்க வேண்டும். அதேபோல், அடிப்படை கடமை பட்டியலை கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
மேலும் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதியாவது, குடிமக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை நினைவுகூருவதைப் போல், அடிப்படைக் கடமைகளையும் நினைவில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகளின் பங்களிப்பு
இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தின் போது, அரசியலமைப்பின் (42வது திருத்தம்) சட்டம், 1976 மூலம் அரசியலமைப்பின் பகுதி IV-A இல் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டன.
ஆர்டிக்கல் 51(A) 11 அடிப்படைக் கடமைகளை விவரிக்கிறது. இதில், 10 அடிப்படை கடமைகள் 42வது திருத்தத்துடன் வந்தது.
பின்னர், 11 ஆவது அடிப்படை கடமையானது, 2002ல் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 86வது திருத்தம் மூலம் சேர்க்கப்பட்டது.
இந்த கடமைகள் சட்டத்தால் செயல்படுத்தப்படாது. ஆனால், ஏதெனும் வழக்கில் தீர்ப்பளிக்கும் போது நீதிமன்றம் அவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். ரஷ்ய அரசியலமைப்பு அடிப்படை கடமைகள் என்ற கருத்தை கொண்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படைக் கடமைகள்
- அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டு தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்தை மதிக்க வேண்டும்
- தந்திரத்திற்கான நமது தேசியப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த உன்னத இலட்சியங்களைப் போற்றவும் பின்பற்றவும் வேண்டும்
- இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் வேண்டும்
- நாட்டைக் காப்பதுடன், தேவையான போது நாட்டு நலப்பணிகளையும் செய்தல்
- அனைவரும் சாதி,மத,மொழி,இன,எல்லை கடந்த சகோதர மனப்பான்மையை உருவாக்க வேண்டும்.
- நமது கூட்டுக்கலாச்சாரத்தின் பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்
- காடுகள், நதிகள்,ஏரிகள் உள்ளிட்ட இயற்கையும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும்
- அறிவியல்,மனிதாபிமானம்,சீர்திருத்த உணர்வுகளை வளர்க்க வேண்டும்
- வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.
- தனிப்பட்ட அளவிலும் கூட்டுத் செயற்பாட்டிலும் மிகச் சிறந்த நிலையை அடைய முயலுவதன் மூலம் நாட்டின் மேம்பாட்டிற்கு முயற்சிக்க வேண்டும்.
- 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்விக்கான வாய்ப்பை வழங்குதல்.
குழந்தைகளின் கல்வி குறித்த கடைசி துணைப்பிரிவு, (k), அரசியலமைப்பு (86வது திருத்தம்) சட்டத்தால் 2002 இல் சேர்க்கப்பட்டது. அதே திருத்தம் அரசியலமைப்பில் பிரிவு 21A ஐ அறிமுகப்படுத்தியது. அதில், சட்டப்படி, அரசு தீர்மானிக்கும் விதத்தில், ஆறு முதல் பதினான்கு வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil