/indian-express-tamil/media/media_files/2025/04/18/t1bIe4avIDxi8PNnFf07.jpg)
வக்பு சட்டம், 2025-ஐ எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இடைக்காலத் தீர்ப்பை மே 5-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. சட்டத்தைப் பாதுகாத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசு அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, அடுத்த விசாரணை வரை முஸ்லிம் அல்லாதவர்களை வக்பு வாரியங்களில் நியமிக்கவோ அல்லது எந்த வக்பு அமைப்பின் தன்மையையும் மாற்றவோ மாட்டோம் என்று உறுதியளித்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: What are the key issues in the challenge to the new Waqf law
ஏப்ரல் 16 அன்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான நீதிபதிகள் பி.வி. சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சர்ச்சைக்குரிய புதிய சட்டத்தின் செல்லுபடியை எதிர்த்து கிட்டத்தட்ட 65 மனுக்களைக் கொண்ட ஒரு தொகுதிக்கு முன்கூட்டியே விசாரணையை வழங்கியது.
ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் எம்.பி., அசாதுதீன் ஓவைசி, டி.எம்.சி எம்.பி., மஹுவா மொய்த்ரா, ஆர்.ஜே.டி எம்.பி., மனோஜ் குமார் ஜா, சமாஜ்வாதி கட்சி எம்.பி., ஜியா உர் ரஹ்மான், காங்கிரஸ் எம்.பி-க்கள் இம்ரான் மசூத் மற்றும் முகமது ஜாவேத், முன்னாள் எம்.பி. உதித் ராஜ், மௌலானா மஹ்மூத் ஆசாத் மதனி உள்ளிட்டோரும் இந்த மசோதாவிற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனர்.
இரண்டு மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில், நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மத்திய அரசிடம் சில கேள்விகளை எழுப்பியது. அதே நேரத்தில் சட்டத்தில் சில நல்ல அம்சங்கள் இருப்பதாகவும் மனுதாரர்களிடம் தெரிவித்தது.
மனுதாரர்கள் தரப்பில் இருந்து வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நம்பிக்கையின் இன்றியமையாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதிகளில் நாடாளுமன்றம் தலையிட்டதன் மூலம் அரசியலமைப்பின் 26-வது பிரிவை மீறும் வகையில் புதிய சட்டம் அமைந்துள்ளது என்று கூறினார்.
சில முக்கிய பிரச்சனைகள்
புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவில் சில முக்கிய பிரச்சனைகள் இருப்பதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
'பயன்பாடு மூலம் வக்பு': 'பயன்பாடு மூலம் வக்பு' என்ற அம்சம் நீக்கப்படுவதாக கூறப்படுகிறது. முன்னதாக, இந்த அம்சம் மூலம் நீண்ட காலமாக முஸ்லீம் மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நிலம், அவ்வாறு பதிவு செய்யப்படாவிட்டாலும் வக்பு-ஆக கருதப்படலாம்.
ஆனால், புதிய சட்ட திருத்த மசோதா, இந்த அம்சத்தை நீக்குகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், ஏற்கனவே வக்பு என பதிவு செய்யப்பட்ட சொத்துகளை மட்டுமே அது கட்டுப்படுத்துகிறது. இது தவிர சர்ச்சை ஏற்பட்டால் அல்லது அரசுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சொத்து என்றால், அந்த நிலம் வக்பு பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று கூறப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வக்பு என்ற பெயரில் அடிக்கடி நிலம் ஆக்கிரமிப்பு ஏற்படுவதாகவும், அதனை தடுக்க இந்த முறையை நீக்குவது அவசியம் என்றும் மத்திய அரசு வாதிடுகிறது. எவ்வாறாயினும், நீண்ட காலமாக மசூதிகள் அல்லது கல்லறைகளைக் கொண்டிருந்த ஆனால் வக்புகளால் பதிவு செய்யப்படாத பல வக்பு - பயன்பாட்டு சொத்துகளின் நிலை குறித்து இந்த நடவடிக்கை கேள்விகளை எழுப்புகிறது.
அதன் இயல்பிலேயே வக்பு - பயன்பாட்டு நிலங்களை பதிவு செய்வது கடினம் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். அதன்படி, 300 ஆண்டுகளாக வக்பு-ஆக பயன்படுத்தப்பட்ட நிலத்தை ஒருவர் எப்படிப் பதிவு செய்ய முடியும் என்று மத்திய அரசிடம், தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கேள்வி எழுப்பினார்.
"வக்பு பயனர்களைப் பொறுத்தவரை, பதிவு செய்வது மிகவும் கடினமாக இருக்கும். எனவே, அங்கு தெளிவின்மை உள்ளது. அது தவறாக பயன்படுத்தப்படுவதாக உங்களுக்கு ஒரு பார்வை இருக்கலாம். அதே நேரத்தில் வக்பு பயனர்களை பொறுத்தவரை அதில் உண்மையும் உள்ளது" என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறினார்.
வக்பு பயனாளர்கள் என்ற முறை நீதிமன்றங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு கருத்து என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியரின் அதிகாரங்கள்: வக்பு பயன்பாட்டிற்கான நிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாவட்ட ஆட்சியரின் அதிகாரங்களை உள்ளடக்கிய மற்றொரு விதியை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
2025 சட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் தற்போது வக்பு நிலமாகப் பயன்பாட்டில் உள்ள நிலத்தை அரசு நிலம் என அடையாளம் காட்டினால், நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்படும் வரை அது வக்பு நிலமாக இருக்காது. ஒரு முக்கியமான விதியிலிருந்து சட்டத்தின் பிரிவு 3(c) வரை பாயும் இந்த அதிகாரம், வக்பு நிலத்தின் நிலையை நீதிமன்றம் முடிவு செய்வதற்கு முன்பே அதன் நிலையை மாற்றலாம்.
இந்த ஏற்பாடு இன்னும் நிறுத்தப்படவில்லை என்றாலும், வக்புவின் தன்மை அல்லது நிலை மாற்றப்படாது என்று மத்திய அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வக்பு வாரியங்களில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை சேர்ப்பது: வக்பு வாரியங்களில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை அங்கம் வகிக்க அனுமதிக்கும் 2025 சட்டம், அரசியலமைப்பின் 26(பி), 26(சி), மற்றும் 26(டி) ஆகிய பிரிவுகளை மீறுவதாக மனுதாரர்கள் வாதிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது. "இனிமேல், நீங்கள் முஸ்லிம்களை இந்து அறநிலைய வாரியங்களில் அங்கம் வகிக்க அனுமதிப்பீர்கள் என்று சொல்கிறீர்களா? அதை வெளிப்படையாகச் சொல்லுங்கள்" என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கேள்வி எழுப்பினார்.
2025 சட்டத்தில், வக்பு சொத்துகள் தொடர்பான வரம்புச் சட்டத்தின் பொருந்தக் கூடிய தன்மையை அனுமதிக்கும் விதியையும் சிபல் எதிர்த்து வாதாடினார். வரம்புச் சட்டம் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குப் பிறகு, அத்துமீறலுக்கு எதிராக சட்டப்பூர்வ உரிமை கோருவதைத் தடுக்கிறது. "வரம்பு சட்டம் அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் கொண்டுள்ளது" என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.