Faizan Mustafa
What is uniform civil code : இந்திய அரசியல் சாசனத்தை நிறுவியவர்கள் இந்தியாவில் ஒரே மாதிரியான சட்டங்கள் நில வேண்டும் என்பதை கனவாக கொண்டனர். ஆனால் அதனை வடிவமைக்க இதுவரையிலும் ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், கோவா தான் யுனிஃபார்ம் சிவில் கோடினை பின்பற்றும் ஒரு சிறந்த மாநிலத்திற்கான எடுத்துக்காட்டு என்று மேற்கோளும் காட்டியுள்ளது.
யுனிஃபார்ம் சிவில் கோட் (Uniform Civil Code) என்றால் என்ன?
இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான சட்டங்களை பின்பற்ற வழி வகை செய்வது தான் இந்த யுனிஃபார்ம் சிவில் கோட் ஆகும். மத வேறுபாடுகள் ஏதுமின்றி அனைத்து பிரிவினருக்கும் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, மற்றும் தத்தெடுத்தல் என அனைத்திற்கும் ஒரே மாதிரியான சட்டங்களை கொண்டு வருவது தான் யுனிஃபார்ம் சிவில் கோட் எனப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் 44 பிரிவின் படி இந்தியாவில் இருக்கும் அனைத்து குடிமக்களும் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்றுவதை உறுதி செய்கிறது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
இந்திய அரசியல் சாசனத்தின் 44வது பிரிவானது அரசு நெறிமுறை கொள்கைகளில் ஒன்றாகும். ஆர்டிக்கிள் 37ல் குறிப்பிட்டுள்ளபடி இந்த பிரிவானது எந்த நீதிமன்றத்தாலும் அமல் செய்ய முடியாது. ஆனால் இதன் கொள்கைகள் அனைத்தும் நிர்வாக அடிப்படையால் உருவாக்கப்பட்டவை. அடிப்படை உரிமைகளை மட்டுமே சட்டத்தின் படி நீதிமன்றங்கள் அமல்படுத்த முடியும். அரசியல் சாசனம் 44 ”அரசு முயற்சி செய்யும்(state shall endeavour)” என்பதை குறிப்பிடுகிறது. இதர அரசு நெறிமுறை கொள்கை பிரிவுகளில் குறிப்பிட்ட பகுதியில் முயற்சி, குறிப்பிட்ட நடைமுறையின் கீழ் கொள்கைகளை வழிநடத்துதல், மற்றும் அரசின் கடமை என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. அரசியல் சாசன பிரிவு 43-ல் இடம் பெற்றிருக்கும் ”சரியான சட்டத்தின் மூலம் அரசு நடைமுறைப்படுத்தும்” என்ற வாக்கியம் கூட சாசன பிரிவு 44ல் இடம் பெறவில்லை.
அடிப்படை உரிமைகள் அல்லது அரசு நெறிக் கொள்கைகள் எதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது?
அடிப்படை உரிமைகளுக்கு தான் முக்கியத்துவம் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி 3 (அடிப்படை உரிமைகள்) மற்றும் பகுதி 4 (அரசுநெறி கொள்கைகள்) என இரண்டிற்கு இடையேயான சமநிலையில் தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது என்று 1980ம் ஆண்டு நடந்த மினேர்வா மில்ஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஒருவரைக்காட்டிலும் மற்றொருவருக்கு வழங்கப்படும் முன்னுரிமையானது இந்திய அரசியலமைப்பின் நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. 1976ம் ஆண்டு 42வது முறையாக இந்திய அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி சட்டப்பிரிவு 31சி இணைக்கப்பட்டது. ஏதேனும் அரசுநெறி கொள்கைகள் உருவாக்கப்படும் போது, அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்தும் பிரிவு 14 மற்றும் 19 சாசன உட்பிரிவுகளை மீறியதாக யாராலும் எதிர்ப்பு தெரிவிக்க இயலாது.
மேலும் படிக்க : பதவி உயர்வு இட ஒதுக்கீடு விவகாரம்: உச்சநீதிமன்ற ‘கட்டளைப் பேராணை’ என்பது என்ன?
முழுமையான நாட்டுக்கும் பொருந்துகின்ற வகையில் சிவில் சட்டங்கள் இந்தியாவில் இல்லையா?
இந்திய சட்டங்கள் சீரான சிவில் சட்டங்களை சில இடங்களில் பின்பற்றுகின்றன - இந்திய ஒப்பந்தச் சட்டம், சிவில் நடைமுறைக் குறியீடு, பொருட்களின் விற்பனை சட்டம், சொத்து பரிமாற்றச் சட்டம், பார்ட்னர்ஷிப் ஆக்ட், ஆதாரச் சட்டம் போன்றவை அவைகளில் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த சட்டங்களில் மாநிலங்கள் நூற்றுக்கணக்கான திருத்தங்களைச் செய்துள்ளன. இந்த மதச்சார்பற்ற சிவில் சட்டங்களிலும் கூட பன்முகத்தன்மை உள்ளது. சமீபத்தில், பல மாநிலங்கள் சீரான மோட்டார் வாகனச் சட்டம், 2019-த்தை ஏற்க மறுத்துவிட்டது.
அரசியலமைப்பின் வடிவமைப்பாளர்கள் ஒரே சீரான சிவில் சட்டங்கள் வேண்டும் என்று நினைத்திருந்தால், அவர்கள் யூனியன் பட்டியலில் இந்த விஷயத்தை சேர்த்து, தனிப்பட்ட சட்டங்கள் தொடர்பாக பாராளுமன்றத்திற்கு பிரத்தியேக அதிகார வரம்பை வழங்கியிருப்பார்கள். ஆனால் "தனிப்பட்ட சட்டங்கள்" 'கான்கரண்ட்’ பட்டியலில் உள்ளது. கடந்த ஆண்டு, சட்ட ஆணையம் ஒரு சீரான சிவில் கோட் சாத்தியமும் இல்லை அது விரும்ப தக்கதும் இல்லை என்று அறிவித்தது.
ஒரு மதத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் பின்பற்றும் வகையில் எந்த மதத்திலாவது பொதுவான சட்டங்கள் உள்ளதா?
நாட்டின் அனைத்து இந்துக்களும் ஒரே சட்டத்தை பின்பற்றுவதில்லை. இஸ்லாமியர்களும் கிறித்துவர்களுக்கும் இதுவே பொருந்தும். இங்கிலாந்தின் சட்டமரபுகள் மட்டுமின்றி சில இடங்களில் போர்த்துகீசிய மற்றும் ஃப்ரென்ச் மரபுகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, 2019 ஆண்டு வரை ஜம்மு காஷ்மீரில் நடைமுறையில் இருந்த இந்து சட்டங்கள் மத்திய சட்டங்களுடன் ஒத்துப் போகவில்லை. சரியத் சட்டம் 1937 கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஜம்மு காஷ்மீரில் இருந்து வந்தது. தற்போது இது நடைமுறையில் இல்லை. காஷ்மீர் இஸ்லாமியர்கள் இதர இஸ்லாமியர்கள் பின்பற்றும் தனிச்சட்டத்தை பின்பற்றவில்லை. இஸ்லாமியர்கள் திருமணங்களை பதிவு செய்ய வேண்டியதும் கூட இடத்திற்கு இடம் மாறுபடும். ஜம்மு காஷ்மீரில் இது கட்டாயம், மேற்கு வங்கம், பிஹார், அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இது கட்டாயம் இல்லை. இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் வசிக்கும் 200 பழங்குடியின மக்கள் அவர்கள் தங்களின் சொந்த பழக்க வழக்கங்களையே பின்பற்றி வருகிறது. மேகலாயா, மிசோரம், நாகலாந்து மாநிலங்களில் தனி உரிமைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
அரசியல் சாசன பிரிவு 26(பி) இந்தியாவில் இருக்கும் அனைத்து மதங்களின் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாப்பதோடு, மதம் சார்ந்த விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கவும் அங்கிகாரம் அளிக்கிறது. அரசியல் சாசன பிரிவு 29, தனிப்பட்ட கலாச்சாரத்தை கொண்டுள்ள மக்களின் உரிமைகளை பாதுகாக்கிறது. சட்டம் 25 பப்ளிக் ஆர்டர், ஆரோக்கியம், தார்மீகத்தையும் உறுதி செய்கிறது. ஒரு குழுவின் சுதந்திரம் ஆர்ட்டிக்கிள் 26-ல் இடம் பெற்றுள்ளது. யுனிஃபார்ம் சிவில் கோடினை அடிப்படை உரிமைகளில் வைப்பதில் சிக்கல் எழுந்த நிலையில் வாக்கு மூலம் அவை நிறைவேற்றப்பட்டது. சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் இயங்கிய அடிப்படை உரிமைகள் துணைக்குழு, 5:4 என்ற பெரும்பான்மையில், இந்த சிவில் சட்டங்கள் அடிப்படை உரிமைகளின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டது என்று கூறியது.
அரசியலமைப்பு சபையில் இருந்த இஸ்லாமிய உறுப்பினர்களின் கருத்துகள் என்னவாக இருந்தது?
சில உறுப்பினர்கள் முஸ்லீம் தனிநபர் சட்டத்தை மாநில ஒழுங்குமுறையில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முகமது இஸ்மாயில் என்பவர் மூன்று முறை தனிநபர் சட்டத்தை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்குவதற்கு 3 முறை முயற்சி செய்து தோல்வி அடைந்தார். ஒரு மதசார்பற்ற அரசானது மக்களின் தனிப்பட்ட சட்டங்களில் தலையிடக் கூடாது என்று குறிப்பிட்டார். ஹூசைன் இமாம் என்பவர், இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பது சாத்தியமா என்று கேள்வி எழுப்பினார். அம்பேத்காரோ, எந்த ஒரு அரசாங்கமும் இஸ்லாமியர்களை போராட்டத்தில் தள்ளும் வகையில் இந்த விதிகளை பயன்படுத்தக் கூடாது என்று கூறினார். அல்லாடி கிருஷ்ணசாமி யூனியன் சிவில் கோட்டிற்கு ஆதரவாக தன்னுடைய நிலைப்பாட்டினை அறிவித்தார்.
இந்துக்களுக்கான பொது சிவில் சட்டம் குறித்து?
1948ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சபையின் தலைவராக இர்நுதார் ராஜேந்திர பிரசாத். முற்போக்கான கருத்துகளை தனிச்சட்டத்தில் திணிப்பதற்காக அடிப்படை மாற்றங்களை கொண்டு வந்ததிற்காக நேருவை அவர் கடுமையாக எச்சரித்தார். சர்தார் வல்லபாய் படேல், பட்டாபி சித்தராமையா, எம்.ஏ. ஐயங்கார், எம்.எம். மாலவியா மற்றும் கைலாஷ் நாத் கட்ஜூ போன்றோர் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
இந்துக்களுக்கான பொதுசிவில் சட்டம் குறித்த விவாதம் 1949ம் ஆண்டு, டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. அப்போது 28 உறுப்பினர்களில் 23 பேர் இந்த பொது சிவில் சட்டத்தை எதிர்த்தனர். செப்டம்பர் 15, 1951ம் ஆண்டு, ராஜேந்திர பிரசாத் மீண்டும் தன்னுடைய அதிகாரங்களை பயன்படுத்தி இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். இறுதியாக அம்பேத்கார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவானது. பொது சிவில் சட்டத்தை மூன்றாக பிரித்து தனித்தனி சட்டங்களாக உருவாக்க நேரு ஒப்புக் கொள்ள, நிறைய சட்டங்கள் மற்றும் விதிகள் நீர்த்துப் போனது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.