Advertisment

கொரோனா வைரஸ் : தடுப்பூசி தேசியவாதம் என்றால் என்ன?

பணக்கார நாடுகள் ஒரு தனிப்பட்ட மட்டத்தில் என்ன செய்கிறதோ அதை கோவக்ஸ் உலகுக்குச் செய்ய வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
What is vaccine nationalism

நாவல் கொரோனா வைரஸுக்காக தனித்தனியாக உருவாக்கப்பட்டு வரும் 800 மில்லியன் அளவிலான தடுப்பூசிகளை ஒருங்கிணைத்து வழங்குவதற்காக அமெரிக்கா குறைந்தது ஆறு பெரிய மருந்து நிறுவனங்களுடன் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை செய்துள்ளது. ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் இது இரண்டு டோஸ்களுக்கும் மேலானது. இந்த நிறுவனங்கள் ஏதேனும் ஒரு தடுப்பூசியை உருவாக்குவதில் வெற்றி அடைந்தால், ஒப்புக் கொள்ளப்பட்ட பொருட்களை வேறு யாருக்கும் வழங்குவதற்கு முன்பு அமெரிக்காவிற்கு அவர்கள் வழங்க வேண்டும்.

Advertisment

இங்கிலாந்தும் பல நிறுவனங்களுடன் சுமார் 340 மில்லியன் டோஸ்களை பெற ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது ஒவ்வொரு தனி நபருக்கும் 5 டோஸ்களை வழங்குவதற்கு சமம். இதே போன்ற ஏற்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகள் செய்ய துவங்கியுள்ளன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கு இன்னும் காலம் ஆகும். சீனா மற்றும் ரஷ்யாவின் தடுப்பு மருந்துகளை விலக்கிவிட்டு பார்த்தோமானால், அதற்கான சர்வதேச தேவை சரியாக மதிப்பிடப்படவில்லை. ஆனால் தடுப்பூசிகள் விநியோகத்திற்கு முன்பே நாடுகள் முன்பதிவு செய்ய துவங்குகின்றன. சில நாடுகள் பில்லியன் டாலர்களுக்கு மேல், தடுப்பூசியின் முடிவு தெரியாமலேயே, முதலீடு செய்துள்ளனர். இது தடுப்பூசியின் விலை மற்றும் அணுகலுக்கான கேள்விகளை உருவாக்குகிறது. தடுப்பூசி தேசியவாதம் என்று அழைக்கப்படும் ஒரு வார்த்தையையும் இது உருவாக்கியுள்ளது.

தடுப்பூசி தேசியவாதம் ஏன் கவலை அளிக்கிறது?

வெற்றி கிடைக்குமா என்றே தெரியாத தடுப்பூசிகளுக்காக முன்கூட்டியே நடைபெறும் ஒப்பந்தங்கள் என்பது, உலகில் பணம் மற்ற நாடுகளுக்கு மருந்துகள் கிடைப்பதில் சிக்கல்களை உருவாக்குகிறது. இந்த பகுதிகளில் தடுப்பூசிகள் உருவாக்கத்திற்கான திறன் குறைவாகவே உள்ளது. மேலும் ஆரம்ப மாதங்கள் மற்றும் வருடங்களில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் ஒப்பந்தம் மூலமாக பணக்கார நாடுகளுக்கு தான் செல்லும் என்பதால் இந்நாட்டினர் தடுப்பூசிக்காக காத்திருக்க வேண்டும்.

அனைத்து கேண்டிடேட் தடுப்பூசிகளும் வெற்றி பெற்றுவிடாது. வெற்றிபெறும் தடுப்பூசிகளுக்கு அதிக தேவை ஏற்படும். குறிப்பாக்க முன் கூட்டியே ஒப்பந்தங்களின் கையெழுத்திட்ட நாடுகளுக்கு, அதிக அளவில் சப்ளை செய்யப்பட வேண்டும். இதனால் தடுப்பூசியின் விலை அதிகரிக்கும். மற்ற நாடுகளால் வாங்க இயலாத ஒன்றாகவும் மாறும்.

To read this in English

எங்கு யாருக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் தேவையோ அவர்களுக்கு தடுப்பூசிகளையும் மருந்தினையும் அளிப்பது தான் சிறந்த சூழ்நிலை. முன்னணி சுகாதார ஊழியர்கள், அவசரகால கடமைகளில் இருப்பவர்கள், முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உலகெங்கிலும் இதேபோல் பாதிக்கப்படக்கூடிய பிற மக்கள் குழுக்கள் தடுப்பூசிகளை முதலில் அணுக வேண்டும் என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் அது நடப்பதாகத் தெரியவில்லை.

தடுப்பூசிகள் ஏன் பதுக்கப்படுகிறது?

தன்னாட்டு மக்களாலும் உலக சமூகத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு தோற்றத்தை உருவாக்க கொரோனா தடுப்பூசி உலகெங்கிலும் உள்ள நாட்டினரால் உருவாக்கப்பட்டு வருகிறது. நாட்டின் சுகாதாரம் மற்றும் ஆரோக்க்கியத்திற்காக அரசு எவ்வளவு மெனக்கெடுகிறது என்பதை நாட்டினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இவை உருவாக்கப்படுகிறது. அதற்காக அவர்கள் தங்களால் இயன்ற அளவு தடுப்பூசிகளை பதுக்கி வைக்க விரும்புகிறார்கள். சர்வதேச சமூகத்துக்காகவும், தங்கள் சொந்த மக்களுக்காகவும், அவர்கள் தங்கள் அறிவியல் திறனையும் நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்த விரும்புகிறார்கள். சீனாவும் ரஷ்யாவும் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதை நிரூபிக்க தேவையான சோதனைகளை இன்னும் முடிக்காத தடுப்பூசிகளை அங்கீகரிப்பதில் முன்னேறியதற்கான காரணமும் இதுதான். ஒரு தடுப்பூசியை உருவாக்கிய முதல் நபராக தன்னை அறிவிக்க அரசு விரும்புகிறது.

இதற்கு முன்பு இது போன்று ஏதேனும் பெருந்தொற்று காலத்தில் முன்பதிவுகள் நடைபெற்றுள்ளாதா?

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பற்றாக்குறை மற்றும் கிடைக்காமல் போகக்கூடிய நிலை, தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கு முன்பே இருக்கிறது. இது போன்று 2009ம் ஆண்டு ஏற்பட்ட பன்றிக்காய்ச்சலின் போதும் பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை பதுக்கி வைத்தும், முன்பதிவும் செய்தும் கொண்அனர். இதனால் ஆப்பிரிக்காவில் இது அந்நோய்க்கு மருந்து கிடைக்காமல் வெகு நாட்கள் மக்கள் காத்திருந்தனர். இறுதியாக அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் தங்களிடம் இருக்கும் மருந்துகளில் 10%-த்தை தருவதாக ஒப்புக்கொண்டனர். ஆனாலும், அவர்களுக்கு இனி அந்த மருந்துகள் தேவையில்லை என்பதை உணர்ந்த பின்னரே அதனை தர ஒப்புக்கொண்டனர்.

1990களில் எச்.ஐ.வி. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆண்ட்டி-ரெட்ரோவைரல் மருந்துகள் உருவாக்கப்பட்டது. எச்.ஐ.வியால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த மக்களை கொண்டிருந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு இம்மருந்துகள் கிடைக்க வெகு ஆண்டுகள் ஆனது. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் இது குறித்து கூறும் போது, அதிக அளவில் தடுப்பூசிகளை பதுக்கும் நாடுகளுக்கும் கூட இது உபயோகமாக இருக்காது. தொற்றுநோய்க்கு போதுமான தடுப்பூசிகள் இல்லாமல் உலகின் ஒரு பகுதி மக்கள் தொடர்ந்து பாதிப்பிற்கு ஆளானால், வைரஸை வெகுநாட்கள் புழக்கத்தில் வைத்திருக்க அது வழி வகுக்கும். மற்ற நாடுகளும் இதனால் பொருளாதார ரீதியாக பாதிப்பை சந்திக்கும்.

இந்த பிரச்சனையை முறையாக கையாள என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்?

எனக்கு தான் முதலில் என்ற பணக்கார நாடுகளின் அணுகுமுறையை மாற்ற வழிகள் இல்லை என்பது இதன் பொருளல்ல. உலக சுகாதார நிறுவனம், சர்வதேச கூட்டமைப்புடன் இணைந்து ஆக்ட் (ACT - Access to Covid19 Tools) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இது கொரோனா தடுப்பூசியின் மேம்பாடு, உருவாக்கம், மற்றும் அனைவருக்கும் சமமான அளவில் மருந்துகள் கிடைக்க தேவையான அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு கோவாக்ஸ் என்று பெயர்.

பணக்கார நாடுகள் ஒரு தனிப்பட்ட மட்டத்தில் என்ன செய்கிறதோ அதை கோவக்ஸ் உலகுக்குச் செய்ய வேண்டும் - அவற்றின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை துரிதப்படுத்த முன்னணி வேட்பாளர் தடுப்பூசிகளில் பணத்தை முதலீடு செய்துள்ளது. இது மற்றொரு முக்கியமான குறிக்கோளையும் கொண்டுள்ளது - வெற்றிகரமான தடுப்பூசிகள் அனைவருக்கும் சமமாக அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்வது, மலிவு விலையில். பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த பட்சம் 20% மக்களுக்கு ஒரே மாதிரியான விலையில் தடுப்பூசிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம் இதை அடைய முயல்கிறது. தடுப்பூசி அளவுகள் அதிகம் கிடைக்கும்போது, அவை அந்நாடுகளின் மக்கள்தொகை அளவு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையின் அளவிற்கு ஏற்ப நாடுகளுக்கு விநியோகிக்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment