Republic Day 2020 Live updates, Republic Day 2020 Live, Tamil Nadu News in Republic Day 2020 Live
26 ஜனவரி 1950 இந்தியாவின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள். நாடு ஒரு குடியரசாக மாறியது. இந்தியாவின் வரலாற்றுப் பின்னணியில் இந்த ஜனவரி 26, ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.
Advertisment
ஜனவரி 26 இந்தியாவின் குடியரசு தினமாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?
1929-ம் ஆண்டில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் லாகூர் அவையின் தலைவராக ஜவஹர்லால் நேரு இருந்தார். அந்த நேரத்தில் தான், மேலாட்சி அரசு முறை (பிரிட்டிஷ் மன்னர் தொடர்ந்து அரசாங்கத்தின் தலைவராக இருப்பார் - dominion status) பெற்றால் போதும் என்ற இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களை நேருவும்,சுபாஷ் சந்திர போஸும் கடுமையாக எதிர்க்க துணிந்தனர். பிரிட்டிஷ் பிடியிலிருந்து மீண்டு முழு தன்னாட்சி பெற வேண்டுமென்பது இவர்களின் அடிப்படை வாதமாக இருந்தது.
டிசம்பர் 31, 1929 அன்று, நேரு ரவி நதியின் கரையில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றி முழுமையான சுயராஜ்யத்தை கோரினார் (பூர்ணா ஸ்வராஜ்). இந்தியா ஜனவரி 26, 1930 அன்று தனக்கான சுயராஜ்யத்தை அடையும் என்றும் நேரு அறிவித்தார். இந்த ஜனவரி 26ம் தேதி அடுத்த 17 ஆண்டுகளுக்கு பூர்ணா ஸ்வராஜ் தினமாக கொண்டாடப்பட்டது. ஜனவரி 26, 1930 அன்று காங்கிரஸ் பூர்ணா ஸ்வராஜ் தீர்மானத்தை (அல்லது) சுதந்திரப் பிரகடனத்தை நிறைவேற்றியது.
Advertisment
Advertisements
முழு தன்னாட்சி தீர்மானத்தின் உரை
சுதந்திர பிரகடனம்: ஜனவரி 26, 1930 அன்று இந்திய தேசிய காங்கிரஸின் அமர்வில் லாகூரில் உள்ள மக்களால் எடுக்கப்பட்ட தீர்மானம்.
அனைத்து மக்களையும் போல, இந்திய மக்களுக்கும் சுதந்திரம் பெறுவதற்கும், உழைப்பின் பலனை அனுபவிப்பதற்கும், வாழ்க்கையின் தேவைகளை உணர்வதற்கும் மறுக்கமுடியாத உரிமை உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.
எந்தவொரு அரசாங்கமும் மக்களின் உரிமைகளை ஒடுக்குமானால், அடக்குமுறை அரசை மாற்றவோ (அ) அகற்றவோ இந்திய மக்களுக்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.
பிரிட்டிஷ் இந்திய அரசு இந்தியா மக்களின் சுதந்திரத்தை பறித்ததோடு நின்றுவிடாமல், தன்னுடைய சுரண்டலால் இந்தியாவின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீக ரீதியாக பாழடைய செய்து விட்டது. ஆகையால், பிரிட்டிஷ் உடனான தொடர்பை முடித்துக் கொண்டு, முழுமையான சுயராஜ்யத்தை (பூர்ணா ஸ்வராஜ்) அடைய வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும் ஒரு விதியை இனியும் அனுமதிப்பதி மனிதனுக்கும் கடவுளுக்கும் எதிரான குற்றமாக நாங்கள் கருதுகிறோம். எவ்வாறாயினும், நமது சுதந்திரத்தைப் பெறுவதற்கான மிகச் சிறந்த வழி அகிம்சைதான் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
ஆகவே, பிரிட்டிஷ் அரசிற்கு கொடுத்த ஆதரவுகளை திரும்பப் பெறுவதன் மூலம் தயார்படுத்திக் கொள்வோம், வரி செலுத்தாமை உட்பட சட்ட ஒத்துழையாமை இயக்கத்திற்கும் தயாராக இருப்போம்.
இந்த மனிதாபிமானமற்ற ஆட்சியின் முடிவு உறுதி செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, இந்தியாவின் முழு தன்னாட்சியை நிறுவுவதற்காக அவ்வப்போது வெளியிடப்படும் காங்கிரஸ் இயக்கத்தின் அறிவுறுத்தல்களை நிறைவேற்ற நாங்கள் இதன்மூலம் உறுதியுடன் தீர்மானிக்கிறோம்.
முழு தன்னாட்சி தினம் குடியரசு தினமாக மாறுகிறது
1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஆங்கிலேயர்கள் நிர்ணயித்த நாள் ஆகஸ்ட் 15–
ஜப்பானிய படைகள் நேசநாடுகளுடன் (Allied powers) சரணடைந்த நாளின் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒத்ததாக ஆகஸ்ட் 15 , 1947 இந்தியாவின் சுதந்திர தினமாக தேர்வு செய்யப்பட்டது.
வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா இது குறித்து கூறுகையில், "தேசியவாத உணர்வைக் காட்டிலும் ஏகாதிபத்திய பெருமையை எதிரொளிக்கும் நாளில் தான் இந்தியாவின் சுதந்திரம் வந்தது."என்றார்.
பிறகு, 1949-ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, இந்திய அரசியலமைப்பு நிர்ணயமன்றத்தால் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது. தேசிய பெருமையுடன் தொடர்புடைய ஒரு நாளில் இந்த அரசியலைப்பு ஆவணத்தை கொண்டாடுவது அவசியம் என்று பலர் கருதினர்.
ஜனவரி 26, முழு தன்னாட்சிநாள் தான் சிறந்த வழி என்று கருதப்பட்டது. பின்வரும் நாட்களில், இந்த நாள் நாட்டின் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டது.