Advertisment

மாவோயிஸ்டுகள் மீண்டும் படுகொலை தாக்குதல் நடத்தியது ஏன்? சத்தீஸ்கரில் அடிக்கடி நடப்பது ஏன்?

பருவமழைக்கு முந்திய காலகட்டம், ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து, பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகளின் தாக்குதல்கள் அதிகமாகும். இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கியமாகக் கருதப்படும் உள்ளூர் மாவோயிஸ்ட் எதிர்ப்புப் படையை உருவாக்க சத்தீஸ்கரில் தாமதமானது

author-image
WebDesk
New Update
dantewada-attack

ஏப்ரல் 26, 2023 அன்று சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய குண்டுவெடிப்பில் 10 காவலர்கள் மற்றும் அவர்களது ஓட்டுனர் கொல்லப்பட்டதில் வாகனத்தின் சிதைந்த எச்சங்கள். (PTI புகைப்படம்)

Deeptiman Tiwary 

Advertisment

புதன்கிழமை (ஏப்ரல் 26) சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய ஐ.இ.டி (IED) தாக்குதலில் சத்தீஸ்கர் காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் 10 பேர் மற்றும் அவர்களின் வாகனத்தின் சிவிலியன் டிரைவரும் கொல்லப்பட்டனர்.

ஏப்ரல் 2021 இல் சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் பதுங்கியிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இதையும் படியுங்கள்: பேரரசைக் கட்டி எழுப்புவதில் சோழர்கள் எந்த அளவுக்கு வெற்றி பெற்றார்கள்?

இப்போது சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியது ஏன்?

தற்போது தாக்குதல் நடந்துள்ள காலக் கட்டம் என்பது ஒவ்வொரு கோடைகாலத்திலும் பாதுகாப்புப் படைகள் மீது அதிக தாக்குதல்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளின் மாவோயிஸ்ட் மூலோபாயத்துடன் பொருந்துகிறது. சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் தந்திரோபாய எதிர் தாக்குதல் பிரச்சாரங்களை (TCOCs) மேற்கொள்கிறது, இதில் அதன் ராணுவப் பிரிவின் கவனம் பாதுகாப்புப் படைகளுக்கு உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாகும்.

ஜூலை மாதத்தில் பருவமழை தொடங்குவதால், காடுகளில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாகிவிடும் என்பதால், இந்த காலக் கட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டது. “கடந்து செல்ல முடியாத அளவுக்கு நுல்லாக்கள் (ஆற்றுபடுகை) நிரம்பி வழிகின்றன. எல்லா இடங்களிலும் உயரமான புல் மற்றும் புதர்கள் உள்ளன, இது பார்வையை கடினமாக்குகிறது. பருவமழை தொடங்கியவுடன், மாவோயிஸ்டுகளும், பாதுகாப்புப் படையினரும் தங்கள் முகாம்களுக்குத் திரும்புகின்றனர்” என்று பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2010 இல் 76 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் சிந்தல்நார் படுகொலை உட்பட, பாதுகாப்புப் படைகள் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய அனைத்து பெரிய தாக்குதல்களும் TCOC காலத்தில் நடந்துள்ளன.

இந்த ஆண்டு TCOC காலத்தில் IED தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை, பஸ்தாரில் மாவோயிஸ்டுகள் 34 IED தாக்குதல்களை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த எண்ணிக்கை 2022 இல் 28 ஆகவும், 2021 இல் 21 ஆகவும் இருந்தது.

நாட்டின் தற்போதைய இடதுசாரி தீவிரவாதத்தின் (LWE) நிலைமை என்ன?

மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகள் நாட்டில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றன, இதற்கு மாவோயிஸ்டுகளின் கோட்டைகளில் பாதுகாப்புப் படையினரின் வலுவான நடவடிக்கைகள், சாலைகள் மற்றும் குடிமை வசதிகள் முன்பு இருந்ததை விட அதிகமான அளவிற்கு உட்புற கிராமங்கள் அல்லது பகுதிகளை சென்றடைவது மற்றும் இளைஞர்களிடையே மாவோயிஸ்ட் சித்தாந்தம் மீதான பொதுவான அதிருப்தி, அதாவது புதிய தலைமையின் கிளர்ச்சியால் இயக்கம் வலுவிழந்துள்ளது, ஆகியவை காரணங்களாகும்.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, 2010 இல் இருந்து நாட்டில் மாவோயிஸ்ட் வன்முறை 77% குறைந்துள்ளது. இதன் விளைவாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை (பாதுகாப்புப் படைகள் + பொதுமக்கள்) 2010 இல் 1,005 இல் இருந்து 90% குறைந்து 2022 இல் 98 ஆக குறைந்துள்ளது, என உள்துறை அமைச்சகம் (MHA) தெரிவித்துள்ளது.

2000 களின் முற்பகுதியில் 200க்கு மேல் நக்சல் பாதிப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை இப்போது 90 ஆகக் குறைத்துள்ளது, மேலும் வன்முறையின் புவியியல் பரவல் உண்மையில் 45 மாவட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது. ஒரு காலத்தில் மாவோயிஸ்ட்களின் கோட்டையாக இருந்த ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, ஜார்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் நக்சல்கள் நடமாட்டம் பூஜ்ஜியத்துக்கு குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, "வன்முறை நிகழும் பரப்பளவு கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இடதுசாரி தீவிரவாதத்தின் 90% வன்முறை வெறும் 25 மாவட்டங்களில் மட்டுமே நடக்கிறது."

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளின் கடைசி கோட்டையாக கருதப்படும் சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் இடையே உள்ள 55 சதுர கி.மீ வனப்பகுதியான புதா பஹாட் கிளர்ச்சியாளர்களிடமிருந்து விடுவிக்கப்பட்டதாக கடந்த ஆண்டு செய்தியாளர் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். 2024-க்குள் மாவோயிஸ்ட் பிரச்சனையில் இருந்து நாட்டை விடுவிப்பதாக அமித் ஷா சபதம் செய்துள்ளார்.

மேலும் சத்தீஸ்கரின் நிலைமை என்ன?

நாட்டிலேயே மாவோயிஸ்டுகள் தொடர்ந்து குறிப்பிடத்தக்க இருப்பு மற்றும் பெரிய தாக்குதல்களை நடத்தும் திறனைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரே மாநிலம் இதுவாகும்.

பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2018-22), 1,132 “வன்முறை சம்பவங்கள் <இடதுசாரி தீவிரவாதிகளால்> நிகழ்த்தப்பட்டுள்ளன”, இதில் 168 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 335 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் மாவோயிஸ்ட் தொடர்பான வன்முறைகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக சத்தீஸ்கரில் நடந்து உள்ளன, கவலையளிக்கும் வகையில், சத்தீஸ்கரில் 70%-90% இறப்புகள் நடந்துள்ளன.

இந்த காலகட்டத்தில் சத்தீஸ்கரில் வன்முறை அளவு ஏற்ற இறக்கமாக உள்ளது. மாவோயிஸ்டுகள் 2018 இல் 275 தாக்குதல்களை நடத்தினர்; இந்த எண்ணிக்கை 2019 இல் 182 ஆகக் குறைந்தது, ஆனால் 2020 இல் 241 ஆக உயர்ந்தது. பின்னர் அது 2021 இல் 188 ஆகக் குறைந்தது, ஆனால் 2022 இல் 246 ஆக உயர்ந்தது. பிப்ரவரி இறுதி வரை, 37 தாக்குதல்களில் மாவோயிஸ்டுகள் இந்த ஆண்டு ஏழு பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 17 பேரைக் கொன்றுள்ளனர்.

இந்த காலகட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்களின் இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்து குறைந்துள்ளது. 2018 இல் 55 பேர் கொல்லப்பட்டனர்; 2019 இல் 22; 2020 இல் 36; 2021 இல் 45; மற்றும் 2022 இல் வெறும் 10.

இதே காலகட்டத்தில், 400க்கும் மேற்பட்ட திட்டமிட்ட நடவடிக்கைகளில் 328 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் கொன்றனர்.

அப்படியென்றால் சத்தீஸ்கர் ஏன் தொடர்ந்து பிரச்சனையாக இருக்கிறது?

இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான போரில் மாநில காவல்துறையால் மட்டுமே வெற்றி பெற முடியும், மத்திய படைகளால் அல்ல என்பது மாவோயிஸ்ட் எதிர்ப்பு உத்தியில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும். ஏனென்றால், மாநில காவல்துறைக்கு உள்ளூர் அறிவும், மொழியைப் புரிந்துகொள்வதும், உளவுத்துறையை உருவாக்குவதற்கு அவசியமான உள்ளூர் நெட்வொர்க்குகளும் உள்ளன.

ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் மாவோயிஸ்ட் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது உள்ளூர் காவல்துறையின் முக்கியப் பங்கின் மூலம் தான். இந்த மாநிலங்கள் அனைத்தும் மாநிலத்திற்கு உள்ளிருந்து வரவழைக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்டு தங்கள் காவல் படைகளின் சிறப்புப் பிரிவுகளை உருவாக்கி, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து, ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுடன் போரில் வெற்றி பெற்றன.

இந்த செயல்முறை, சத்தீஸ்கரில் தாமதமாக தொடங்கியது என்று பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த காலக் கட்டத்தில், அண்டை மாநிலங்களின் காவல்துறை மாவோயிஸ்டுகளை அவர்களின் மாநிலங்களிலிருந்து சத்தீஸ்கருக்குத் தள்ளியது, இது மாவோயிஸ்ட் செல்வாக்கின் செறிவான மண்டலமாக மாற்றியது.

சத்தீஸ்கர் காவல்துறையின் சிறப்புப் பிரிவான மாவட்ட ரிசர்வ் காவலர்கள் (DRG), உள்ளூர் பழங்குடியின மக்களிடமிருந்து உருவாக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராடுவதற்குப் பயிற்சியளிக்கப்பட்டது, ஒப்பீட்டளவில் சமீபத்தில் இந்தப் படைப் பிரிவு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

"சமீபத்திய அனைத்து தாக்குதல்களிலும், மாவோயிஸ்டுகளால் குறிவைக்கப்பட்டவர்கள் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் என்பது அவர்களின் நடவடிக்கையின் தீவிரத்தைக் குறிக்கிறது. நாங்கள் தொடர்ந்து மாவோயிஸ்டுகளின் கோட்டைகளுக்குள் நுழைந்து உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று சத்தீஸ்கர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பஸ்தாரின் உள்பகுதியில் சாலைகள் இல்லாததால் பாதுகாப்புப் படையினரின் செயல்பாடுகள் தடைபட்டுள்ளன. தெற்கு பஸ்தாரின் உள்பகுதிகளில் நிர்வாகத்தின் குறைந்தபட்ச நடவடிக்கைகள், அப்பகுதியில் மாவோயிஸ்டுகள் தொடர்ந்து செல்வாக்கு செலுத்துவதையும், பயம் மற்றும் நல்லெண்ணத்தின் கலவையின் மூலம் உள்ளூர் ஆதரவை அனுபவிப்பதையும் உறுதி செய்துள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கைகள் என்ன?

பாதுகாப்பு தொடர்பான செலவுகள் (SRE) மூலம் இடதுசாரி தீவிரவாதம் உள்ள மாநிலங்களை ஆதரிப்பதைத் தவிர, மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராட பாதுகாப்புப் படைகளை ஆயத்தப்படுத்துவதில் கவனம் செலுத்துவது; உள்ளூர் போலீஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிறப்பு உள்கட்டமைப்பு திட்டம் (SIS); மற்றும் இடதுசாரி தீவிரவாதம் உள்ள மாவட்டங்களில் சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான சிறப்பு மத்திய உதவி, பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக CRPF இன் பெரிய இருப்பை பராமரித்து வருவது ஆகியவை மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஆகும்.

சத்தீஸ்கரில், தெற்கு பஸ்தாரின் காடுகளின் உட்புறப் பகுதிகளில் புதிய முகாம்களைத் திறப்பதன் மூலம் CRPF தொடர்ந்து அதன் தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும், பஸ்தரில் சுமார் 20 முன்னோக்கி இயக்க தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சி.ஆர்.பி.எஃப் ஒரு பஸ்தாரியா பட்டாலியனை உருவாக்கியது, அதற்கான ஆட்கள் உள்ளூர் மக்களிடமிருந்து எடுக்கப்பட்டனர், அவர்கள் மொழி மற்றும் நிலப்பரப்பை அறிந்தவர்கள் மற்றும் அவர்களால் உளவுப் பிரிவை உருவாக்க முடியும். இந்த பிரிவு இப்போது 400 பேரைக் கொண்டுள்ளது மற்றும் சத்தீஸ்கரில் தொடர்ந்து செயல்பாடுகளை நடத்துகிறது.

உட்புற பகுதிகளில் மொபைல் டவர்களை அமைப்பதற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது, இது உள்ளூர் மக்களை பொதுத் தளத்துடன் இணைக்க உதவும் மற்றும் தொழில்நுட்ப நுண்ணறிவை உருவாக்க உதவுகிறது. 2014 முதல், இடதுசாரி தீவிரவாதம் உள்ள மண்டலங்களில் 2,343 மொபைல் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத எதிர்ப்பு தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் அமலாக்க இயக்குநரகம் ஆகியவற்றை CPI(மாவோயிஸ்ட்) கட்சியினர், தலைவர்கள் மற்றும் அனுதாபிகளின் நிதியை முடக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. இரண்டு மத்திய அமைப்புகளும் பல வழக்குகளை பதிவு செய்து, நூற்றுக்கணக்கான சோதனைகளை நடத்தி, பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இதுவரை பறிமுதல் செய்துள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chhattisgarh Maoist
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment