மதுபாபு பென்ஷன் யோஜனா (எம்பிபிஒய்) திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது. இது, சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான அதன் மாதாந்திர சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டம் ஆகும்.
இந்தத் திட்டத்தில் பயனாளிகளுக்கு இதுவரை ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுவந்தது. தற்போது பணமாக வழங்கப்பட உள்ளது. வங்கி பரிமாற்றத்தில் பயனாளிகள் எதிர்கொள்ளும் சிரத்தையை கவனத்தில் கொண்டு இந்த மாற்றம் வந்துள்ளது.
இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பிரதான், “ஊழலற்ற நிர்வாகத்தின் கூட்டு முயற்சியில் இந்த நடவடிக்கை பின்னோக்கி செல்லும்” எனக் கூறினார். மேலும் இதனை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மதுபாபு பென்ஷன் யோஜனா (MBPY) என்பது மாநிலம் ரொக்கப் பணம் செலுத்தும் ஒரே திட்டமாகும்.
ஒடிசாவின் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்கள்
தற்போது, ஒடிசாவில் தற்போது இரண்டு சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
அதன்படி தேசிய சமூக உதவித் திட்டத்தில் 20.95 லட்சம் முதியோர், விதவை மற்றும் மாற்றுத் திறனாளி பயனாளிகள் உள்ளனர். இந்தத் திட்டத்தில் 60-79 வயது வரையுள்ள நபர்களுக்கு ரூ.200ம், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.500 வழங்குகிறது.
மறுபுறம், நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜேடி அரசாங்கம் 2008 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி MBPY ஐ அறிமுகப்படுத்தியது, இது சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளைச் சேர்ந்த மக்களை சமூகப் பாதுகாப்பு வலையின் கீழ் கொண்டுவரும் முயற்சியாகும்.
இந்தத் திட்டம் ஒடிசா மாநிலத்துக்காக போராட்டத்தில் ஈடுபட்ட மதுசூதன் தாஸின் பெயரால் அழைக்கப்படுகிறது. திட்டத்தில், 28.5 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் உள்ளனர்.
இதில், 60 வயதுக்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள (BPL) பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
அதன்படி, 60 முதல் 79 வயது வரை உள்ளவர்களுக்கு மாதம் 500 ரூபாயும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் 700 ரூபாயும் வழங்கப்படுகிறது.
ரொக்கமாக வழங்க முடிவு
நவீன் பட்நாயக் அரசாங்கம் செப்டம்பர், 2022 இல் MBPY இல் DBT ஐ அறிமுகப்படுத்தியது. தற்போது, மொத்தமுள்ள 28.5 லட்சம் பயனாளிகளில் 15 பேர் ஓய்வூதியத் தொகையை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளில் பெறுகின்றனர், மீதமுள்ளவர்கள் இன்னும் ரொக்கமாக பெறுகின்றனர்.
எவ்வாறாயினும், மாநில அரசு இப்போது DBTயை முற்றிலுமாக நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அனைத்து பயனாளிகளுக்கும் பணமாக வழங்க முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி பஞ்சாயத்து அளவில் முகாம்கள் நடத்தி பண பரிமாற்றம் செய்யப்படும்.
வங்கிகளில் தொழில்நுட்பக் கோளாறு, பயனாளிகள் எதிர்கொள்ளும் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளை அரசாங்கம் கூறியுள்ளது.
MBPY பயனாளிகளுக்கு வங்கி நேரடி பரிவர்த்தனை நிறுத்தப்பட்டாலும், NSAP இன் கீழ் உள்ளவர்கள் தங்கள் ஓய்வூதியத்தை நேரடியாக அவர்களது கணக்குகளில் பெறுவார்கள்.
வங்கி உள்கட்டமைப்பு இல்லாதது ஒரு பிரச்சனை
ஒடிசா கிராமப்புறங்களில் மோசமான வங்கி சேவைகளை கொண்ட மாநிலம் ஆகும். ஒடிசாவின் 6,798 கிராம பஞ்சாயத்துகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் வங்கிக் கிளைகள் இல்லை. இதன் விளைவாக, MBPY பயனாளிகள் தங்கள் ஓய்வூதியத் தொகையைப் பெற நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது.
சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், நபரங்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாரிகான் கிராமத்தைச் சேர்ந்த 70 வயது பெண் ஒருவர் வங்கியில் இருந்து ஓய்வூதியம் பெறுவதற்காக உடைந்த நாற்காலியின் உதவியுடன் வெறுங்காலுடன் பல கிலோமீட்டர்கள் நடந்து செல்வதைக் காண முடிந்தது. இதே போன்ற பிரச்னைகள் மாநிலம் முழுவதும் காணப்படுகின்றன.
ரொக்கப் பணம் செலுத்துதலுக்கு மாறுவது, அத்தகைய மக்கள் தங்கள் பஞ்சாயத்தில் தங்களுடைய விலைமதிப்பற்ற ஓய்வூதியத்தைப் பெற அனுமதிக்கும்.
பணப்பரிமாற்றத்திற்கு எதிரான தர்மேந்திர பிரதானின் வாதம்
இருப்பினும், ஒடிசா அரசாங்கத்தின் முடிவை விமர்சித்த தர்மேந்திர பிரதான், வங்கிகளில் நேரடியாக செலுத்தும் (DBT) திட்டம் இடைத்தரகர்களின் தலையீட்டின் தேவையை குறைத்துள்ளது.
இதனால் ஊழலுக்கான வாய்ப்பு குறைகிறது மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது என்றார்.
ஒடிசாவின் பல்வேறு திட்டங்களின் கீழ் DBTயின் கீழ் 2022-23 ஆம் ஆண்டில் ரூ. 8,135 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நகல் பயனாளிகளை நீக்குவதன் மூலம் ரூ.459 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒடிசாவின் வங்கி உள்கட்டமைப்பு தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக, ஒடிசாவில் உள்ள பல்வேறு வங்கி நிறுவனங்களில் 82,261 வங்கி நிருபர்கள் உள்ளனர் என்று பிரதான் கூறினார்.
ஒடிசாவின் 8491 தபால் நிலையங்கள் மற்றும் பல்வேறு பஞ்சாயத்துகளில் உள்ள 22,000 பொது சேவை மையங்களின் நெட்வொர்க்கின் உதவியைப் பெறவும் அவர் பரிந்துரைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“