அதிக அளவில் பணம் எடுப்பது பணியாளர்களின் ஓய்வூதியத் தொகையைக் குறைக்கும்: ஈ.பி.எஃப்.ஓ. எண்ணிக்கை கூறுவது என்ன?

EPF Retirement Savings: பணியாளர்கள் தங்கள் பணி காலத்தில் அடிக்கடி பணம் எடுப்பதால், ஓய்வுக்குப் பிந்தைய அவர்களது பணம் குறைகிறது. ஈ.பி.எஃப்.ஓ. சமீபத்தில் முன்மொழிந்த மாற்றங்களுக்கு இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. அதன் முழுமையான விவரம் இங்கே தருகிறோம்.

EPF Retirement Savings: பணியாளர்கள் தங்கள் பணி காலத்தில் அடிக்கடி பணம் எடுப்பதால், ஓய்வுக்குப் பிந்தைய அவர்களது பணம் குறைகிறது. ஈ.பி.எஃப்.ஓ. சமீபத்தில் முன்மொழிந்த மாற்றங்களுக்கு இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. அதன் முழுமையான விவரம் இங்கே தருகிறோம்.

author-image
WebDesk
New Update
EPFO 3

ஈ.பி.எஃப்.ஓ உறுப்பினர்களில் 65%-க்கும் அதிகமானோர் மாத ஊதியமாக ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவாகவே பி.எஃப் மற்றும் ஓய்வூதியப் பங்களிப்பைச் செய்கிறார்கள் Photograph: (. File Photo)

EPFO Withdrawals: ஓய்வூதிய நிதி அமைப்பான ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (ஈ.பி.எஃப்.ஓ), குறைந்தபட்சம் 25 சதவீத இருப்பை வைத்திருப்பதற்கான புதிய விதியை அறிமுகப்படுத்திய அதே நேரத்தில், பணம் எடுக்கும் செயல்முறையைத் தாராளமயமாக்கும் திசையில் நகர்ந்து வரும் நிலையில், அதன் எண்ணிக்கையிஅ உற்று நோக்கினால் ஒரு கவலைக்குரிய போக்கு வெளிப்படுகிறது - சுமார் பாதி உறுப்பினர்கள் இறுதித் தீர்வு பெறும் நேரத்தில் ரூ.20,000-க்கும் குறைவாகவே வைத்துள்ளனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

பணி காலத்தில் அவர்கள் அடிக்கடி பணம் எடுப்பதால் இருப்பு குறைவது, அதன் சமீபத்திய சீர்திருத்தத்திற்கு ஓய்வூதிய நிதி அமைப்பு கூறும் காரணங்களில் ஒன்றாகும்.

மேலும், கவலையளிக்கும் தரவு என்னவென்றால் - உறுப்பினர்கள் சுட்டிக்காட்டும் வேலை இல்லாத காலத்தைத் தொடர்ந்து உடனடியாகச் செய்யப்படும் இந்தக் கோரிக்கைகளில் சுமார் 95 சதவீதம் உள்ளன. இருப்பினும், அதிகாரப்பூர்வ தரவுகள், இந்த உறுப்பினர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் மீண்டும் ஈ.பி.எஃப்.ஓ-வில் சேர்வதைக் காட்டுகின்றன.

இது ஓய்வூதிய நிதி அமைப்பின் உறுப்பினர்களின் வேலைவாய்ப்பு அமைப்பையும் சுட்டிக் காட்டுகிறது - இ.பி.எஃப்.ஓ உறுப்பினர்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் மாத ஊதியமாக ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவாகவே பி.எஃப் மற்றும் ஓய்வூதியப் பங்களிப்பைச் செய்கிறார்கள். இது 'கட்டாய' ஈ.பி.எஃப். பங்களிப்புகளுக்கான ஊதிய உச்சவரம்பாகும். சுமார் 35 சதவீதத்தினர் ரூ.15,000-க்கு அதிகமான ஊதியத்திற்காக 'தன்னார்வமாக' ஈ.பி.எஃப். பங்களிப்பைச் செய்கிறார்கள் என்று ஒரு மூத்த அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

இது, 30 கோடிக்கும் அதிகமான கணக்குகள், 7 கோடிக்கும் அதிகமான செயலில் பங்களிக்கும் உறுப்பினர்கள் மற்றும் ரூ.26 லட்சம் கோடிக்கு அதிகமான நிதியைக் கொண்ட ஈ.பி.எஃப்.ஓ-வின் உறுப்பினர் அமைப்பில் குறைந்த ஊதியப் பிரிவில் உள்ள முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் ஆதிக்கத்தை இது குறிக்கிறது என்று மூத்த அதிகாரி மேலும் கூறினார்.

இறுதித் தீர்வு எண்ணிக்கை அதிகப் பண வரம்புகளுக்குப் பார்த்தால் கூட, மேம்பட்ட நிலை இல்லை - 75 சதவீத உறுப்பினர்கள் இறுதித் தீர்வு பெறும் நேரத்தில் ரூ.50,000-க்கும் குறைவாகவும், 87 சதவீத உறுப்பினர்கள் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவாகவும் வைத்துள்ளனர். சாரம்சத்தில், நாட்டில் வேறு எந்த சமூகப் பாதுகாப்பு வலைகளும் இல்லாத நிலையில், அமைப்பு சார்ந்த துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதியாக ஈ.பி.எஃப்.ஓ. இருக்க வேண்டியிருந்தது.

நோய், வீடு அல்லது கல்வி போன்ற காரணங்களுக்காகப் பகுதிப் பணம் எடுத்தல் தவிர, காலத்துக்கு முந்தைய இறுதித் தீர்வுகள் (Premature final settlements) அதிக அளவில் உள்ளன. உதாரணமாக, 2024-25-ல் பெறப்பட்ட மொத்த 52.95 லட்சம் இறுதித் தீர்வுக் கோரிக்கைகளில் (ஓய்வு, பணி நீக்கம் அல்லது இடம்பெயர்வுக்கான கோரிக்கைகள் உட்பட), ஈ.பி.எஃப்.ஓ. தரவுகளின்படி, சுமார் 95 சதவீதம் உறுப்பினர்கள் 2 மாத வேலையின்மைக்குப் பிறகு செய்த முன்கூட்டிய தீர்வுகளாகும். இதில், 46 சதவீதம் அல்லது 24.21 லட்சம் உறுப்பினர்கள் மீண்டும் ஈ.பி.எஃப். உறுப்பினர்களாக ஆவதற்கு நிறுவனங்களில் மீண்டும் சேர்ந்ததாக கண்டறியப்பட்டது.

ஈ.பி.எஃப்.ஓ. பணம் எடுக்கும் போக்கின் முக்கிய அம்சங்கள்

இந்த போக்கு மதிப்பு அடிப்படையிலும் ஒரே மாதிரியாக உள்ளது. ஈ.பி.எஃப். திட்டம், 1952-ன் விதி 69(2)-ன் படி, குறைந்தது 2 மாதங்கள் தொடர்ந்து வேலை இல்லாமல் இருந்தால் முழுமையான பணம் எடுத்தல் அல்லது தீர்வு செய்ய அனுமதிக்கிறது. அதன்படி, மொத்த இறுதித் தீர்வில் சுமார் 66 சதவீதம் வேலைவாய்ப்பின்மைக்காக உறுப்பினர்களால் கோரப்பட்ட முன்கூட்டிய பணம் எடுத்தல் காரணமாக அமைந்துள்ளது.

“மேலும், ஈ.பி.எஃப். உறுப்பினர்கள் இறுதித் தீர்வைப் பெற, வேலையில் தொடர்ந்து இருந்தபோதிலும், வேலையளிப்பவர் அவர்களை வேலையை விட்டு வெளியேறியதாகக் குறிப்பது பல சந்தர்ப்பங்களில் கவனிக்கப்பட்டுள்ளது. பின்னர், அவர்கள் இறுதித் தீர்வைப் பெற உதவும் வகையில், சில மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சேர்ந்ததாகக் காட்டப்படுகிறார்கள். இது அவர்களது இ.பி.எஃப். உறுப்பினர் நிலையில் ஒரு தடையை ஏற்படுத்துகிறது, இது நீண்ட காலத்திற்கு உறுப்பினர்களின் நலனுக்குக் கேடு விளைவிப்பதுடன், இ.பி.எஸ். (ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டம்) தொகையையும் எடுத்தால் அவரது ஓய்வூதிய உரிமைகளையும் இழக்க நேரிடும்” என்று சமீபத்தில் நடந்த இ.பி.எஃப்.ஓ. குழு கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய முன்கூட்டிய இறுதித் தீர்வு மூலம் ஏற்படும் எந்தவொரு தடையும், உறுப்பினர் இறக்கும் பட்சத்தில் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதியையும் இழக்கச் செய்வதுடன், இ.பி.எஃப். தொகையுடன் இ.பி.எஸ். நிதியிலும் கை வைத்தால், ஓய்வு பெறும் நேரத்தில் குறைந்த அளவு ஓய்வூதியத்தையே பெறுவார். ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டம், 1995-ன் கீழ், ஒரு உறுப்பினர் பின்னர் ஓய்வூதியப் பலன்களைப் பெற குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஓய்வூதிய சேவை செய்திருக்க வேண்டும்.

2024-25-ல் தொகை அடிப்படையிலான இறுதித் தீர்வுப் போக்கிலிருந்து, மொத்த உறுப்பினர்களில் சுமார் 22 சதவீதம் பேர் மட்டுமே ரூ.10,000 - 20,000 இறுதித் தீர்வாகப் பெறுகிறார்கள். இது மொத்த தீர்வுத் தொகையில் சுமார் 3 சதவீதம் மட்டுமே. மேலும், மொத்த தீர்வுகளில் சுமார் 50 சதவீதம் ரூ.20,000-க்கும் குறைவாகவே உள்ளன, இது மொத்த தீர்வுத் தொகையில் 4.3 சதவீதம் மட்டுமே. மொத்த இறுதித் தீர்வுகளில் சுமார் 75 சதவீதம் ரூ.50,000-க்கும் குறைவாகவே உள்ளன, இது மொத்த தீர்வு அளவின் 12.27 சதவீதத்தை உள்ளடக்கியது என்று ஈ.பி.எஃப்.ஓ. தரவுகள் காட்டுகின்றன.

பகுதிப் பணம் எடுத்தல் போக்கு அதிகரிப்பு

மறுபுறம், பகுதிப் பணம் எடுத்தல், குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு வேகம் எடுத்துள்ளது. 2017-ல் பகுதிப் பணம் எடுப்பதற்கு ஆவணச் சான்றுகளைச் சமர்ப்பிக்கும் தேவையை நீக்கியது மற்றும் தொற்றுநோய்களின் போது குறிப்பிட்ட வகை கோரிக்கைகளுக்கான விதிமுறைகளை எளிதாக்கியது மற்றும் தானியங்கிச் செயலாக்கம் ஆகியவை மற்றொரு சாதகமான காரணியாகும். இதன் விளைவாக நோய் போன்ற காரணங்களுக்காகப் பணம் எடுக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2024-25-ல் நோய் காரணமாக 3.25 கோடி கோரிக்கைகள் (ரூ.52,633.92 கோடி மதிப்புள்ளது) தீர்வு செய்யப்பட்டன. இது 2023-24-ல் இருந்த 2.10 கோடி கோரிக்கைகளை விட (ரூ.33,696.54 கோடி மதிப்புள்ளது) 55 சதவீதம் அதிகமாகும்.

நோய் காரணமாகப் பணம் எடுக்கும் கோரிக்கைகளின் எண்ணிக்கை 2017-18-ல் 3.13 லட்சம் (ரூ.1,154.56 கோடி) ஆகவும், அதைத் தொடர்ந்து 2018-19-ல் 22.77 லட்சம் கோரிக்கைகள் (ரூ.5,799.75 கோடி) மற்றும் 2019-20-ல் 56.41 லட்சம் கோரிக்கைகள் (ரூ.12,706.34 கோடி) ஆகவும் இருந்தது.

கோவிட் ஆண்டுகளில் (2020-21 மற்றும் 2021-22) நோய் கோரிக்கைகள் முறையே 77.82 லட்சம் (ரூ.14,727.50 கோடி) மற்றும் 1.15 கோடி கோரிக்கைகள் (ரூ.19,204.29 கோடி) ஆக உயர்ந்தன.

நோய் சிகிச்சைக்கு அட்வான்ஸ் எத்தனை முறை எடுக்கலாம் என்பதற்கான கட்டுப்பாடுகள் இல்லாததால், அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப் படியில் 6 மாதங்களுக்கான தொகை உச்சவரம்பு இருந்தபோதிலும், சுமார் 58 சதவீத உறுப்பினர்கள் 2017-2025 காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை நோய் சிகிச்சைக்கான அட்வான்ஸ் பெற்றுள்ளனர். சுமார் 25 சதவீதத்தினர் 4 முறை பெற்றுள்ளனர்.

வீடு கட்டுதல்/வாங்குதல் காரணங்களுக்கான பகுதிப் பணம் எடுத்தல் கோரிக்கைகளும் கடந்த சில ஆண்டுகளாக நிலையான வேகத்தில் அதிகரித்துள்ளது.

2024-25-ல் வீடு/மனை வாங்குதல் அல்லது கட்டுமானம் காரணமாக 15.52 லட்சம் கோரிக்கைகள் (ரூ.23,712.46 கோடி மதிப்புள்ளது) தீர்வு செய்யப்பட்டன. இது 2023-24-ல் இருந்த 11.95 லட்சம் கோரிக்கைகளை விட (ரூ.18,765.32 கோடி மதிப்புள்ளது) அதிகமாகும்.

சிறப்புச் சூழ்நிலைகள் பிரிவின் கீழ் உள்ள பகுதிப் பணம் எடுத்தலிலும் கூர்மையான அதிகரிப்பு காணப்படுகிறது: 2024-25-ல் 6.99 லட்சம் கோரிக்கைகள் (ரூ.1,016.73 கோடி மதிப்புள்ளது). இது 2023-24-ல் இருந்த 3.99 லட்சம் கோரிக்கைகளை விட (ரூ.588.77 கோடி மதிப்புள்ளது) அதிகமாகும். 2024-25-ல் சிறப்புச் சூழ்நிலைகளுக்காகப் பணம் எடுத்தது கடந்த ஏழு ஆண்டுகளில் மிக அதிகமாகும்.

புதிய விதிமுறைகள் மற்றும் சர்ச்சை

ஈ.பி.எஃப்.ஓ. கடந்த வாரம், பணம் எடுக்கும் விதிமுறைகளில் பல மாற்றங்களை அறிவித்தது. பணம் எடுக்கும் வகைகளை 13-லிருந்து மூன்றாக (அத்தியாவசியத் தேவைகள் - நோய், கல்வி, திருமணம்; வீட்டுத் தேவைகள்; மற்றும் சிறப்புச் சூழ்நிலைகள்) குறைத்ததுடன், குறைந்தபட்சம் 25 சதவீத இருப்பை வைத்திருப்பதற்கான விதியையும் அறிமுகப்படுத்தியது.

கல்வி அல்லது நோய்க்கான பணம் எடுக்கும் வரம்புகள் மேலும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளன: திருமணம் மற்றும் கல்விக்காகச் சேர்த்து தற்போதுள்ள 3 பகுதிப் பணம் எடுக்கும் வரம்பிற்கு எதிராக, கல்விக்காக 10 முறையும், திருமணத்திற்காக 5 முறையும் பகுதிப் பணம் எடுக்கலாம்.

நோய் மற்றும் 'சிறப்புச் சூழ்நிலைகள்' பிரிவுகளின் கீழ், ஒவ்வொரு நிதியாண்டிலும் முறையே 3 முறையும், 2 முறையும் பணம் எடுக்க அனுமதிக்கப்படும்.

எவ்வாறாயினும், இந்த முடிவுகள் பல தரப்பிலிருந்தும் விமர்சனங்களுக்கு உள்ளானது. வேலையின்மை காரணமாக முன்கூட்டிய இறுதித் தீர்வு பெறுவதற்கான குறைந்தபட்ச காலத்தை தற்போதுள்ள இரண்டு மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தியதால், குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கு வேலை இழந்த நேரத்தில் நிதி கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர்களும் இ.பி.எஃப். உறுப்பினர்களும் கவலை தெரிவித்தனர்.

“அந்தப் பணம் ஈ.பி.எஃப்.ஓ-வினுடையதா அல்லது உறுப்பினருடையதா? இவர்கள் ஏதோவொரு "இலவசத் திட்டத்தின்" பயனாளிகள் அல்ல, மாறாக தங்கள் சொந்த சேமிப்பை இழக்கும் கடின உழைப்பாளி குடிமக்கள். நடுத்தர வர்க்கத்தின் பணத்துடன் அரசாங்கத்திற்குச் சலுகை அளிக்கப்படுகிறது” என்று அக்டோபர் 15-ம் தேதி எக்ஸ் சமூக ஊடகத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அசதுதீன் ஓவைசி பதிவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தலையிட்டு, மற்ற மூன்று பகுதிப் பணம் எடுக்கும் வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட 75 சதவீதத்தை போலவே, வேலையை விட்டு வெளியேறிய உடனேயே உறுப்பினரின் தொகையில் 75 சதவீதத்தை எடுக்கலாம் என்றும், ஒரு வருடம் வேலையில்லாமல் இருந்தால் முழு 100 சதவீதத் தொகையையும் எடுக்கலாம் என்றும் தெளிவுபடுத்தியது. இதன் சாரம் என்னவென்றால், முன்கூட்டிய இறுதித் தீர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கால மாற்றங்கள் பி.எஃப். பங்களிப்பில் 25 சதவீதத்தை மட்டுமே பாதிக்கின்றன (குறைந்தபட்ச இருப்புத் தேவை) — மீதமுள்ள 75 சதவீதத்தை எல்லா நேரங்களிலும் எடுக்கலாம்.

“சந்தேகத்திற்கு இடமின்றி, நிதித் தேவை இருந்தால்தான் மக்கள் பணத்தை எடுக்கிறார்கள். ஆனால், திரும்பப் பெறும் எண்ணிக்கை அளவு அவர்களது தொகையைப் பாதிக்கிறது, குறிப்பாகப் பிற்கால ஓய்வூதியத்திற்கு. ஒரு உறுப்பினர் முன்கூட்டியே எடுத்தால், பலன் இழப்பு ஏற்படுகிறது, குறிப்பாக ஓய்வூதியத்திற்கு. ஒவ்வொரு வருங்கால வைப்பு நிதி உறுப்பினரும் 30 ஆண்டுகள் பணிபுரிந்தால் ஓய்வூதியதாரராகவும் இருக்க வேண்டும். அப்படியானால், ஏன் அவர்களுக்கு முழு பலன்களும் கிடைக்கக் கூடாது? வயதான மக்கள் தங்கள் சொந்தப் பங்களிப்புகளை நம்பி இருக்க வேண்டிய நிலையைப் பற்றி நாம் சிந்திக்கத் தொடங்க வேண்டும்” என்று அந்த அதிகாரி கூறினார்.

Epfo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: