Advertisment

கோவாக்சின் தடுப்பூசியை WHO இடை நீக்கம் செய்தது ஏன்? என்ன செய்யப்போகிறது பாரத் பயோடெக்?

கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை ஐ.நா ஏஜென்சிகள் மூலம் வழங்குவதை WHO இடைநிறுத்தியுள்ளது, ஒரு ஆய்வின் மூலம் உற்பத்தி தொடர்பான சிக்கல்கள் கண்டறியப்பட்டன. இந்தச் சிக்கல்கள் என்ன, பாரத் பயோடெக் அவற்றை எவ்வாறு எதிர்கொள்கிறது?

author-image
WebDesk
New Update
கோவாக்சின் தடுப்பூசியை WHO இடை நீக்கம் செய்தது ஏன்? என்ன செய்யப்போகிறது பாரத் பயோடெக்?

Kaunain Sheriff M

Advertisment

Explained: Why WHO suspended Covaxin, and how Bharat Biotech is responding: சனிக்கிழமையன்று, உலக சுகாதார அமைப்பு (WHO), ஐநா கொள்முதல் முகமைகள் மூலம் செய்யப்படும் கோவாக்ஸின் விநியோகத்தை நிறுத்திவிட்டதாக உறுதிப்படுத்தியது மற்றும் தடுப்பூசியை ஏற்கனவே பெற்ற நாடுகளுக்கு "தேவையான" நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட இந்த கொரோனா தடுப்பூசிக்கான புதிய உத்தரவு என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

WHO இப்போது ஏன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது?

கொரோனாவுக்கான இந்தியாவின் முதல் உள்நாட்டு தடுப்பூசியான கோவாக்சின், கடந்த ஆண்டு நவம்பரில் WHO இலிருந்து அவசரகால பயன்பாட்டுப் பட்டியலைப் (EUL) பெற்றுள்ளது. இதன் பொருள் இது கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான பாதுகாப்பிற்காக WHO நிர்ணயித்த தரநிலைகளை பூர்த்தி செய்தது. WHO இன் EUL (அவசரகால பயன்பாட்டு அனுமதி) என்பது COVAX முன்முயற்சியின் கீழ் செய்யப்படும் தடுப்பூசி விநியோகத்தில், தடுப்பூசிக்கான ஒரு முன்நிபந்தனையாகும்; COVAX உட்பட ஐநா சார்ந்த நிறுவனங்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை வழங்குவதற்கு பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு இந்த உரிமம் வழி வகுத்தது.

கோவாக்சினுக்கான EUL வழங்கப்பட்ட நேரத்தில், WHO ஆய்வு செய்யவில்லை. பாரத் பயோடெக் நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தி வசதி குறித்த ஆய்வு மார்ச் 14 மற்றும் 22 க்கு இடையில் செய்யப்பட்டது, இதன் அடிப்படையில் ஐ.நா கொள்முதல் முகமைகள் மூலம் கோவாக்சின் தடுப்பூசி வழங்குவதை நிறுத்துவதாகவும், ஏற்கனவே தடுப்பூசியைப் பெற்ற நாடுகளுக்கு "தகுந்த நடவடிக்கைகளை எடுக்க" பரிந்துரைக்கப்படுவதாகவும் WHO அறிவித்துள்ளது.

WHO ஆய்வு என்ன கண்டுபிடித்தது?

கோவாக்சின் பயனுள்ளதாக இருப்பதாகவும், பாதுகாப்புக் கவலை இல்லை என்றும் WHO கூறியுள்ளது. எவ்வாறாயினும், நல்ல உற்பத்தி நடைமுறையில் (ஜிஎம்பி) குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு நிறுவனத்தை WHO கேட்டுக் கொண்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாரத் பயோடெக் நிறுவனத்தை கோவாக்சினுக்கான அதன் உற்பத்தி வசதிகளில் குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்யுமாறு WHO கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த மேம்படுத்தல்கள் என்ன?

கோவாக்சின் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வசதிகள், கொரோனா தடுப்பூசி உற்பத்திக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்படவில்லை. நிறுவனம் இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரிடமிருந்து அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற்றபோது, ​​பாரத் பயோடெக் ஏற்கனவே உள்ள வசதிகளை மீண்டும் உருவாக்கி பயன்படுத்தியது, அவற்றில் சில போலியோ வைரஸ் தடுப்பூசி தயாரிப்பதற்கும், சில தடுப்பூசி வெறிநாய் கடிக்கான தடுப்பூசி தயாரிப்பதற்கும் மற்றும் சில ஜப்பானிய மூளையழற்சி தடுப்பூசி தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டவை.

கொரோனா தடுப்பூசியை தயாரிப்பதற்கு (அதாவது கோவாக்சின் தயாரிக்க) பிரத்யேக வசதிகளை மேம்படுத்துமாறு WHO பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கேட்டு கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

பாரத் பயோடெக் நிறுவனம் அதன் வசதியை கோவாக்சினுக்காக ஏன் மேம்படுத்தவில்லை?

ஒரு குறிப்பிட்ட தடுப்பூசிக்கான வசதியை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நிறுவனம் முழுமையாக மூடப்பட வேண்டும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, நிறுவனம் தற்போது உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, ​​விரிவான பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல்களை மேற்கொள்ள முடியாது.

இரண்டாவதாக, தொற்றுநோய்களின் உச்சக்கட்டத்தின் போது, ​​மேம்படுத்துவதற்குத் தேவையான புதிய உபகரணங்களை வாங்குவதற்கும் வழங்குவதற்கும் 15-18 மாதங்கள் எடுத்திருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. "இவை நீங்கள் அலமாரியில் இருந்து வாங்கக்கூடிய ஒன்றல்ல" என்று ஒரு வட்டாரம் கூறியது.

கோவாக்சினின் ஒரு தொகுதி உற்பத்தியை ஆரம்பம் முதல் இறுதிவரை முடிக்க 120 நாட்கள் ஆகும். இந்த வசதியை மூடுவதும் மேம்படுத்துவதும் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கும். பெரிய மக்கள்தொகைக்கு தடுப்பூசி போட வேண்டிய அவசரம் காரணமாக, மேம்படுத்துவதற்காக மட்டுமே நிறுவனம் அதன் வசதியை மூட முடியாத சூழல் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, நிறுவனம், அபாயங்களைக் கருத்தில் கொண்டப் பிறகு, தடுப்பூசிக்கான பாதுகாப்பான முறையில் மறுபயன்பாட்டு வசதியில் கோவாக்சின் உற்பத்தியைத் தொடங்கத் தேர்வுசெய்தது.

நிறுவனத்தை மூடிவிட்டு இப்போது வசதிகளை மேம்படுத்த முடியுமா?

ஆம், அதைத்தான் செய்யும். வெள்ளிக்கிழமை, நிறுவனம் அதன் உற்பத்தி வசதிகள் முழுவதும் கோவாக்ஸின் உற்பத்தியை தற்காலிகமாக குறைப்பதாக அறிவித்தது, கொள்முதல் நிறுவனங்களுக்கு அதன் விநியோக கடமைகளை முடித்து, தேவை குறைவதை முன்னறிவித்தது. கொரோனா தடுப்பூசிகளின் கொள்முதல் குறைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: பணம் தந்து நலத்திட்ட உதவிகள்  பெறும் ஏழைகள்

பாரத் பயோடெக் நிறுவனம் அங்கலேஷ்வரில் உள்ள இரண்டு வசதிகளையும் மூடத் தொடங்கியுள்ளது; இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட்டில் உள்ள ஒரு வசதி மூடப்பட்டுள்ளது; மேலும், ஒரு வசதியைத் தவிர, ஹைதராபாத்தில் உள்ள அனைத்து வசதிகளும் மூடப்பட்டுள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

நிறுவனம் இப்போது பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல் நடவடிக்கைகளை தொடங்கும்.

மேம்படுத்தல் எவ்வாறு நடைபெறும்?

மேம்படுத்தலை மேற்கொள்வது ஒரு சிக்கலான செயல் என்று ஆதாரங்கள் கூறுகின்றன. "சில உபகரணங்கள் உள்நாட்டு சப்ளையர்களிடமிருந்து பெறப்பட வேண்டும், மேலும் சிலவற்றை இறக்குமதி செய்ய வேண்டும். நீங்கள் வசதியை மாற்றியவுடன், உபகரணங்களை வாங்குவது, நிறுவுவது மற்றும் பயன்படுத்தத் தொடங்குவது போன்றவை எளிமையானது அல்ல,” என்று ஒரு ஆதாரம் கூறியது.

மேம்படுத்தல் முடிந்ததும், வசதியின் வணிகப் பயன்பாட்டிற்கு நிறுவனம் புதிய ஒழுங்குமுறை அனுமதியைப் பெற வேண்டும்.

WHO வின் விரிவான அறிக்கைக்காக நிறுவனம் காத்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன, அதன் பிறகு நிறுவனம் திருத்தம் மற்றும் தடுப்பு நடவடிக்கை (CAPA) செயல்முறையைத் தொடங்கும். இவை உற்பத்தி, ஆவணங்கள், நடைமுறைகள் அல்லது அமைப்புகளில் இணக்கமின்மையை சரிசெய்வதற்கு தேவைப்படும் செயல்கள் அல்லது ஒழுங்குமுறைகளின் தொகுப்பாகும். CAPA பற்றிய அறிக்கை இந்திய கட்டுப்பாட்டாளர் மற்றும் WHO ஆகிய இரண்டிற்கும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

“தணிக்கைகள் மற்றும் ஒப்புதல்கள் ஒழுங்குமுறை பொறிமுறையின் ஒரு பகுதியாகும். நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து மீண்டும் உற்பத்திக்கு திரும்பிச் செல்கின்றன, மேலும் CAPA ஐ நடைமுறைப்படுத்தி செயல்படுத்துகின்றன" என்று ஒரு ஆதாரம் கூறியது.

இது கோவாக்ஸின் விநியோகத்தை எவ்வாறு பாதிக்கிறது?

இது கோவாக்ஸின் விநியோகத்தை பாதிக்காது. முதலாவதாக, கோவாக்சினை வழங்குவதற்கு, GAVI-COVAX வசதி உட்பட, UN ஏஜென்சிகளிடமிருந்து பாரத் பயோடெக் நிறுவனம் எந்த ஆர்டரையும் பெறவில்லை.

இரண்டாவதாக, சுமார் 25 நாடுகளில், கோவாக்சினுக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் (EUA) வழங்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில், நிறுவனம் ஏற்கனவே அதன் விநியோக கடமைகளை நிறைவேற்றியுள்ளது. இந்த நாடுகளில் இருந்து புதிய ஆர்டர்கள் எதுவும் வரவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், நிறுவனம் இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்திற்குத் தேவையான தடுப்பூசிகளையும் சேமித்து வைத்துள்ளது. அதன் அடிப்படையில் மட்டுமே, பிப்ரவரியில் நிறுவனம் கோவாக்சின் உற்பத்தியைக் குறைப்பதாக அறிவித்தது. எவ்வாறாயினும், நிறுவனம் கோவாக்சின் உற்பத்தியை தற்காலிகமாக குறைப்பதாக அறிவித்தாலும், அது ஏற்கனவே ஆன்டிஜென் வங்கியை உருவாக்கியுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. "நாட்டிற்கு தடுப்பூசிகள் தேவைப்பட்டால், அவற்றை 30-40 நாள் காலவரிசையில் குப்பிகளாக மாற்றி தயாரிப்பை வழங்கலாம்" என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பிற நிறுவனங்களை WHO ஆய்வு செய்ததா?

ஆம், EUL பெற்ற பல நிறுவனங்களின் உற்பத்தி வசதிகளை WHO குழுக்கள் ஆய்வு செய்துள்ளன. சில சந்தர்ப்பங்களில், EUL வழங்கப்படுவதற்கு முன்பே ஒரு ஆய்வு நடத்தப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவித்தன. சில உற்பத்தியாளர்களுக்கு, பல சந்தர்ப்பங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Vaccine Explained Covaxin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment