FIFA World Cup Foot Ball 2018: கடந்த ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொழும்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்கின.
லீக் போட்டிகளின் முடிவில், ‘A’ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, ‘B’ பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், ‘C’ பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், ‘D’ பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, E’ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, ‘F’ பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ‘G’ பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து, ‘H’ பிரிவில் இருந்து கொலம்பியா, ஜப்பான் ஆகிய அணிகள் லீக் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின.
‘F’ பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சாம்பியனான ஜெர்மனி மூன்று லீக் ஆட்டங்களில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது லீக் சுற்றின் பேரதிர்ச்சியாக அமைந்தது. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடப்பு சாம்பியன் முதல் சுற்றிலேயே வெளியேறியது. 2006-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இத்தாலி, 2010-ம் ஆண்டு முதல் சுற்றில் வெளியேறியது. 2010-ம் ஆண்டு வென்ற ஸ்பெயின், 2014-ம் ஆண்டு முதல் சுற்றில் வெளியேறியது. 2014-ம் ஆண்டு வென்ற ஜெர்மனி, இந்தாண்டு முதல் சுற்றுடன் வெளியேறியது.
இந்நிலையில், நாக்-அவுட் சுற்று போட்டிகள் இன்று ஜூன் 30 தொடங்குகின்றன. இன்று நடைபெறும் போட்டிகளில் பிரான்ஸ் – அர்ஜெண்டினா, உருகுவே – போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இதில் வெல்லும் அணிகள் முதல் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
பிரான்ஸ் – அர்ஜெண்டினா மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கும், உருகுவே – போர்ச்சுகல் அணிகள் மோதும் போட்டி இரவு 11.30 மணிக்கும் தொடங்குகிறது.
நாக் அவுட் சுற்றுகளில் தோற்கும் அணி, தொடரில் இருந்து வெளியேற நேரிடும். இதனால், ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களின் BP-யை எகிற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும், அர்ஜெண்டினா மற்றும் போர்ச்சுகல் அணிக்கு இன்றே போட்டிகள் நடப்பதால், பரம எதிரிகளான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகிய இருவரது அணியும் காலிறுதிக்கு முன்னேறுமா என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.