Advertisment

ஃபிபா உலகக் கோப்பை 2018: அரையிறுதிக்கு முன்னேறுமா இங்கிலாந்து?

முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணியும், ஸ்வீடன் அணியும் மோதுகின்றன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஃபிபா உலகக் கோப்பை 2018: அரையிறுதிக்கு முன்னேறுமா இங்கிலாந்து?

FIFA World cup 2018

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று (ஜூலை 7) இரவு 7.30 மணிக்கு சமாரா நகரில் நடக்கவிருக்கும் 3-வது கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணியும், ஸ்வீடன் அணியும் மோதுகின்றன.

Advertisment

கணிக்க முடியாத அணிகளில் ஒன்றான ஸ்வீடன், 2-வது சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு 1-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி அளித்தது. கேப்டன் ஆன்ட்ரியாஸ் கிரான்விஸ்ட், மார்கஸ் பெர்க், டோய்வோனென், எமில் போர்ஸ்பெர்க் உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். தாக்குதல் மற்றும் தடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கும் ஸ்வீடன் அணி, 1994-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அரைஇறுதியை எட்டும் முனைப்புடன் உள்ளது.

உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியை ‘An inexperienced squad’ என்றே வல்லுனர்கள் அழைக்கின்றனர். கேப்டன் உட்பட பெரும்பாலான வீரர்கள் அதிக அனுபவமில்லாத வீரர்களாக உள்ளனர். இருப்பினும், இங்கிலாந்து அணி மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுகிறது. ‘இது போன்ற ஒரு அரிய வாய்ப்பு மீண்டும் கிடைக்காமல் போகலாம். ஆதலால் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று இங்கிலாந்து வீரர்களுக்கு அந்த அணியின் பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் அறிவுரை வழங்கியுள்ளார். 6 கோல்களுடன் தங்க ஷூ வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் உள்ள கேப்டன் ஹாரி கேனை அந்த அணி நிர்வாகம் அதிகமாக நம்பி இருக்கிறது. இங்கிலாந்து அணி 1990-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையில் அரைஇறுதிக்கு முன்னேறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் ஒரே மாதிரியான பலத்துடன் மல்லுகட்டுவதால் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான விருந்து காத்திருக்கிறது.

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன், இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் அளித்த பேட்டியில், “இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி தைரியமாகவும், ஆக்ரோஷமாகவும் களமிறங்க வேண்டும். நாங்கள் தொடக்கம் முதலேயே இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம். கடினமான தருணங்கள் ஏற்படலாம். ஏற்றம் இறக்கம் உண்டாகலாம். பெரிய தொடர்களுக்கு செல்லும் போது நாம் தாக்குதலான கால்பந்தாட்டத்தை ஆட வேண்டும். முதலில் முதல் போட்டியை வெல்ல வேண்டும். அடுத்ததாக இரண்டாவது போட்டியை டார்கெட் செய்ய வேண்டும். அப்படியே படிப்படியே சென்று கோப்பையை தட்ட வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

அதன்படி, காலிறுதி வரை முன்னேறியுள்ள இங்கிலாந்து, பலம் வாய்ந்த ஸ்வீடன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா என்பது ரசிகர்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்பாக உள்ளது.

இதைத் தொடர்ந்து, இரவு 11.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், உலகக் கோப்பை தொடரை நடத்தும் ரஷ்யாவும், குரோஷியாவும் மோதுகின்றன.

இந்த உலக கோப்பை தொடரில், தரவரிசையில் பின்தங்கிய அணியான (70-வது இடம்) ரஷ்யாவிடம் இருந்து இப்படியொரு அபாரமான ஆட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. உலகக் கோப்பைக்கு முன், ரஷ்யா தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. கடைசி நான்கு போட்டிகளில் 10 கோல்களை விட்டுக்கொடுத்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்தனர். ஆனால், உலகக் கோப்பையில் அந்த அணியின் ஆட்டம் உண்மையில் அபாரமாக உள்ளது. குறிப்பாக 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வெளியேற்றி மிரட்டியது. இதில் கோல் கீப்பர் இகோர் அகின்பீவ் ஹீரோவாக ஜொலித்தார். உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் விளையாடி வரும் ரஷ்ய அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்நோக்கி உள்ளது. டெனிஸ் செரிஷிவ், ஆர்டெம் டிஸ்யூபா ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்து நட்சத்திர வீரர்களாக திகழ்கிறார்கள்.

லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் (அர்ஜென்டினா, நைஜீரியா, ஐஸ்லாந்துக்கு எதிராக) வெற்றி கண்டு மிரட்டிய லூக்கா மோட்ரிச் தலைமையிலான குரோஷிய அணி 2-வது சுற்றில் பெனால்டி ஷூட்-அவுட்டில் டென்மார்க்கை பதம் பார்த்தது. ஆக்ரோஷ போக்கை கடைபிடிக்கும் குரோஷியா அதே வேகத்தை ரஷ்யாவிடமும் காட்டுவதற்கு தயாராக உள்ளது. இந்த ஆட்டத்தில் குரோஷியா வெற்றி பெற்றால் 1998-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அரைஇறுதியில் அடியெடுத்து வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Fifa Fifa 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment