FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் நேற்று (ஜூன் 22) நடைபெற்ற போட்டிகள் குறித்த ஒரு குயிக் ரீகேப் இங்கே,
FIFA World Cup 2018: நேற்று மொத்தம் மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. மாலை 5.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் 'E' பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் - கோஸ்டா ரிகா அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கியது முதலே பிரேசில் அணியின் நெய்மர், ஜீசஸ், கவுட்டினோ கோஸ்டா ரிகாவின் கோல் போஸ்டை நோக்கி பந்தை கொண்டு சென்றபடியே இருந்தனர். ஏகப்பட்ட முறை, கோல் போஸ்டை நோக்கி அடித்தும், ஒரு கோல் கூட விழவில்லை. கோஸ்டா ரிகா கோல்கீப்பர் கெய்லர் நவாஸ் மிகச் சிறப்பாக என்பதைவிட, நம்ப முடியாத அளவிற்கு சிறப்பாக செயல்பட்டார் என்றே கூற வேண்டும். எண்ணற்ற கோல்களை அவர் தடுத்தார். பிரேசிலின் ஃபார்வேர்ட்ஸ் வீரர், அவரை முற்றுகையிட்டு எவ்வளவோ அடித்தும், ம்ஹூம்... வேலைக்கே ஆகவில்லை.பிரேசில் அணியின் அத்தனை முயற்சிகளையும் முறியடித்தார். இதனால் 90 நிமிடம் வரை பிரேசில் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
90 நிமிடம் முடிந்தபிறகு காயம், ஆட்டம் நேரம் நிறுத்தத்தை கணக்கில் கொண்டு 7 நிமிடம் கூடுதலாக கொடுக்கப்பட்டது. இதில், முதல் நிமிடத்திலேயே பிரேசில் வீரர் ஃபிர்மினோ தலையால் முட்டி பந்தை கேப்ரியல் ஜீசஸிடம் கொடுத்தார். அந்த பந்தை சரியாக ஜீசஸ் காலில் படாமல் நழுவிச் சென்றது. பந்து சென்றதும் அருகில் நின்றிருந்த பிலிப்பே கவுட்டினோ வேகமாக ஓடிவந்து பந்தை கோல் நோக்கி அடித்தார். அந்த பந்து முதன்முறையாக கோல் கீப்பர் நவாஸை ஏமாற்றி அவர் கீழே விழுந்து தடுக்க முயற்சிக்கும் போது, அவரது கால்களுக்கு இடையே புகுந்து சென்று கோலானது. இதனால், அவர் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார். பிரேசில் நிம்மதி பெருமூச்சு விட்டது. பிரேசில் 1-0 என முன்னிலைப் பெற்றது.
அதன் பின், கூடுதல் நேரத்தில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில், பிரேசிலின் டக்ளஸ் வலது பக்கம் கோல் எல்லைக்குள் வைத்து நெய்மரிடம் பந்தை பாஸ் செய்தார். அதை நெய்மர் எளிதாக கோலாக்கினார். இதனால் பிரேசில் 2-0 என வெற்றி பெற்றது. போட்டி முடிந்தவுடன், நெய்மர் மைதானத்திலேயே அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.
அடுத்ததாக, இரவு 8.30 மணிக்கு நடந்த 'D' பிரிவு ஆட்டத்தில் நைஜீரியா மற்றும் ஐஸ்லாந்து அணிகள் மோதின.
போட்டி தொடங்கியதில் இருந்து நைஜீரியா அணி வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை தொடங்கினர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐஸ்லாந்து அணியினரும் சிறப்பாகவே ஆடினார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரு அணிகளின் டிஃபென்ஸ் முதல் பாதியில் சிறப்பாக இருந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 49-வது நிமிடத்தில் நைஜீரியா அணியின் அகமது மூசா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார். இதைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 75-வது நிமிடத்திலும் அகமது மூசா மீண்டும் ஒரு கோல் அடிக்க, 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால் ஐஸ்லாந்து அணியால் இறுதிவரை பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், நைஜீரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அர்ஜென்டினா அணிக்கு கடும் தலைவலி கொடுத்த அணி என்பதால், ஐஸ்லாந்து மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அவர்களது உயரமே அவர்களது பெரிய பிளஸ். சிறப்பான அவர்களது டிஃபென்ஸ்சை உடைத்து, நைஜீரிய அணி வெற்றிப் பெற்றுள்ளது.
இரவு 11.30 மணிக்கு, 'E' பிரிவில் இடம் பிடித்துள்ள செர்பியா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.
போட்டி தொடங்கிய 5-வது நிமிடத்தில் செர்பிய அணியின் அலெக்சாண்டர் மிட்ரோவிக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் செர்பிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அந்த அணியின் கிரானிட் சாகா 52-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்ற சமநிலைக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து, ஆட்டம் முடியும் நிலையில் பரபரப்பான 90-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் செர்டான் ஷாகிரி ஒரு கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து கூடுதலாக அளிக்கப்பட 6 நிமிடங்களில் செர்பிய அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், செர்பிய அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது.