Advertisment

ஃபிபா உலகக் கோப்பை 2018: ஸ்பெயின், டென்மார்க் வெளியேற்றம்!

கிடைத்த பெனால்டி வாய்ப்பை குரோஷியா அணி பயன்படுத்தவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஃபிபா உலகக் கோப்பை 2018: ஸ்பெயின், டென்மார்க் வெளியேற்றம்!

FIFA World cup 2018: Knock matches today

ஆசைதம்பி:

ரஷ்யாவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் பல நட்சத்திர வீரர்களை தன்னகத்தே கொண்ட ஸ்பெயின் அணியும், ரஷ்ய அணியும் மோதின. இப்போட்டியில் ஆரம்பம் முதலே ரஷ்ய வீரர்களின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் சிறப்பாக இருந்தது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் செர்கய் ஒரு கோல் அடித்து ஸ்பெயினுக்கு முன்னிலை கொடுத்தார்,

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ரஷ்யா வீரர் ஏரியம் டியுபா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும்  1-1 என சமநிலை வகித்தன.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஃபார்வேர்ட்ஸ், டிஃபென்ஸ் என இரண்டிலுமே இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. குறிப்பாக ரஷ்யா. இதையடுத்து,கூடுதலாக வழங்கப்பட்ட முதல் 15 நிமிடங்களில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் மறுபடியும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்பொழுது மழை பெய்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியாக, பெனால்டி ஷூட் முறை நடத்தப்பட்டது. ஸ்பெயின் அணியில் இனியஸ்டா, பிக்யூ, ரஷ்ய அணியில் ஸ்மோலோவ், இக்னாஷிவிச் ஆகியோர் தங்களுக்குரிய முதல் இரு வாய்ப்புகளை கோலாக்கினர். ஸ்பெயினின் 3-வது வாய்ப்பில் பந்தை கோக் உதைத்த போது அதை ரஷ்ய கோல் கீப்பர் இகோர் அகின்பீவ் அருமையாக தடுத்தார். பின்னர் தங்களுக்குரிய 3-வது வாய்ப்பை ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோலோவின் அற்புதமாக கோலாக்கினார். 4-வது வாய்ப்பை செர்ஜியோ ரமோஸ் (ஸ்பெயின்), செரிஷிவ் (ரஷ்யா) தவறவிடவில்லை. அப்போது ரஷ்யா 4-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இதைத் தொடர்ந்து 5-வது வாய்ப்பில் ஸ்பெயின் வீரர் இயாகோ ஆஸ்பாஸ் பந்தை அடித்த போது, அதை நோக்கி ரஷிய கோல் கீப்பர் அகின்பீவ் பாய்ந்தார். அப்போது பந்து அவரது காலில் பட்டு வெளியே எகிறியது. அப்போதே ரஷியாவின் வெற்றி உறுதியானதால் கடைசி வாய்ப்பை பயன்படுத்த அவசியமில்லாமல் போனது.

திரிலிங்கான பெனால்டி ஷூட்-அவுட் ஆட்டத்தின் முடிவில் ரஷிய அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்காவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்பெயின் - ரஷ்யா அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் ஆரம்பம் முதல் முடிவு வரை அதிபர் புதின் கண்டுகளித்தார். சிறப்பாக விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, நேற்று இரவு 11.30 நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் குரோஷியா - டென்மார்க் அணிகள் மோதின. இப்போட்டியிலும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை.

ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே டென்மார்க் அணியின் மதியாஸ் ஜோர்ஜென்சன் முதல் கோல் அடித்து தனது அணிக்கு வலு சேர்த்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் குரோஷியா அணி வீரர் மரியோ மண்டூகிக் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலை அடைந்தது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் குரோஷியா - டென்மார்க் அணிகள் 1-1 என சமனிலை வகித்தன.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதலாக வழங்கப்பட்ட முதல் 15 நிமிடங்களில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் மறுபடியும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இறுதியில், கிடைத்த பெனால்டி வாய்ப்பை குரோஷியா அணி பயன்படுத்தவில்லை. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இறுதியாக, பெனால்டி ஷூட் முறை நடத்தப்பட்டது. இதில் டென்மார்க் அடித்த முதல் வாய்ப்பை கோலை குரோஷியா கோல் கீப்பர் தடுத்தார். அடுத்து குரோஷியா அடித்த கோலையும் டென்மார்க் கோல் கீப்பர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, இரண்டாவது வாய்ப்பை டென்மார்க் கோலாக மாற்றியது. இதனால் 1-0 என முன்னிலை வகித்தது. குரோஷியா இரண்டாவது வாய்ப்பை கோலாக மாற்றியதால் 1-1 என சமநிலை அடைந்தது.

டென்மார்க் மூன்றாவது வாய்ப்பை கோலாக மாற்றியதால் 2-1 என முன்னிலை பெற்றது. குரோஷியாவும் அடுத்த வாய்ப்பை கோலாக மாற்றியது. இதனால் இரு அணிகளும் 2-2 என சமநிலை பெற்றன.

டென்மார்க் அணியின் 4வது வாய்ப்பை குரோஷிய அணி கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார்.  குரோஷியா அணியின் 4வது வாய்ப்பையும் கோல் கீப்பர் தடுத்ததால் சமநிலை நீடித்தது. இதைத் தொடர்ந்து, டென்மார்க் அணியின் கடைசி வாய்ப்பை குரோஷியா கீப்பர் தடுத்து விட்டார். இதனால், குரோஷியா அணி தனது கடைசி வாய்ப்பை கோலாக மாற்றி 3-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது.

நேற்று நடைபெற்ற இரு போட்டிகளும் பெனால்டி ஷூட் வரை சென்று ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டுவந்து கட்டிப் போட்டு வைத்தன என்றால் அது மிகையல்ல.

Fifa 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment