Advertisment

FIFA World cup 2018: மஞ்சள் நிறத்தில் வந்த டேஞ்சர்! விரக்தியுடன் வெளியேறிய செனகல்

ஒழுங்கு நடவடிக்கையில் யார் சிறந்த அணி என்பது பார்க்கப்பட்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FIFA World cup 2018: மஞ்சள் நிறத்தில் வந்த டேஞ்சர்! விரக்தியுடன் வெளியேறிய செனகல்

FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் நேற்று (ஜூன் 28) நடைபெற்ற லீக் சுற்றின் கடைசி போட்டிகள் குறித்த அலசல் இங்கே,

Advertisment

நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில், H பிரிவில் இடம்பெற்றுள்ள செனகல் மற்றும் பலம் வாய்ந்த கொலம்பியா அணிகள் மோதின.

இரண்டு போட்டிகளில் ஆடி ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் இரண்டாம் இடத்தில் இருந்த செனகல் அணியும், மூன்றாம் இடத்தில் இருந்த கொலம்பியா அணியும் மோதிய இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அனல் பறந்தது. இதில் வெற்றி பெற்றால்தான் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் கொலம்பியாவும், டிரா செய்தாலே நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் செனகல் அணியும் விளையாடின.

முதல்பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் கொலம்பியாவின் மினா கோல் அடித்தார். இதனால் கொலம்பியா 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் கொலம்பியா அணி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதனால் செனகல் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா வென்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆறு புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறிய கொலம்பியா, நாக் அவுட் சுற்றுக்கு நுழைந்தது. மூன்றாம் இடம் பிடித்த செனகல் அணி வெளியேறியது.

இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் 'H' பிரிவில் இடம்பெற்றிருந்த ஜப்பான் - போலந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் போலந்து 1-0 என வெற்றி பெற்றது. அதேவேளையில் இந்த பிரிவில் இடம்பிடித்துள்ள கொலம்பியா - செனகல் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கொலம்பியா 1-0 என வெற்றி பெற்றது.

இதனால் ஜப்பான், செனகல் அணிகள் ஒரு வெற்றி, ஒரு டிரா மூலம் தலா நான்கு புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தது. இதனால் எந்த அணி அதிக கோல் அடித்தது என்று பார்க்கப்பட்டது. அப்போது இரண்டு அணிகளுமே நான்கு கோல் அடித்து சமநிலையில் இருந்தது. இதனால் எந்த அணி அதிக கோல் வாங்கியது என பார்த்தபோது, இரு அணிகளும் தலா நான்கு கோல்கள் வாங்கியிருந்தன.

இதனால் ஒழுங்கு நடவடிக்கையில் யார் சிறந்த அணி என்பது பார்க்கப்பட்டது. இதில் செனகல் அணி 6 Yellow கார்டு பெற்றிருந்தது. ஆனால் ஜப்பான் 4 Yellow கார்டுதான் பெற்றிருந்தது. இதனடிப்படையில், ஜப்பான் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஜப்பானுக்கு சரிசமமாக விளையாடி இருந்தும், மஞ்சள் அட்டை பெற்றத்தில் உலகக் கோப்பையை விட்டு ஏமாற்றத்துடன் வெளியேறியது செனகல் அணி.

இரவு 11.30 நடைபெற்ற போட்டியில், G பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின.

ரசிகர்களிடையே இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இவ்விரு அணிகளும், தலா 6 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் இருந்தது. இரு அணிகளும் தோல்வியை சந்திக்கவில்லை. இருப்பினும், இரு அணிகளும் ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப் பெற்று விட்டன. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்காததால், ஆட்டம் சமனில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் அட்னான் ஜனுசாஜ் கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து அணி இறுதிவரை கோல் அடிக்காததால், பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று H பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது.

இரவு 11.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், பனாமா மற்றும் துனீசியா அணிகள் மோதின.

G பிரிவில் உள்ள இவ்விரு அணிகளும், கடைசி இரு இடத்தில் இருந்தன. வெற்றி, தோல்வியால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஏற்கனவே இரு அணிகளும் தொடரை விட்டு வெளியேறிவிட்டன. இருப்பினும், வெற்றியுடன் நாடு திரும்ப இரு அணிகளும் முயற்சி மேற்கொண்டன.

முதல் பாதிநேர ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் துனீசியா அணியின் யாசின் மெரையா, தவறுதலாக எதிர் அணிக்கு சேம் சைட் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் பனாமா அணி 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் துனீசியா வீரர் பென் யூசப் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் 66-வது நிமிடத்தில் துனீசியா வீரர் வஹ்பி காஸ்ரி கோல் அடித்தார். இதனால் துனீசியா 2-1 என்ற முன்னிலை பெற்றது.

அதன்பின் இறுதிவரை இரு அணியும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால், துனீசியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கிய துனீசியா அணி, H பிரிவு புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது.

இந்த போட்டியோடு, உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று முடிவடைந்தது.

லீக் போட்டிகளின் முடிவில், ‘A’ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, ‘B’ பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், ‘C’ பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், ‘D’ பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, E’ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, ‘F’ பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ‘G’ பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து, ‘H’ பிரிவில் இருந்து கொலம்பியா, ஜப்பான் ஆகிய அணிகள் லீக் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதன்மூலம் முன்னாள் உலக சாம்பியன்களான பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய ஆறு அணிகள் இந்த முறை நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த உலகக்கோப்பையில் ‘F’ பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சாம்பியனான ஜெர்மனி மூன்று லீக் ஆட்டங்களில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது லீக் சுற்றின் பேரதிர்ச்சியாக அமைந்தது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடப்பு சாம்பியன் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. 2006-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இத்தாலி, 2010-ம் ஆண்டு முதல் சுற்றில் வெளியேறியது. 2010-ம் ஆண்டு வென்ற ஸ்பெயின், 2014-ம் ஆண்டு முதல் சுற்றில் வெளியேறியது. 2014-ம் ஆண்டு வென்ற ஜெர்மனி, இந்தாண்டு முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. முன்னதாக 1998-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ், 2002-ம் ஆண்டு முதல் சுற்றில் வெளியேறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாக்-அவுட் சுற்று போட்டிகள் நாளை(ஜூன் 30) தொடங்குகின்றன. நாளை நடைபெறும் போட்டிகளில் பிரான்ஸ் - அர்ஜெண்டினா, உருகுவே - போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இதில் வெல்லும் அணிகள் முதல் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

Fifa 2018 Senegal Foot Ball Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment