ஆசைத் தம்பி
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது.
இன்று மாலை 05.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், சுவீடன் மற்றும் தென் கொரிய அணிகள் மோதுகின்றன.
கடந்த 2010 மற்றும் 2014 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத சுவீடன் அணி, நடப்பு உலகக் கோப்பையில் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பின்றி களமிறங்குகிறது. இருப்பினும், கடந்தாண்டு (2017) நடைபெற்ற போட்டிகளில் சுவீடன் அணி சில பெரிய அணிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. போர்ச்சுகல், பிரான்ஸ், இத்தாலி என பலம் வாய்ந்த அணிகளை கடந்தாண்டு வீழ்த்தி இருந்தது சுவீடன். இதனால், நிச்சயம் உலகக் கோப்பையில் மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி அளிப்பார்கள் என அந்நாட்டு ரசிகர்கள் நம்புகின்றனர்.
இரவு 08.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், பெல்ஜியம் அணியும், பனாமா அணியும் மோதுகின்றன.
கால்பந்து தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் 13-வது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. இதில் 1986ம் ஆண்டு உலகக் கோப்பையில் 4-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாகும். அரை இறுதியில் அர்ஜென்டினாவிடம் 0-2 என்ற கணக்கில் தோற்றதால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.
இதனால், 32 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதியில் நுழைவதை இலக்காக கொண்டுள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் இருந்து முதல் அணியாக தகுதி பெற்ற பெல்ஜியம் அணியில் ஈடன் ஹசார்ட், கெவின் புருனி, ரோமேலு லூகாஷ்போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.
இரவு 11.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், துனீசியா அணியும், இங்கிலாந்தும் மோதுகின்றன.
உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியை ‘An inexperienced squad’ என்றே வல்லுனர்கள் அழைக்கின்றனர். கேப்டன் உட்பட பெரும்பாலான வீரர்கள் அதிக அனுபவமில்லாத வீரர்களாக உள்ளனர். இருப்பினும், ஏற்கனவே உலகக் கோப்பை தகுதி சுற்றில் அணியை வழிநடத்திய அனுபவம், 24 வயதான கேப்டன் ஹேரிக்கு உள்ளது. ஹேரி கேன் இதுவரை, 23 ஆட்டங்களில் விளையாடி 12 கோல்கள் அடித்துள்ளார்.
“இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி தைரியமாகவும், ஆக்ரோஷமாகவும் களமிறங்க வேண்டும். நாங்கள் தொடக்கம் முதலேயே இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம். கடினமான தருணங்கள் ஏற்படலாம். ஏற்றம் இறக்கம் உண்டாகலாம். பெரிய தொடர்களுக்கு செல்லும் போது நாம் தாக்குதலான கால்பந்தாட்டத்தை ஆட வேண்டும். முதலில் முதல் போட்டியை வெல்ல வேண்டும். அடுத்ததாக இரண்டாவது போட்டியை டார்கெட் செய்ய வேண்டும். அப்படியே படிப்படியே சென்று கோப்பையை தட்ட வேண்டும்” என்று கேப்டன் ஹேரி தெரிவித்துள்ளார்.