உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 2018 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை கோலகலமாக ரஷ்யாவில் தொடங்க உள்ளது. 32 நாடுகள் பங்கு கொள்ளும் இந்த கால்பந்துத் திருவிழாவின் தொடக்க விழா நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்க இருக்கின்றது. இரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புட்டின் ஃபிபா காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்ற உள்ளார். இந்த ஃபிபா கோப்பைக்கான முதல் போட்டி ரஷ்யாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் மத்தியில் நடைபெற உள்ளது.
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளைக் காண உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். சென்ற முறை ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்றது. அடுத்த உலகக் கோப்பைப் போட்டி, கத்தார் நாட்டில் நடைபெற இருக்கின்றது. ரஷ்யாவில் கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் கால்பந்து விளையாட்டு கவுன்சில்கள் கூடியிருக்கும் தருணத்தில் 68வது ஃபிபா காங்கிரஸ் மாநாடும் இன்று நடைபெற்றது இதில் 2026ம் ஆண்டிற்கான உலக கோப்பை கால்பந்து போட்டியினை எந்த நாடு வழங்க இருக்கின்றது என்பதை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பும் நடைபெற்றது.
இறுதிப் பட்டியலில் நான்கு நாடுகளின் கால்பந்து அசோசியசன் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது. கனடா சாக்கர் அசோசியேசன், மெக்சிகன் ஃபுட்பால் அசோசியேசன், யுனைடட் ஸ்டேட்ஸ் சாக்கர் ஃபெடரேஷன், மொராக்கன் ஃபுட்பால் அசோசியேசன் ஆகிய நாடுகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுகின்றது, 2026ற்கான உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியினை யார் தொகுத்து வழங்கப் போகின்றார்கள் என்பதை ஃபிபா உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
மொரோக்கோவினை வெளியேற்றிவிட்டு, வட அமெரிக்க நாடுகளான கனடா, மெக்சிகோ, மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஒருங்கிணைந்து 2026ம் ஆண்டிற்கான உலக கோப்பை கால்பந்து போட்டியினை தொகுத்து வழங்கப் போகின்றது.